RSS

‘Black lifes matter’ – கவிதைகளுக்கான அழைப்பு

இனிய அவுஸ்திரேலியத் தமிழ் கவிஞர்களே!

பல்கலாசார நாடான இங்கு நாம் நலமே இருக்கிறோம். வளமோடும் பாதுகாப்போடும் கூடவே,

எனினும் உலகம் முழுவதிலும் நிறம், இனம், மதம், மொழி, தேசம் என்று பல பல காரணங்களுக்காக நாட்டில் அநீதிகள் நடந்த வண்ணமே உள்ணன. ஈழ நாட்டில் சிறுபாண்மை இனத்துக்கெதிராகவும் அவுஸ்திரேலியாவில் இந் நாட்டு பழங்குடி மக்களுக்கெதிராகவும் நடந்து கொண்டிருக்கும் மனிதாபிமானமற்ற கொலைகளும் வன்முறைகளும் அற்ப காரனங்களுக்கான உயிர் பறிப்புகளும் இறப்புகளும்  நாம் ஒரு நாகரிகமான உலகத்தில் தான் வாழ்கிறோமா என்ற சிந்தனையை ஏற்படுத்தி வருகிறது.

அண்மையில் அமெரிக்காவில் கறுப்பினத்தவர் ஒருவருடய கொலை – அதுவும் வெள்ளையரான பாதுகாப்பு உத்தியோகத்தர் ஒருவரால் நிகழ்த்தப்பட்டதென்பது உலகம் பூராகவும் பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

 

cnn

அது உலகம் பூராவுக்குமான ஒடுக்கப்பட்டவர்களுக்கான குரலாக; கொரானா கட்டுப்பாடுகளை மீறி எதிரொலித்துக் கொண்டிருக்கிறது.

அக் கறுப்பின மனிதர் George Floyd இனை விழுத்தி கழுத்தில் அதிக அழுத்தம் கொடுத்து கொன்ற வீடியோ மிகப்பெரிய அதிர்வலைகளை உலகமெங்கும் கொடுக்கிறது. அதே நேரம் ‘Black lifes matter’ போராட்டத்தின் போது ஒரு கருப்பினத்தவர் காயப்பட்ட வெள்ளை இனத்தார் ஒருவரை தூக்கிச் செல்லும் காட்சி இரு கறுப்பு / வெள்ளை இனத்தாரிடமும் இருக்கிற சிந்தனையின் வேறுபாட்டை சுட்டிக்காட்டும் விதமாக உலகமெங்கும் பரவி வருகிறது.

அதே நேரம் இந்தப் போராட்டத்தின் போது வெள்ளை இன பொலிஸ் ஒருவரின் முன்னால் ஒரு இளம் கறுப்பினப் பெண் அழுவதும் அவளை அணைத்து அப் பொலிஸ் அதிகாரி ஆறுதல் சொல்லும் வீடியோ காட்சியும் அனைவர் மனதையும் உருக்கும் வண்ணம் அமைந்திருக்கிறது.

பொலிசோடு அழும் காட்சி

இவை எல்லாம் மீடியாக்களின் வலிமையையும் மக்கள் போராட்டத்தின் வீரியத்தையும் யாரும் தவிர்க்க முடியாதபடி நம் வீட்டு வரவேற்பறைக்குள்ளே வருகின்றன.

நாம் நம் சமூக கடமைகளை செய்யவேண்டிய நேரமிது. சமூக நீதிக்காக குரல் கொடுக்க சக மனிதனாக சக மனிதனுக்கு நடக்கும் அநீதிக்கெதிராக குறைந்த பட்சம் குறைந்த பட்சம் ஒரு கவிதையாவது நாம் தர வேண்டாமா?

CamScanner 06-17-2020 10.29.57

உலகம் முழுக்க பேனாக்களும் இலத்திரனியல் ஊடகங்களும் நீதிக்கான குரலைக் கொடுத்துக் கொண்டிருக்கும் வேளையில் உங்கள் பேனாக்களும் அவற்றுக்காகக் கொஞ்சம் உயிர்க்கட்டுமே!

இம்மாத இறுதிக்கிடையில் ( 30.6.2020) உங்களுக்குரிய தனிமனித சுதந்திரத்தோடு உங்கள் கவிதைகளைத் தாருங்கள்.

கவிதைகளை uyarthinai@gmail.com என்றமின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். அடுத்த மாத முதற் கிழமையில் அவை கிடைக்கப் பெற்ற ஒழுங்கில் பிரசுரமாகும்.

மிக்க நன்றி.

தமிழால் இணைந்திருப்போம்.

 
Leave a comment

Posted by on 17/06/2020 in Uncategorized

 

கொரோனா வைரஸ் குறித்த கவிதைகள்

    1. கொரோனா

    கவிஞர். எ.இரவிச் சந்திரன், பிறிஸ்பேன். ( 15.03.2020 )

உலகத்தையே நடுங்க வைக்குது கொரோனா

உடைத்தெல்லாத் தடையும் தாண்டி வரானாம்

கலகத்தையே காணுது பார் அங்காடி

காணோம்’அந்தக் காகிதமே’ எங்கேடி

விலகியோடு எங்கும் கண்டால் தும்மலே

விபரீதம் என்ன ஆகுமோ தெரியல

நிலையில்லாத வாழ்க்கை என்று உணர்த்துதே

நிதமும் வாழு அன்பு ஒன்றே உயர்ந்ததே.

  கவிஞர். எ. இரவிச் சந்திரன், பிறிஸ்பேன்.

  15.03.2020

………………………………………………

 

2. கொல்லுங் கொரோனா

                கவிஞர்.த. நந்தி வர்மன், ( 23.3.2020.)

கிருமி கொரோனா எம்மைத் தாக்கக்

கிலிதான் பிடித்து வாழ்கின்றோம்

இருமல் வந்து இறக்கும் நோயால்

இதயம் கலங்கி நிற்கின்றோம்

செருமல் கேட்டால் கூட நாங்கள்

செத்தோம் என்றே நினைக்கின்றோம்

வருமோ வருமோ என்றே பயந்து

வாழ்வை இழந்து நிற்கின்றோம். (1)

 

எதனால் இந்த நிலைமை எமக்கு

என்றே எண்ணிப் பார்த்தோமா?

முதலில் அதனை நினைத்துப் பார்த்து

முழுதாய் வாழ முனைவோமா?

இதயந் தன்னில் அதனை ஏற்று

இனிதாய் வாழ நினைப்போமா?

அதனை இல்லை என்றே மறுத்து

அவனி முழுதும் அழிப்போமா? (2)

 

மனித நேயங் கொண்டு வாழ

மறுத்து பகையை வளர்த்தோம் நாம்!

புனிதர் போல் மதத்தைச் சொல்லி

புவியில் கொலைகள் செய்தோம் நாம்!

இனிதாம் உலகில் இயற்கைப் பொருளை

எமதே என்றே அழித்தோம் நாம்!

மனதில் பொறாமை கோபம் ஆசை

மறுத்து வாழ மறந்தோம் நாம்! (3)

 

இறைவன் தந்த இந்த உலகில்

இயல்பை மாற்ற நினைத்தோம் நாம்!

குறைகள் வளர்ந்து குணங்கள் இழந்து

கொள்கை இன்றி வாழ்ந்தோம் நாம்!

துறைகள் தோறும் வேட்கையாலே

முறைகள் மாற்றத் துணிந்தோம் நாம்!

இறைவன் கோபம் கொண்டால் எல்லாம்

பொடிதான் என்றே மறந்தோம் நாம்!. (4)

 

துன்பந் தொலைக்கும் வழியே இன்றி

துவண்டு நிற்கும் மனிதர்காள்!

முன்னர் வாழ்ந்த வாழ்வில் மாற்றம்

முடிவாய் காண முயல்வீரோ?

இன்பவேட்கை பகைமை வளர்த்து

இயற்கை அழித்து வாழ்வீரோ?

அன்பை வளர்த்து ஆசை அறுத்து

அகிலங் காத்து வாழ்வீரோ? (5)

கவிஞர்.த. நந்தி வர்மன்,

23.3.2020.

…………………………………………………………

  3. கவிஞர்: மது.எமில் ( 30.3.2020.)

அது இங்கே வந்தது

எது எங்கே போனது

இது இதுதான்…

 

யாருக்கும் காட்ட முடியவில்லை

யாராலும் தொட முடியவில்லை

யாமார்க்கும் குடியல்லோம் என்ற

மனிதனுக்கு யமனாகி வந்ததன்றோ?

 

கைகளால் உழைத்தார்

சிந்திய வியர்வையை

கைகளால் துடைத்தார்

கையெடுத்துக் கும்பிட்டு

கைகளால் பரிமாரினார்

 

என் கையே எனக்குதவி

என்றிருந்த நாலை மறந்து…

தன் கைநீட்டி நின்றார்

விஞ்ஞானத்திடம்…

 

இன்று கைகளைக் கழுவுகின்றார்

தாம் செய்த தவறை உணர்ந்தவராய்…

* இதுவும் கடந்து போகும்

 

இனிவரும் தலைமுரையும்

புதுயுகம் படைக்கும்

அங்கே கர்வம்

கண்மூடிக் கொள்ளும்.

கவிஞர். மது. எமில் 

30.3.2020.

…………………………………….

                      4. அவுஸ்திரேலியாவின் நிலை

                      கவிஞர்.ஆறு.குமாரசெல்வம் ( 22.4.2020.)

தீயில் கொல்வதும் – கொரோனா

நோயில் கொல்வதும்

தெய்வத்தின் செயலோ?

 

தேதியாய் தேய்ந்து

தேனடையாய் காய்ந்தோரை

தீய்ப்பதும் மாய்ப்பதும்

முறையோ?

 

இறைவா என்றே

இடைவிடாது நின்றே

இசைத்தார் நன்றே ஆயினும்

 

நோயும் மென்றே

நொடியில் தின்றே

நோகடிக்குது கொன்றே!

 

உலகின் நிலை

 

முதுமையைப் பாரமென்பார்

புதுமையைப் பாரடா பாரிலே

கதையைப் பொய்யாக்குவோம்

கரோனா கிருமியை இல்லாதாக்குவோம்!

 

கட்டி அணைப்பதும் இதழை

ஒட்டி இழுப்பதும்

தட்டிப்பறிக்கும் உயிரை

தவிர்ப்போம் காப்போம் உயிர்ப்பயிரை!

 

அளவுக்கு மிஞ்சினால்

அமிர்தமும் நஞ்சு

அதை மறக்கும் போது தான்

அதிகம் துடிக்கிறது நெஞ்சு

 

ஆளைக் கொல்லுதாம் கிருமி மனம்

அவதிக்குள்ளாகுது பொருமி

வேளைக்குப் பலரைக் கொன்று

வேட்கை தணியுமோ தின்று?

 

மனித சதியோ? அன்றிது

மகேசன் இட்ட விதியோ?

புனிதம் போற்றும் புவியெங்கும்

மனிதர் நோயால் மாய்வது முறையோ?

 

ஓரணியில் உலகோ ரெல்லாம்

ஒன்றிணைந்தால் வெல்லலாம்

பேரணியைத் தவிர்த்து நின்று நோயற்ற

பெருவாழ்வை நாம் வாழலாம்!

 

வாழும்வரை நல்லவராய் நின்று

வாழும் மனிதகுணம் உள்ளவராய்

நாளும் நன்மை செய்திடுவோம்

நற்கதி நாமும் எய்திடுவோம்.

கவிஞர். ஆறு.குமாரசெல்வம்

22.4.2020.

………………………………………..

5. பாமதி. சோமசேகரம் ( 25.4.2020.)

தன் கண்களாலே காணமுடியாத

ஒரு கொலையாளியிடமிருந்து

எப்படித் தன்னைக் காப்பாற்றிக் கொள்வது?

 

ஒருமனிதன் நீண்ட நேரம் அமர்ந்து

சிந்தித்துக் கொண்டிருந்தான்.

 

அவசரமாக வீதியில் இறங்கி நடந்தான்.

தன்னைக் கடந்து செல்லும் ஒவ்வொருவரையும்

முறைத்துப் பார்த்தான்.

தன் மூக்கை மூடிக் கொண்டே

வீட்டுக்கு ஓடினான்.

வீட்டின் கதவுகளை இறுகச் சாத்திக் கொண்டான்.

யன்னல்களை இழுத்துப் பூட்டிக் கொண்டான்

அறையில் நிறைந்திருக்கும் காற்றை

கைகளால் துளாவினான்.

நீ எங்கே இருக்கிறாய்? பேசு! என்று

கோபமாய் சத்தமிட்டான்.

தன் கண்ணாடில் தன் விம்மத்தைச்

சந்தேகத்துடன் பார்த்தான்.

தன் கண்களை விரித்து

தன் கண்ணுக்குள்ளே பார்த்தான்.

 

சாடையாக இருமினான்.

தன் நெஞ்சைத் தொட்டுப் பார்த்தான்.

மறுபடியும் இருமினான்.

நாசங்கெட்ட சனியனே நீ

எனக்குள் தானா இருக்கிறாய் என்றான்.

இதோ உன்னைக் கொல்கிறேன் பார்

என்று ஆவேசமாய் கத்தினான்.

அறையின் பலகணிக் கதவைத் திறந்தான்.

சுவர் விளிம்பில் ஏறி நின்றான்

செத்து ஒழி சனியனே என்றபடி

தரை நோக்கி பறந்தான்.

 

யார் இப்போது வைரஸ்?

மனிதனா.. கண்ணுக்குத் தெரியாத

அந்தக் கொலையாளியா?

 

எல்லாம் கலந்த பின்

மனிதனே வைரஸ்

வைரஸே மனிதன்.

கவிஞர். பாமதி. சோமசேகரம்

25.4.2020.

…………………………………………………

6. கொறோனா’விற்கோர் கவிதை!

கவிஞர். பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி

பழந்தமிழன் வாழ்க்கைமுறை பழக்கவழக் கங்களையும்
பலன்தருநற் பண்பட்ட விழுமியங்கள் பலதினையும்
இழந்திடாது ஓம்பிடுவீர்! ஈடிணையி லாதவற்றை
எந்நாட்டு மக்களெலாம் இதமாகப் பின்பற்றிப்
பழக்கமாய் நடைமுறையில் பகலிரவாய்ச்; செயவைக்க
எங்கிருந்தோ வந்ததையா! எங்குமதன் பேச்சுத்தான்!
மழமழவென் றேபெருகி மன்பதையை அழித்துவரும்
மாபெரும் உயிர்க்;கொல்லி கொறோனா வைறஸ்சே!
————————————————————————————-

“கொறோனா’ வாய்திறந்தால்…..

கொட்டிடுமே கவிதை” — கேட்டிடுவீர்!

இயற்கையை அழித்திட்டு எழிற்சுற்றம் பாழாக்கி
இதமான காற்றினையே மாசுபடச் செய்திட்டு
செயற்கையிலே வாழ்ந்திட்டு தேடியே’போர்’ ‘கொலைகொள்ளை’
செய்துவரும்; மானிடரே செப்புவதைக் கேட்டிடுவீர்!……….

பேய்போலப் புலப்படாத் தோற்றமுடன் உலகமெங்கும்
பெருகிவிட்ட என்குலத்திற்(கு) இனியபெயர் தேர்ந்தெடுத்து
‘நோயாகப் பெருமளவில் நொடியிற்பர வக்கண்டு
நொந்துநல் லோரைதனில் “கொறோனா’ வெனப் பெயரிட்டார்!:

ஊனக்கண் கொண்டென்னை ஒருவருமே கண்டிலரே!
ஞானக்கண் கொண்டுசைவ ஞானியரும் என்றைக்கோ
வானத்திற்; சுற்றிவரும் வடிவங்கள் அறிந்தபோதே
வகைவகையாய் வரவிருக்கும் ‘வைறஸ்’சையும் அறிந்தாரே!

மனிதகுலம் இயற்கைதனை மண்ணாக்கி மகிழ்கிறதே!
புனிதமிகு தென்றலுமே புழுதியுடன் வீசிடுதே!
அநியாய மாயுயிர்கள் பலவழியால் இறக்கிறதே!
இனிப்பொறுக்க முடியாது பழிவாங்க நான்வந்தேன்!

அன்றுவாழ்ந்த தமிழர்தம் அறவாழ்க்கை நானறிவேன்!
வென்றவர்கள் ஞானறிவால் மேலோங்கி இருந்தார்கள்
அன்றென்போர் அவர்பக்கம் அணுகிடவோ அஞ்சிநின்றோம்!
இன்றுலகின் அவலநிலை கண்டஞ்சாது வந்திட்டேன்!

கண்டவுடன்; கைகுலுக்கி; இறுகணைத்தல் அன்றில்லை!
கருணையொடு எட்டிநின்று கைகூப்ப நான்கண்டேன்!
கொண்டவளை யன்றிப்பிற மாதர்கொஞ்சக் காணவிலை
குடும்பமென்றால் ஒருவனுக்கு ஒருத்தியென வாழக்கண்டேன்!

மருந்தெனவே உணவுதனை உண்டுவந்த காலமது!
மறந்திடாது கையலம்பி இறைதொழுது உண்டார்கள்!
விருந்தினர்க்கும் செம்பினில்நீர் கொடுத்துக்கை அலம்பவைத்து
விதம்விதமாய் அறுசுவையோ டமுதளிக்க நான்கண்டேன்.

ருசியான குத்தரிசி குரக்கன்சம் பாதினையும்
புரதமிகு தானியமும் இஞ்சிமஞ்சள் மிளகுசுக்கும்
புசித்துவந்தார் நானறிவேன்! போற்றுகிறேன் அவர்களன்று
பசித்திடமுன் உண்டிடாது பலன்கண்டார் மெச்சிநின்றேன்!

கோலமிட்டு மஞ்சள்நீர் தெளிப்பதொடு கோமயத்தால்
குடிசைநிலம் மெழுகுவதின் சிறப்பையெலாம் கண்டுவந்தேன்!
காலணியை வெளிவிட்டுக் காலலம்பி வீட்டிற்குள்
காலடிவைத் துச்சுத்தம் காத்தவர்கள் தமிழரன்றோ?

ஒருவருக்குத் தொற்றுநோய் உண்டென்று கண்டவுடன்
ஓரறையில் தனிமைப் படுத்திவைத்துப் பராமரிப்பர்!
திரைமறைவில் வேப்பமிலைக்; கொப்பதனைத் தொங்விட்டு
தினம்மஞ்சள் நீர்தெளிப்பர் தீபதூபம் காட்டிடுவர்!

முற்றமதில் வேம்பிருக்கும் மூலையிலோர் துளசிமாடம்
பெற்றுநின்றார் போதுமான பிராணவாயு அப்பாடா!
சுற்றுப்புறத் தூய்மையொடு இயற்கைவளம் பேணிவந்தார்!
கற்றவற்றை நடைமுறையிற் செயற்படுத்திப் பயன்பெற்றார்.

தொன்றுதொட்டுத் தமிழரோம்பி வந்தநல்ல பழக்கமெலாம்
நன்றுநன்று உலகமக்காள் நாள்தோறும் ;;கடைப்பிடிப்பீர்”
என்றுநானும் நினைத்தவுடன் எங்குமதை உலகெங்கும்
இன்றுகடைப் பிடிக்கின்றார் இனியதென்றுந்; தொடரட்டும்!

பாடசாலை தொழிற்சாலை பலவற்றை மூடவைத்தேன்
பலரின்வாய் மூக்கிற்குக் ‘கடிவாளம்’ போட்டுவைத்தேன்
கூடிப்பலர் பேசுவதும் கொஞ்சுவதும் கைகுலுக்கிக்
கூத்தாடும் போக்கெல்லாம் தவிர்த்திடவே ஆணையிட்டேன்!

காரசார மான’ரசம்’ காசினியில் மணக்கவைத்தேன்
கசந்திடுமெம் மஞ்சளிலே தேநீரும் போடவைத்தேன்!
ஆரவாரம் இல்லாது வீட்டிலிருந்து வேலைசெய்து
அன்போடு குடும்பத்தைப் பார்த்திருக்க வழிசமைத்தேன்!

‘கலகத்தைக் கடும்போரைக்’ கைவிட்டு ஒற்றுமையாய்க்
காசினியிற் சமாதானம் நிலைக்கவழி சமைக்காது
உலகத்து நாடெல்லாம் என்னையின்று ஒழிப்பதிலே
ஒன்றுபட்டு ஒற்றுமையாய் ஓலமிடக் காண்கின்றேன்!

‘பாரதி’லே பலநாட்டிற்;;பவனிவநம் உயிர்க்கொலியாய்
‘பாரதி’ர்ந்து ஓலமிடப் பேரழிவு செய்கின்றேன்!;
‘பாரதி’யின் அருள்பெற்றுப் பாவெழுதும் பாவலனாம்
‘பாரதி’யைக் கொண்டின்று பாவெழுதச் செய்துவிட்டேன்!.

உலகத்தில் மனிதரெலாம் ஒற்றுமையாய் அன்பென்னும்
ஒருராகம் பாடிடாது ஒப்பரிய இயற்கையொடு
பலவழியில் ஒன்றுபடாப் பாழ்நிலையைக் கண்டேனெனில்
பலவைறஸ் கூட்டிவந்து பலியெடுப்பேன் யாக்கிரதை!!

……………. இப்படிக்கு உயிர்க்கொல்லி “கொறோனா”

இவற்றை வெல்ல என்ன செய்வோம்??

மறுபிறவி பிறந்திடாதோர் முத்திநிலை அடைந்துய்யும்
வகைதெரிவீர்! சிவத்தொண்டு சிவத்தியானம் இயற்றிவீர்!
நெறிநின்று இருக்கும்வரை நீவிரிமைப் பொழுதெலாம்
நெஞ்சிலுறை பரம்பொருளை நினைந்தேத்தி வாழ்ந்திடுவீர்!

பிறைசூடி பாகத்தாள் பெய்தளித்த ஞானப்பால்
குறையாது பருகித்தேன் தமிழில்மந் திரமாக
மறைஞான சம்பந்தன் அருளியதிரு முறைகளைநாம்
முறையாக ஓதிவரக் கொறோனாவும் விலகிடுமே!

பல்வைத்திய கலாநிதி இளமுருகனார் பாரதி

29.4.2020

7. கொரோனாவை நினைத்த படி….

கொரோனாவை நினைத்த படி
நடந்து போகிறான்
ஒரு வழிப்போக்கன்

பாதை எங்கனும்
சத்தமில்லா நிசப்தம்..

அவனுக்கோ
சட்டைப்பைக்குள் கனக்கிறது
புறாக்களின் வாழ்க்கையை
பார்த்த சலிப்பு….

குர் குர் சத்தங்கள்…
பகிர்ந்தமரும் மாடங்களில்
சல்லாப உரையாடல்கள்…
இளமையின் வழுவழுப்பில்
வழுக்கி விழும் அழகுகள்…
குறு குறு பார்வைகள்…
எதிர்க்கத் தெரியாத
அவைகளின் குணாம்சம்…
மனிதரோடு உறவாடி
பயமற்றுப் போன அன்னியோன்யம்…

கணவன் மனைவியென
பகிர்ந்துண்ட வாழ்வு…
முட்டையிட்டு குஞ்சு பொரித்து
பேறாக்கிய பெருமை…
தாயாகும் தந்தைமை…
தந்தையாகும் தாய்மை..

சகலதுக்கும் சகலருக்கும்
உரியதாகுமன்றோ
இந்த உலகு….

எனினும்,
எச்சம் எஞ்சும் மாடங்களை
சுத்தம் செய்யப் பஞ்சிப்பட்டு
அவைகளைக் கொல்லுமொரு
நஞ்சுக்கிண்ணம்!

தந்திரமாய் நஞ்சு வைத்து
கொல்லும் அந்தக் கைகளுக்கு
தெரிந்திருக்கக் கூடுமோ?
குஞ்சுகள் இன்னும்
இரைகளுக்குக் காத்திருப்பது குறித்து….
மாலை தேடி வரப் போகும்
ஜோடிப்புறா பெறப்போகும்
ஏமாற்றம் குறித்து….
மனித சகவாசத்தை
அவைகள் எவ்வளவு உண்மையென
நம்பின என்பது குறித்து…
அவைகளுக்கென்றும்
ஒரு வாழ்வு இருந்தது குறித்து….
………………..

இப்போதெல்லாம் மாடங்களில்
சத்தமே இல்லாத நிசப்தம்.
பாதை எங்கனும் காணும்
சத்தமில்லா நிசப்தம் போல….

சகலதுக்கும் சகலருக்கும்
உரியதாகுமன்றோ
இந்த உலகு….

அவனுக்கோ
சட்டைப்பைக்குள் கனக்கிறது
புறாக்களின் வாழ்க்கையை
பார்த்த சலிப்பு….

கொரோனாவை நினைத்த படி
நடந்து போகிறான்
ஒரு வழிப்போக்கன்.

யசோதா.பத்மநாதன்

2.5.2020.

 
Leave a comment

Posted by on 01/05/2020 in Uncategorized

 

கொரோனா – கவிதைகளுக்கான அழைப்பு

corona

2020 உலகுக்கு அறிமுகப்படுத்திய; இன்னமும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படாத கொடிய கிருமி கொரோனா. coronavirus அல்லது covid 19 pandemic என அழைக்கப்படும் இந்த உயிர்கொல்லிக் கிருமி உலகத்தையே முடக்கிப் போட்டுள்ளது.

கடந்த வருட இறுதியில் சீனாவில் உள்ள Wuhan மாகாணத்தில் கண்டறியப்பட்ட இந்த உயிர்கொல்லிக் கிருமி இன்று மக்களின் வாழ்வாதாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது.  உலகளவில் 2,704,676 பேர் பாதிக்கப்பட்டும் 738,032 பேர் குணமாகியும் 190,549 பேர் இறந்தும் போயுள்ளனர். ( 22.4.2020 திகதிக் கணக்குப் படி)

கண்ணுக்குத் தெரியாத எதிரியோடு உலகம் போராடுகிறது.

இவ் வருட ஆரம்பத்தில் நடந்த அனர்த்தமான காட்டுத்தீயில் இருந்து அவுஸ்திரேலியா தன்னை சுதாகரித்துக் கொள்ளுவதற்கிடையில் இங்கும் கொரோனா வைரசின் பரவல் நாட்டை முடக்கிப் போட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலைகளை இழந்து போயுள்ளனர். அநேக வியாபாரத் தலங்கள் மூடப்பட்டு விட்டன. பாடசாலைகள் இயங்குவது கணனி வழியிலானதாக மாற்றப்பட்டு விட்டது. மேலும் அநேகர் வீட்டில் இருந்த படியே வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். பொது கேளிக்கைகள், கடற்கரைகள், இறப்பு வீடுகள், திருமணங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

வீடுகளுக்குள் திடீரென முடங்கி இருக்க நிர்ப்பந்திக்கப்பட்ட மக்களின் இந்த எதிர்பாராத முடக்க நிலையும் நிதி நிலவரம் போன்ற இன்னோரன்ன காரணங்களும் மக்களை மனதளவில் பெருமளவில் பாதிக்க, அதன் காரணமாக மதுபாவனை அதிகரிப்பும் குடும்பவன்முறைகளும் அதிகரித்திருப்பதாக ஒரு புள்ளிவிபரம் கணக்குச் சொல்கிறது. அந்த நிலையை நீக்குவதற்காக அரசு மேலதிகமாக பல இலட்சங்களை ஒதுக்கி இருக்கிறது. ஆஸ்பத்திரிகளோ நோயாளிகளால் நிறைந்து போயுள்ளன. 22.4.2020 கணக்கெடுப்பின் படி அவுஸ்திரேலியாவில் 6,667 பேருக்கு இந் நோய் அடையாளம் காணப்பட்டும் அதில் 5,095 பேர் குணமாகியும் 76 பேர் இறந்தும் போயுள்ளனர்.

தடுப்பு மருந்து இன்னமும் கண்டுபிடிக்கப்படாதிருக்கும் இன்றய நிலையில் அதன் துரித பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கோடும் அதனைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் வேண்டி Social Isalation என்னும் எல்லோரும் வீட்டுக்குள் முடங்கி இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம்.

அது பல்வேறு விதமான சமூக விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. நன்மையும் தீமையும்; குழப்பமும் பிரச்சினைகளும் சட்ட அமைவுகளும் தீர்வுகளுமாக சமூகம் முன் எப்போதும் நம் வாழ்நாளில் சந்தித்திருக்காத புதிதான நிலை ஒன்றை எட்டி இருக்கிறது.

அது குறித்து நம் அவுஸ்திரேலியக் கவிஞர்களின் கருத்தோவியங்களை; கவிபேழைகளை; உணர்வில் தோய்ந்த கான பெட்டகங்களை; உயர்திணை அவுஸ்திரேலிய தமிழ் கவிஞர்களின் வரலாற்றுப் பொக்கிஷமாக இங்கு ஆவணப்படுத்த விளைகிறது.

அவுஸ்திரேலியத் தமிழ் கவிஞர்களே!

உங்கள் கவிமழைகளை இம்மாத இறுதிக்கிடையில் uyarthinai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் அத்தனை பேரின் கவிதைகளும் அதன் திகதி வாரியாக அடுத்த மாத ஆரம்பத்தில் இதே தளத்தில் நிச்சயமாகப் பிரசுரமாகும்.

காலப்போக்கில் இதுவரை வெளிவந்தவற்றில் சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கவிதாஆவணமாக ஆக்குவது எங்கள் நோக்கமாகும்.

 
Leave a comment

Posted by on 24/04/2020 in Uncategorized

 

மழை

மழை பொழிந்தது!

நீண்ட பெரும் காத்திருப்புக்குப் பின் மழை சோ எனப் பெய்தது. நிலம் குளிர்ந்தது. மனம் நிறைந்தது.

இரண்டு கவிஞர்கள் அதனை தம் கவிக் கிண்ணங்களில் ஏந்தி இங்கு தருகிறார்கள்.

 

1. கவிஞர். பாமதி சோமசேகரம்

rain

ஒரே ஒரு மழை

லட்சம் மழைத்துளிகள்

பறக்கும் பந்து போல அசுரக்காற்று

பெருத்த கண்களையொத்த

நீர்த்துளிகள்.

 

யன்னல்கள் பூத்தகண்கள்

வாஞ்சையாய் அழைக்கின்றன

வேர்த்துக் கிடக்கும் கண்கள் அவை.

அழமறுக்கும் கண்கள் அவை.

 

மழைக்குள் கோபம்.

காடுகள் தீப்பற்றி எரிந்த கோபம்

காற்று மரங்களின் தலையை

பிடித்து கோரமாய் ஆட்டியது.

எங்கே பிஞ்சுப் பறவைகள்

என்றழுதது…..

பற்களை நறநறவென்று நெரித்து

வீடுகளை முட்டி மோதியது.

இறுதியாக அது எதையோ பேச

விரும்புகிறது.

 

மனிதர்கள் எல்லோரும் ஒளிந்து

கொண்டார்கள் கோழைகள்…

வீட்டின் கூரைகள்

மூடப்பட்ட சவப் பெட்டிகள் போல

மழையில் மெளனமாய் நனைந்தன.

நான் மட்டும் எப்படி வெளியே வந்தேன்?

இப்போது மழையானேன்?

ஏரிகளின் எல்லைகளை உடைத்து

ஓடினேன்..

மண்ணைத் தன்னில்

சுமந்து கொண்டோடிய

வெள்ளத்திடம் மறக்காமல் கேட்டேன்

இப்போது இது யார் தேசமென்று…

வாகனங்கள் வரும் தெருக்களில்

நின்று கைகளை அசைத்து

நர்த்தனமாடினேன்

அடர்காட்டின் நிலங்களை

மூடியிருந்த

வேர்களை விரல்களால்

தொட்டு ஸ்பரிசித்தேன்.

பறக்கும் மழைத்துளிகளின்

இறகுகளை முத்தமிட்டேன்…

 

மழை பாடியது காற்றின் பாடலை

அலைகளின் பாடும் அதே ஓசை.

வெள்ளைக் கடலொன்று

அலைகளை எறிந்து விட்டு காற்றில்

ஏறி மிதக்கிறது

மழையென்றே!

 

எங்கு ஒழிந்து கொண்டாய்?

என் நூற்றாண்டுக் காதலனே,

வெளியே வா!

காற்றில் மிதக்கின்ற கடல் போல

நாமும் மழையில் நனைவோம்.

மழை பாடும்

பிரபஞ்ச ஆத்மாவின் பாடலை

சேர்ந்தே இசைப்போம்.

மழைத்துளிகளால் நனைந்த

நம் உடல்களை பூமியின் நிலத்தில்

விதைப்போம்.

 

நாளை

நானும் நீயும் ஒரு பச்சை

வனமாவோம்

பறவைகளைச் சுமப்போம்.

காட்டுத்தீயை விழுங்குவோம்.

செந்தீயில் மறுபடியும் மறுபடியும்

பல நிலங்களாக வானத்தைப்

பார்க்க உயிர்ப்போம்.

பூமியின் மண்ணை எம் மூச்சில்

சுமப்போம்….

 

இப்போதே பறந்து வா என்னுடன்….

கவிஞை. பாமதி சோமசேகரம் – 9.2.2020.

……………………………………………………………………………..

rain 1

       மழையே தொடர்வாய்

                                    கவிஞர். நந்திவர்மன்

மழையே பொழிவாய் மனது மகிழ

அழைத்தோம் வந்தாய் அன்பே நன்றி

அழிவைத் தடுக்கும் ஆற்றல் உடையாய்

குழைகள் தளிர்க்கக் கூடப் பெய்வாய்! (1)

 

காதல் இல்லாக் கணவன் போலே

வாதஞ் செய்து வாராதிருந்தாய்

பேதங் கொண்டாய் பின்னை வந்த போதும்

உடனே போனாய் ஓடி! (2)

 

எங்கே காணோம் என்றே தேடி

மங்கும் மனமாய் மகிழ்ச்சி இழந்தோம்

பங்கம் தீர பச்சை எங்கும்

பொங்கும் வரைக்கும் பொழிந்து போவாய்! (3)

 

பள்ளம் நோக்கிப் பாயும் நீராய்

உள்ளம் குதிக்க ஒலிக்கும் இசையாய்

வெள்ளம் போடும் வேக மழையாய்

வள்ளல் போலே வாரி வழங்காய்! (4)

 

எந்தாய் போலே இரக்கம் கொண்டு

வந்தாய், இன்றுன் வரவால் மகிழ்ந்தோம்

தந்தாய் தண்ணீர் தழைக்க நாங்கள்

எந்தை பெருமான் ஈசன் அருளே! (5)

 

கவிஞர். த. நந்திவர்மன், தை 2020.

 
Leave a comment

Posted by on 23/04/2020 in Uncategorized

 

காட்டுத் தீ – மழைக்கான கவிதை –

2020 ஜனவரி மாதம் நாம் நம் வாழ்நாளில் முன் எப்போதும் கண்டிராத அளவுக்கு காட்டுத்தீயின் பரவலையும் சேதத்தையும் அவுஸ்திரேலியா சந்தித்தது.

புகை போர்த்த மண்டலமாய் வானுக்கும் மண்ணுக்கும் இடையிலான காற்றுவெளி கபில நிறமாய் சூழ, தீயின் வெப்பியாரத்தின்  பல்வேறு விதமான வடிவங்களையும் தீ பரவாத பிராந்தியங்களும் சந்தித்தன. பல இலட்சக்கணக்கான வனவிலங்குகள், விவசாயிகளின் கால்நடைகள், மாடுகள், செம்மறி ஆடுகள், குதிரைகள், கோழிகள், பூனை, நாய் ஆகிய வீட்டு உயிரினங்கள்,மரங்களில் வாழ்வன என சொல்லவொணா எண்னிக்கையில் செத்தொழிந்தன; கருகி மாண்டன.  பல இலட்சக்கணக்கான ஹெக்ரெயர் கொண்ட காட்டு வளங்கள் காணாமலே போயின. பல லட்சக்கணக்கான உடமைகள் சேதமாயின. சில மணித்துளிகளுக்குள்ளேயே பல ஆயிரக் கணக்கான மக்கள் அகதிகளாயினர்.

வாரக் கணக்காகச் சூரியன் சுட்டெரித்த படி இருந்தான். மருந்துக்கும் மழை இல்லை. இத்தகைய காட்டுத்தீயை எதிர்கொள்லத் தயாரான நிலையில் தீயனைப்புப் படையினரிடமும் போதிய வளங்கள் இருந்திருக்கவில்லை. சூரியனின் வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 48 பாகையில் காய்ந்தது.

அவுஸ்திரேலியாவுக்குக் காட்டுத்தீ புதிதல்ல என்றாலும் இந்தக் காட்டுத்தீயும் அது விளைவித்த சேதங்களும் புதிது! 2020 புது வருடத்தின் தொடக்கமே நமக்கு சேதத்தோடும் உக்கிரமான சூரியனின் கோப நாக்குகளோடுமே தொடங்கி இருக்கிறது.

அது குறித்து நம் கவிஞர்கள் தந்த கவிதைகள் இங்கு பிரசுரமாகின்றன. அவற்றைப் பணிவன்போடு இங்கு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

bush fire. 2019 aus.

1.                                               மழையே பொழியாயோ?

கவிஞர் நந்திவர்மன். 

வருண பகவானே!

மழையாய் பொழியாயோ?

மரணப்படுக்கையிலே

மருண்டு நிற்கின்றோம்

தருணம் இதுவே தான்

மழையைத் தாராயோ?

கருணை காட்டாயோ?

கலக்கந் தீராயொ (1)

 

நாடு முழுவதுமே

நன்றாய்த் தீப்பற்றிக்

காடு எரிகின்ற

காட்சி கதிகலக்கும்

வீடு பல எரிய

விலங்கு பலமாள

பாடுபடுகின்றோம்

பதைப்பைத் தீராயோ? (2)

 

மெல்லப் பெய்தாயே

மேனி நனைந்திடவே

சொல்லிக் கொள்லாமல்

தொலைந்து போனாயே?

அல்லும் பகலும் நாம்

அல்லல் படுகின்றோம்

தொல்லை தீராயோ?

தொடர்ந்து பெய்யாயோ? (3)

 

தொடர்ந்து பெய்தால் தான்

துயரம் தீருமன்றோ?

அடர்ந்த காடெரியும்

அவலந் தீருமன்றோ?

படர்ந்த தியணையப்

பச்சை மரம் வளர

இடர்கள் போயகல

இசையாய் பொழியாயோ? (4)

 

நீண்ட காலங்கள்

நின்னைக் காணாது

வேண்டும் நீரின்றி

விதிர்த்துப் போனோம் நாம்

மூண்ட பெருந் தீயால்

முறிந்து போனோம் நாம்

மீண்டும் பெய்யாயோ?மேகம் பொழியாயோ? (5)

 

வரண்டு போனோமுன்

வரவைக் காணாமல்

இருண்ட காடெரியும்

எங்கும் தீப் பரவும்

திரண்டு அணைக்கின்ரார்

தீயோ அணையவில்லை

முரண்டு பிடிக்காதே

முகிலே பொழியாயோ? (6)

 

ஊழிக்காலத்து

ஒருவா சிவனேநாம்

வாழ வேண்டியுனை

வாழ்த்தி வனங்குகிறோம்

ஆழிக்கடலரையன்

அடமே பிடிக்கின்றான்

வீழும் மழையாகப்

பொழியப் பணிப்பாயே! (7)

 

– ஆழிக்கடலரையன் – கடலுக்கு அரசனாகிய வருணன்.

ஆக்கம்:த. நந்திவர்மன், சிட்னி, அவுஸ்திரேலியா, தை 7.2020.

 
Leave a comment

Posted by on 23/04/2020 in Uncategorized

 

மனித நேயம்

அன்பார்ந்த இலக்கிய நெஞ்சங்களுக்கு வணக்கம்.

இம்மாதம் அதாவது ஜனவரி மாதத்துக்கான கவிதைத் தலைப்பாக ’மனித நேயம்’ என்பதை கவிஞர். ஆறு.குமாரசெல்வம் அவர்கள் பரிந்துரைத்திருந்தார்கள். அதற்கு, பல்வைத்தியக் கலாநிதி. இளமுருகனார். பாரதி அவர்களின் கவிதை மாத்திரம் வரக் கிட்டியது. கூடவே தைப் பொங்கலோடு கவிஞர் ஆறு. குமாரசெல்வம் அவர்களுடயதும்…இரண்டையும் இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எனினும், தாமதமாக அதனை இங்கு பகிர்ந்து கொள்வதை இட்டு மனம் வருந்துகிறேன்.

 

2w5nlzo

 

  மனித நேயம்

                 பல் வைத்திய கலாநிதி இளமுருகனார்பாரதி.

 

உள்ளமதிற் கிளர்த்தெழும்நற் குணங்கள்பல இணைந்த

உயர்ந்ததனிப் பெருங்குணமே மனிதநேயம் அன்றோ?

வள்ளுவனார்  குறள்கொண்டு மனிதநேயம் உரைத்தார்

மாதவத்துத் திருமூலர் மந்திரமாய்த் தந்தார்

தெள்ளுதமிழ்த் திருமுறைகள் அள்ளியள்ளி முகிழ்த்தன

சித்தர்கள் பலர்தோன்றிச் சிறப்பாக வளர்த்தனர்

கொள்ளைபோகா ததனைவருஞ் சந்ததியர் வளர்க்கக்

குழந்தைகளை வழிநடத்தல் பெற்றோர்கடன்  அன்றோ?

 

ஆதரவாய் உணவூட்டி வளர்த்துவரும் வேளை

அன்பதனின் இலக்கணத்தைப் பூரணமாய் விளக்கி

சாதகமாய் நற்பழக்க வழக்கமெலாம் பழக்கி

நல்லதொரு குடிமகனாய்ப் பிள்ளைதனை வளர்க்க

பாதகமாயப்; பிறர்மனதை வருத்திடாநற் பண்பொடு

பரந்தமனப் பான்மைமிகு பாலகனாய் மலர

மாதவத்தால் பிறந்திட்ட பிள்ளைதானோ வென்று

மனிதநேயம் மிக்கோனெனப் பார்ப்பவர்வாழ்த் திடுவர்!

 

ஆறறிவு பெற்றிட்ட மனிதர்கள் சிலரில்

அரியபெரும் மனிதநேயம் வற்றிமறைந் ததாலே

வீறுகொண்டு விலங்குகள்போல் வெறித்தனம்மி குத்து

வேட்டையாடி மனிதர்களைக் கொல்பவரும் உள்ளார்

கூறுபோடச் சாதிமத பிரிவினையைத் தூண்டிக்

குறிக்கோளாய்ச்; சீர்கேட்டை வளர்ப்பவரும் உள்ளார்

பேறுகளை வென்றெடுக்கப் பெரும்பாவம் செய்யும்

பேடிகளாய்ப் பேய்களைப்போல் வாழ்பவரும் உள்ளார்.

 

இறைவனவன் மாந்தர்களைப் படைத்திட்ட போது

ஈடில்லா மனிதநேய நற்பண்பைச் சேர்த்து

நிறைவாகக் கொடுத்திருக்கச் சிலரதற்கு மேலே

நிரைநிரையாய்த் தீயகுணப் போர்வைகளைப் போர்த்துக்

கறையுறையாய்த்  தம்மனத்தைத் துருப்பிடிக்க வைத்துக்

காலமெல்லாம் புனிதமிகு மனிதநேயப் பண்பைச்

சிறைவைத்து வாழ்கின்றார் சிந்தையறிந் திரங்கிடாச்

சிந்தையராற் சமூகமைதி சிதைந்துபோகு தையா!

 

பரம்பொருளின்; படைப்பினிலே உயர்ந்திட்ட இனமாய்ப்

பழந்தமிழன் பண்பாட்டில் மலர்ந்ததொரு காலம்!

கரங்கூப்பிப் பெரியோரைச்; சிரந்தாழ்த்தி வணங்கிக்

காத்திருந்து வருவிருந்து ஓம்பிநலங் காத்து

வரமெனவே மனிதநேயம் தம்முயிரிற் கலந்து

வாழ்ந்துயர்ந்த பெற்றியெலாம் உரைத்திட்டாற் போமோ?

தரங்கெட்டுப் போகாது புலம்பெயரந்த நாட்டில்

தமிழினத்தின் தகைமைகளைக்; காப்பதெங்கள் கடனே!

29.01.2020

 

…………………………………………………………………………………..

 

பல் வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார் அவர்கள் ஈழத்துப் புலவர் பரம்பரையை இலங்கச்செய்யத் தோன்றிய நவாலியூர் “தங்கத் தாத்தா” சோமசுந்தரப் புலவர் அவர்களின் மூத்த புதல்வர் புலவர்மணி இளமுருகனார் அவர்களின் மூத்த புதல்வன்; என்பது குறிப்பிடத்தக்கது.

…………………………………………………………………….

 2.மனித நேயம்

கவிஞர். ஆறு.குமாரசெல்வம்

விக்கிபீடியாவுக்கு 003

மகிழ்ச்சி பொங்க வேண்டும்

மனதில் எழுச்சி பொங்க வேண்டும்,\.

மலர்ச்சி பொங்க வேண்டும்

வாழ்வில் கிளர்ச்சி பொங்க வேண்டும்!

உயர்ச்சி பொங்க வேண்டும்

சிந்தையில் உணர்ச்சி பொங்க வேண்டும்

முயற்சி பொங்க வேண்டும்

மலரின் முகிழ்ச்சி பொங்க வேண்டும்

மனித நேயம் பொங்க வேண்டும்

விவசாயி / மாக்கள் மகிழும்

நாளாய் பொங்க வேண்டும்.

…………..

15.1.2020 கவிஞர். ஆறு.குமார செல்வம்.

 

உயர்திணையின் காட்டுத்தீ நிவாரண நிதிப்பங்களிப்பு – 4.1.2020

This slideshow requires JavaScript.

4.1.2020

காட்டுத்தீ தன் அகோர நாக்குகளால் விலங்குகள், ஊர்வன, பறப்பன, என வனவாழ் உயிரினங்களையும் உயிர்களுக்கு உணவும் அடைக்கலமும் கொடுத்த படி  நீண்டுயர்ந்து; தழைத்து;பல வருடக்கணக்காக வளர்ந்திருந்த பச்சை மரங்களையும் புல்வெளிகளையும் வீடுகள், கட்டிடங்கள், பண்ணைகள், அப்பிள் தோட்டங்கள், முந்திரிகைத் தோட்டங்கள், மனிதர்களுடய வளர்ப்புப் பிராணிகளாகிய ஆடு, மாடு, கோழி போன்ற உயிரினங்களையும் கொன்றொழித்தும் அடங்க மறுத்து பரவிக்கொண்டிருக்கிறது தீ.

இப்போதும்….

”ஆஸ்திரேலியாவில் கடந்த செப்டம்பர் மாதம் முதல் ஜனவரி 1ம் திகதிவரை ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் சிக்கி சுமார் 50 கோடி விலங்குகள் கொல்லப்பட்டிருப்பதாக சிட்னி பல்கலைக்கழக சூழலியலாளர்களை மேற்கோள்காட்டி news.com.au செய்திவெளியிட்டுள்ளது.

இதுவரை காட்டுத்தீ காரணமாக சுமார் 5 மில்லியன் ஹெக்டயர் நிலப்பரப்பு எரிவடைந்துள்ள பின்னணியில் தமது கணிப்பின்படி சுமார் 480 மில்லியன் பறவைகள், பாலூட்டிகள் , ஊர்வன என பலதரப்பட்ட விலங்குகள் பலியாகியிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.” (நன்றி; SBS Tamil)

இன்றுவரை நாட்டின் பொருளாதாரத்தில் 200 கோடி டொலர்கள் பாதிப்பு ஏற்பட்டுள்ள பின்னணியில் பொது மக்களின் உதவியும் ஒத்துழைப்பும் பிரமிக்கத் தக்க அளவில் இருந்து வருகிறது. நாட்டு மக்கள் பொருளாகவும் பணமாகவும் தங்க இடமாகவும் காட்டுத்தீ முனைகளில் போராடும் தொண்டர்களாகவும் தம் மனிதாபிமான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாடு 48 செல்சியஸ் உயர் வெப்பநிலையை எட்டியது இதுவரை யாரும் அனுபவித்து உணராதது. காட்டுத் தீயின் புகைமூட்டங்களால் நாடே மூடப்பட்டிருப்பதும் இதுவரை யாரும் காணாதது.

இத்தகைய பின்னணியில் பல சமூக அமைப்புகளும் தம் நிதிசேகரிக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அவுஸ்திரேலிய கம்பன் கழகம் தமிழ் சமூக அமைப்புகளை ஒன்றிணைத்து ஒரு இராப்போசன விருந்து நிதிசேகரிப்பு நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது.

ஒருவருக்கு $25.00 வீதம் நாம் பத்துப் பேர் கொண்ட மேசை ஒன்றினை பதிவு செய்திருந்தோம். மிகக் குறுகிய காலத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந் நிகழ்வில் நம் சிறிய அமைப்பான ‘உயர்திணை’ $ 605.00 களைக் கையளித்து தன் சமூகப்பங்களிப்பை மனநிறைவோடு செலுத்தி இருந்தது.

கேட்ட உடனேயே தாம் சார்ந்த தொழில் நிறுவனங்களூடாக தம் பங்களிப்பை ஏற்கனவே செலுத்தி இருந்த போதும், நிச்சயமாக தமிழர் சார்பாக இங்கும் பங்களிக்க வேண்டும் என்று நிதிப்பங்களிப்புச் செய்தோர் விபரம் கீழ் வருமாறு.

1.யசோதா.பத்மநாதன் குடும்பம் – $ 300.00

2. இந்துமதி. ஸ்ரீநிவாசன்                   – $ 100.00

3.திரு.திருமதி. ரவி.பானு                 – $ 50.00

4. திரு. குமாரசெல்வம்                     – $ 50.00

5. சுலோச்சனா.                                    – $ 30.00

5. கீதா.மதிவாணன்                            – $ 25.00

6.பெயர்குறிப்பிட விரும்பாத

நலன் விரும்பி                                     – $ 50.00

 

மனதுக்கு மிகுந்த மனநிறைவைத் தந்த இந் நிகழ்வு நடைபெற்ற அன்று அங்கு நிலவிய வெப்பநிலை 47 செல்ஸியஸ். ஆகையினால் அன்று நம் அமைப்பின் சார்பாக பங்குபற்றி இருந்தோர் ரவி, பானு, இந்துமதி, சுலோச்சனா, யசோதா, யசோதாவினுடய தாயார் கமலா ஆகிய ஆறுபேர். $ 525.00 ல் இருந்து $ 555.00 ஆக உயர்ந்து பின்னர் மேலும் $ 50.00 இணைத்து $ 605.00 ஆக அதனை முழுமையான நிதியாக்கிய இந்துமதி. ஸ்ரீநிவாசன் சொன்ன ஒரு வாசகம் இந்தச் சந்தர்ப்பத்தில் நினைவு கூரத்தக்கது.

‘ இந் நாட்டின் அரச கொடுப்பனவுகளில் வாழும் மக்களுக்கு இந் நாட்டரசு ஒரு நாளேனும் தாமதமாக அவர்களுக்கான பணத்தை வைப்பிலிடத் தாமதப்படுத்தியதில்லை. மிக அபூர்வமாக கொடுப்பனவு நாளன்று பொதுவிடுமுறை தினமாக இருந்தால் அதற்கு முதல் நாளே பணம் அவர்களுடய வங்கிக் கணக்கிலக்கத்திற்குச் சென்று சேர்ந்துவிடும். இந்த அரசுக்கும்; எமக்கு அடைக்கலம் தந்து நம்மை கெளரவமாக வாழ வைத்திருக்கும் இந் நாட்டுக்கும்; நம் மக்களுக்கும்;  இழப்பும் துக்கமும் சவால்களும் சூழ்ந்திருக்கும் இப்புதுவருட நாளில் நாம் எவ்வாறு கைகளைக்கட்டிக் கொண்டு பேசாதிருப்பது?’ – என்று கேட்டார்.

உண்மைதான்.

நாம் நம் பங்களிப்பைச் செவ்வனே ஆற்றி இருக்கிறோம் என்பது பெருத்த மனநிறைவைத் தருவது.

இச் சந்தர்ப்பத்தில் கேட்டவுடனேயே நிதிப்பங்களிப்பை வழங்கிய மனிதாபிமான உயர்திணையின் உள்ளங்களுக்கு  மனம் கனிந்த நன்றிகள்.

 

பிற்குறிப்பு:

* சுமார் 25ற்கு மேற்பட்ட தமிழ் சமூக அமைப்புகள் இந் நிவாரண நிதி ஒன்றுகூடலில் பங்குபற்றி இருந்தன.

* மொத்தமாக சேர்ந்த நிதி / அன்றய தினம் தீயணைப்புப் படை அதிகாரிகளிடம் கையளித்த நிதி $ 9001.00

* மெடிஎய்ட் அமைப்பு இவர்களோடு இணைந்து கொடுத்த நிதி $ 10,000.00

* மொத்தமாகக் கையளிக்கப்பட்ட நிதி $ 19,001.00

* வேறும் சில பெரிய தமிழ் அமைப்புகள் தனிப்பட்ட ரீதியிலும் தம் நிதிப் பங்களிப்பைச் செலுத்தி இருப்பதை அறிய முடிகிறது.

…………………………………………………..

இருந்த போதும் ஒரு தமிழ் கேளிக்கை நிகழ்ச்சிக்கு சுமார் $ 125.00 – $150.00 களை மிகச் சாதாரணமாகச் செலுத்தி நிகழ்ச்சிகளில் பங்குபெறும் தமிழர்களில் பலர் இங்கு கலந்து கொள்ளவில்லை என்பதும்; கலந்து கொண்டோரில் பலரும் கூட. மிகக் குறைந்த தொகையான $ 25.00 மாத்திரம் செலுத்தியுள்ளனர் என்பதும்; சேர்ந்த நிதி $ 10,000.00 கூட எட்டவில்லை என்பதும்; தமிழர் தம் மனநிலையை காட்டுவதாக இருந்தது என்பதையும் ஒரு பதிவாக இங்கு நிச்சயம் வருத்தத்தோடு குறிப்பிட்டாக வேண்டும்.

 

2. அகதிப்படகு – கவிஞர்களின் கவிதைகள்

 

அகதிப்படகு

அகதிப்படகு சட்டவிரோதமானது
எல்லை ரோந்து கண்காணிக்கிறது

குழந்தைகளை படகில் ஏற்றாதீர்கள்
கடல் பாதுகாப்பானதல்ல

நாட்டை விட்டு வெளியேறாதீர்கள்
எந்த நாடும் உங்களை அனுமதிக்காது

கம்பி வேலிகள் இங்குமுண்டு
மீண்டும் அகதி முகாம்களை
தேர்ந்தெடுக்காதீர்கள்

அகதிகள் என்றும்
அத்துமீறிக் குடியேறியவர்கள் என்றும்
ஊடகங்கள் நஞ்சை வீசும்

உண்மைதான்
மரணத்தால் கட்டப்பட்ட நிலத்திலிருந்து
கட்டாயமாக வெளியேறியதால்
நானும் ஓர் அகதி

கனத்த இதயத்துடன்
புதிய நிலத்தை நோக்கி நகர்ந்தோம்

கையில் எதுவும் இல்லாதபோதும்
அன்பைச் சாப்பிட்டுக் கண்ணீரைக் குடிக்க
எங்களுக்காக ஒரு கடல் காத்திருந்தது

எங்கள் விதியின் தூசியை விலக்கி வைக்க
நறுக்கப்பட்ட மீன்பிடிப் படகுகள் காத்திருந்தன

எங்கள் மாமிசத்தை சுவைக்காத
ஓர் நாட்டை நோக்கிப் பயணித்தோம்
எங்கள் தலையைக் கொய்யாத
ஓர் நாட்டை நோக்கிப் பயணித்தோம்

இரவின் இருண்ட விளிம்பில்
கசிந்துகொண்டிருக்கும் சிறிய படகில்
போராடி உயிர் பிழைத்தவர் நாங்கள்

எங்கள் ஈரமான கண்களுக்கு
கொஞ்சம் நம்பிக்கை தாருங்கள்

மொழிபெயர்ப்பாளர்கள் எங்கே?

எங்கள் பெயர்களின்று
மூடுபனியால் எழுதப்பட்டிருக்கிறது
எங்களை அடையாளம் காணுங்கள்

ஒரு கைதியைப் போல
கிறிஸ்துமஸ் போன்ற தெரியாத தீவில்
தடுப்பு மையத்தில் தங்க வைக்காதீர்கள்

நீங்கள் கொடுத்த போர்வை சூடேற்றவில்லை
இங்கு எதுவும் சிறந்த நிலையில் இல்லை

மனித உரிமை பேசும்
ஜனநாயக நாட்டில் கூட
அகதிப்படகுக்கு வரவேற்பு இல்லை

எங்கே நாம் சுதந்திரத்தைத்தேடி வந்தோமோ
அங்கேயும் சுதந்திரம் இல்லை

நானும் எனது மக்களும் இப்போது எங்கு செல்வது?

கடைசி எல்லைக்கு வந்தபின்பு
இந்தப் பறவைகள் எங்கே பறப்பது?
கடைசி வானமென்று ஒன்றுண்டா?

கவிஞை. செளந்தரி. கணேசன்.
28.12.2019.

……………………………………………………………………….

அகதிப் படகு”

 

ஒருநாளா இருநாளா ஒப்பரிய ஐந்தாண்டு

உல்லாசப் படகாகப் பலகடல்கள் சுற்றிவந்தேன்

வருகின்ற பயணிகளோ எனைத்தேடி நின்றார்கள்

வனப்புமிகும் என்னழகு ஈர்த்ததிலே வியப்பேது?

திருமணமும் ஆகாத திடமான வாலிபர்கள்

தேன்நிலவைக் கழிக்கவரும் மானின்;விழி மங்கையர்கள்!

பருவத்து எழில்கொஞ்சும் பாவையர்கள்; அப்பாடா!

பார்த்ததிலே இன்பத்தின் எல்லையெலாங் கண்டேனே!

 

நன்னனெனும் பெயர்கொண்டோன் நாணயத்தை மறந்தறியான்

நாளெல்லாம் என்னழகு நனிசிறக்க வழிசெய்வான்

வன்னப்பூத் தேர்ந்தெடுத்து வகையாகச் சோடிப்பான்;

வடிவழகன்; வாசனைக்கு ஏதேதோ பூசிடுவான்

மின்வேக மாயென்னை வெகுகவன மாயோட்டி

வேடிக்கை யாயவனோ விளையாட்டுக் காட்டிடுவான்

என்னினிய பயணிகளை என்றுமவன் மகிழ்விப்பான்

இன்முகத்தன் நன்னனவன் பொன்மனமும் நானறிவேன்

 

இரவுபகல் பாராது ஆழிபல சுற்றிடுவான்

என்காது கேட்டதெல்லாம் இனிக்கின்ற சல்லாபம்!

பரவசத்தாற் கிறங்கிநிற்பேன்! பாசமொடு நன்னனவன்

பக்குவமாய்ப் பணிசெய்யப் பார்த்துநான் மகிழ்ந்திருப்பேன்!

நிரைநிரையாய் நடந்தவற்றை நினைவுகூரக் கண்ணயர்ந்;தேன் 

நிம்மதியும் நிறைமனமும் நிமிடத்தில் போனதம்மா!

இரைச்சலொடு இடிபோலத் துவக்குவெடிச் சத்தமெனை

என்றுமிலா அச்சத்துடன் எழுப்பியதும் பதற்றமுற்றேன்.

 

பக்கமாக வந்தபெரும் கப்பலொன்றைக்; கண்டவுடன்

பணிவாக நந்தனவன் வெள்ளைக்கொடி காட்டவேறு

திக்கிருந்து வந்ததோட்டா சென்றவனைக் கொன்றதம்மா!

திகைப்புடனே திரும்புமுன்னர் சிப்பாய்கள்; என்மேலே

கொக்கிபோட்டு ஏறிவேறு திசைநோக்கிக் கொண்டுசென்றார்

கொஞ்சுமெழி;ல் விஞ்சுமொரு கரையில்நங் கூரமிட்டார்

அக்கணம்நான் பட்டதுயர் அப்பாடா கொஞ்சமில்லை!

அந்தக்கரை சிறீலங்காக் காலிமுகாம் எனவறிந்தேன்

 

உல்லாசப் படகான என்னினிய பயணிகளின்

உடைமைகளை முகாமிலுள்ள படைவீரர் பறித்தெடுத்தார்

எல்லையிலா இன்பந்தரும் நினைப்பினிலே வாழ்ந்தவென்றன்;

இந்தநிலை மாறுமென்று என்றேனும் நினைக்கவில்லை!

சல்லடையிட் டுச்சந்தெலாம்  தேடியேயெம் இளைஞர்களைக்

கொல்லாமற் கொல்வதற்கு வெள்ளைவானிற் கொண்டுவந்தார்

மெல்;லமெல்லச் சாகடிக்கும் மிருகச்செயல் கண்டுநொந்தேன்!

மேற்கொண்டு  கன்னியரின் கண்ணீர்க்கதை யார்க்குரைப்பேன்!

 

குடித்தபின்னர் அவர்களிட்ட கொடுமையெலாம் கண்டழுதேன்;

இடித்திடித்து வசைபாடி எத்தனையோ கேள்விகேட்டுப்

பிடித்தவர்கள் சேலைபற்றி இழுத்துரிவர்!; கண்ணீரைத்

துடைக்குமுன்னர் வார்குழலை வலிந்திழுத்துக் குலைத்துடலை

அடித்திடுவர்! நொந்தமேனி துடித்திடவே பலர்கூடிக்

கெடுத்தகதை எத்தனையோ கேட்டென்மனம் வெடித்ததையா!

படித்தபுத்த நீதியெலாம் விடுத்துநின்ற வெறிக்கும்பல்

பாபச்செயல் அத்தனையும் பண்ணக்கண்டு மயக்கமுற்றேன்!.

 

அல்லும்பகல் நோட்டமிட்டுத் தேடிவரும் தமிழர்களை

அடிவருடும் எட்டப்பர் அடையாளம் காட்டிநிற்கப்

பொல்லாவின வெறிப்படையும் கைதுசெய்து  முகாமதிலே

புலன்விசாரணை எனக்கூறிப் புல்லர்கள் பலர்;கூடிக்

கொல்லாத விதமாக கொடும்வதையைச் செய்தபின்னர்

குற்றுயிராய்ப் புதைகுழியில் போனவிடந் தெரிந்திடாது

மெல்லமூடி விட்டவர்கள் விருந்துவைத்து மகிழ்ந்தகதை

மெதுவாகச் சொல்லிச்சிலர் விம்மியதை நானறிவேன்

 

நாள்கள்பல சென்றபின்னோர் நண்பகலில் யாரோவொரு

நாட்டாண்மைக் காரனவன் ‘கலுபண்டா’ எனும்பெயரோன்

தாள்களாகப் பலலட்சம் முகாமின்தலை வனுக்களித்துத்

தனதூருக்(கு)என்னைக்கரை ஓரமாகக் கொண்டுசென்று

வாழ்ந்துய்ய வழிதேடி வெளிநாடு செலவிரும்பும்

வன்முறையாற் பாதிக்கப் பெற்றலைந்த தமிழர்களை

ஆழ்கடலுக் கப்பாலே அவுஸ்திரேலியா நாட்டிற்கு

அகதிகளாய் அனுப்பிவைக்கப்; படகாகத் தேர்ந்தெடுத்தான்

 

அகதிகளை அவுஸ்திரேலியாவிற் கனுப்பிடுவேன் என்றுசொல்லி

அரசாங்க ஊழியரின் கண்களிலே மண்தூவி

பகடைக்காய் எனத்தமிழர் உயிருக்கு விலைபேசி

ஆளுக்கு ஐந்துலட்சம் ரகசியமாய்; வசூலித்து

மிகநல்லவ னாய்நடித்து அவுஸ்திரேலியா அனுப்பிவைக்க

வேண்டியதிட் டங்களையும் விரைவாகச் செய்திருந்தான்

சகநண்பர் கூடியொரு படகோட்டும் மாலுமியைச்

சந்தித்துக் காலிமுகக் கடற்கரைக்கு அழைத்துவந்தான்

 

ஐந்தாண்டாய் ‘உல்லாசப் படகு’என்ற மிடுக்கோடு

ஆழிபல ஆசையொடு பவனிவந்த என்பெயரைச்

சிந்தைநோக‘அகதிப் படகு’ என்;றவனும் மாற்றிவிட்டான்

தினம்மதுர சங்கீதம் சிற்றின்ப நடனங்கள்

விந்தையாக விருந்துவைக்கும் ‘இளசுகளின்’ ஒய்யாரம்

வேடிக்கை யாய்ப்பேசும் நன்னனவன் விகடங்கள்

அந்தநாள் நினைவுவாட்ட அழுதழுது நாள்கழித்தேன்

ஆசையெலாம் அழிந்தொழிய இலவுகாத்த கிளியானேன்.!.

 

அகதிப்பட கோட்டியென ‘அமரசிங்கி’ பதவியேற்றான்;

அதிரடிப்படைச் சிப்பாயாய்ப் பதவிவிட்ட இனவெறியன்!

சுகவாழ்வு தெலைந்ததெனச் சோர்வுற்று நிற்கையிலே

தூரத்திற்; பெரியதொரு பேருந்தைக் கண்ணுற்றேன்

மிகக்களைத்த நிலையினிலே ‘கலுபண்டா’ வழிகாட்ட

மெள்;ளமெள்;ளப் பலரென்னை நாடிவரக் கண்டுநின்றேன்!

அகப்பட்டு விட்டோமினி அவன்விட்ட வழி’யென்ற

ஆதங்கப் பட்டோரின்;; பெருமூச்சும் கேட்டதம்மா.

 

வந்தகும்;பல் தமிழரென ஒருவாறு ஊகித்தேன்

மந்தைகளைப் பலிக்கெடுத்துப் போவதுபோல் நிரையாக

நொந்துநின்ற நூற்றைம்பது ‘அகதிகளை’ எண்ணிஎண்ணி

நொடியிலே என்மேலே எற்றிவிட்டான் ‘அமரசிங்கி’

விந்தையாக‘அப்பியமு’‘அப்பியமு’ எனக்கூவி

விசைதன்னை அழுத்தியதும் படகும்பாய்ந்  தோடியதே! 

சந்ததமும் தனித்துவத்தைக் காத்திடுவேன் என்றிருக்கத்

தமிழர்களின் நிலைபோல விலைபேசி அழித்தானே!

 

ஏற்றமுடியாப் பாரமதை எந்தனுடல் மிகநோக

ஏற்றிக்கொண் டாழ்கடலை எதிர்நோக்கிச் சென்றதுவே!

காற்றும்மிக வேகமாகச் சாதகமாய் வீசியதே1

கந்தவேளே கதிநீயே’ என்றுகூவு வோர்களையும் 

ஆற்றிடாது அறவட்டி கொடுத்தெடுத்த  பலலட்சம்

அவுஸ்திரேலியா சேர்த்திடுமோ எனப்புலம்பு வோர்களயும்

தேற்றிடுவோர் இன்றியழு வோர்களையும் பார்த்தநான்;;

தினந்தமிழர் இழந்ததெல்லாம் நினைந்துமனம் நொந்திழைத்தேன்

 

தாலிதனை இழந்;ததுயர் தாங்கிடாத தாய்மாரைக்

காதலரைப் பறிகொடுத்த கட்டழகுக் கன்னியரைப்

பாலியலுக் குட்படுத்திப் பசிதீர்த்தோர் கதைகளையும்

வாலைப்பரு வத்தோராய் வதைபட்ட வாலிபரைக்

காலிமுகக்’காய்ம்பிருந்துமீட்டெடுத்த கதைகளையும்

களைத்தொளித்து வெளிநாடே தஞ்சமென்றோர்  கதைகளையும்

போலிக்கடவுச் சீட்டொடு பயணிப்போர் சொலக்கேட்டேன்!

பொங்கிவரும் அவர்கண்ணீர் துடைக்கவழி கண்டறியேன்!

 

சாவைத் தவிர்ப்பதற்குத் தமதுபொருள் நகைகளுடன்;

சந்ததியாய் வந்தநிலம் சகலதையும் விற்றசிலர்

தேவைக்குப் பலலட்சம் ரூபாய்கள் சேர்த்தந்தப்

பாவியான ‘ஏஜென்ரிடம்’ பதட்டமுடன் கொடுத்ததுவும்

மூவைந்து வாரங்கள்; பின்னொருநாள் அவசரமாய்

முத்தையன் எனும்தரகன் முறையாக வந்தழைத்துக்

காவத்தை’க் கலுபண்டா கரைசேர்ப்பான்” எனச்சொல்லிக்

கடைசியிலென் மீதேற்றி விட்டதையும் நானறிந்தேன்.

 

வாரமிரண் டாகியதே வழிமாறி நடுக்கடலில்

வலுவான அலைகளொடு போட்டியிட்டுச் சென்றேனே!

தூரவழிப் பாதையொன்றால் தொடர்;ந்திட்டோம் பயணத்தை!

தூக்கமில்லைச் சீரான உணவுமில்லை யெனவாடிச்

சேருவமோ அவுஸ்திரேலியா எனச்சித்தங் கலங்கியெமைப்

பாராது ஆழியிலே பாய்ந்திருவர் மாய்ந்தபெருந்

தீராத்துயர்  வாட்டிநிற்கச் செயலற்று நீர்சொரிந்தேன்!

தினமவர்கள் ‘ஆவி’யெலாம் கனவில்வரக் கண்டுழன்றேன்!

 

பலநாளாய்ப் பாலின்றிப்; பச்சைக்கு ழந்தையொன்று 

பரிதாப மாய்க்கதறித் தாய்மடியில் மயங்கியதைச்

சிலநிமிடங் கூடவவள்; பொறுக்காது குழந்தைதனைச்

சேர்த்தணைத்து இறுதிமுத்தம் ஏக்கமொடு கொடுத்துவிட்டு

சலசலக்கும் ஆழ்கடல்தான் சாந்திதரும்’எனச்சொல்லித்

தன்கணவன் அழைக்கின்றான் சந்திப்போம்’ எனக்கதறிப்;

பலமெல்லாங் கூட்டியவள் பாய்ந்தந்தோ உயிர்மாய்த்தாள்;;

பார்த்தவரின் கண்களெலாம் செவ்விரத்தஞ் சிந்தினவே!

 

வந்தவர்கள் மூச்செல்லாம் ஏக்கப்பெரு மூச்சாக

வரங்கேட்டுத்  தங்கள்குல தெய்வங்களை வணங்கிநிற்க

விளையாட்டாய்த்; தூரமதில் தரையின்கரை தெரியுதென்று

வேதனையை மறப்பதற்கு ‘அமரசிங்கி’ முணுமுணுத்தான்

அடுத்தசில மணிக்குப்பின் றோந்துசுற்றும் விசைப்படகு

ஆகாயம் நோக்கியந்தோ அடுக்கடுக்காய்ச் சுட்டதுவே!.

மந்தபுத்திக் காரனான அமரசிங்கி தன்துவக்கால்

மாறிமாறி அப்படகைக் குறிவைத்துச் சுட்டுநிற்க

 

தற்பாது காப்பாகச் சுடப்பட்ட தோட்டாவோ

தப்பாதெம் மாலுமியைச் சாகடித்து வி;ட்டதுவே

சொற்பமாக இருந்துவந்த நம்பிக்கையும் தொலைந்ததென்று

சோகமாக இருந்தவேளை சூழ்ந்திட்ட இராணுவமோ

சற்றுமெதிர் பாராவிதம்;; எமைத்தமது படகேற்றிச்

சாதுரிய மாகவொரு கரைதனிலே இறக்கிப்பின்

குற்றஞ்செய் தோர்போலத் துப்பாக்கி முனையிலெமைக்

கொண்டுசென்று ‘கிறிஸ்மஸ்’;சுத் தீவிலடைத் தனரம்மா!

 

உல்லாசப் படகாக உலகமெலாம் சுற்றிவந்தேன்

உயிர்மதியா இனவெறியர் கொடுஞ்செயல்கள் நானறிந்தேன்

கல்மனமும் கசிந்;துருகும் கதைகேட்டு நானழுதேன்

‘‘கலுபண்டா’ போன்றோரின் கைபடாது நானின்று

செல்லாக்கா சுபோலவேயென் சிறப்பெல்லாம் இழந்தாலும்

சீரிளமைத் தமிழ்பேசும் செல்வங்களை வாழ்த்தினின்று

அல்லும்பகல்; என்கனவில் தமிழ்வெல்லக் காண்கின்றேன்;.

அகதிப்படகு”ப் பெயருடன் அகதியாகத் துயில்கின்றேன்.

REFUGE BOAT (4)

கவிஞர். பல்வைத்தியக் கலாநிதி. இளமுருகனார் பாரதி.
28.12.2019. 11.44.

……………………………………………………………………………………………..

3. அகதிப்படகு

வலியும்துயரும்ஆற்றாமையும்
வாழும்வகையென்றுகாட்டிடும்
நம்பிக்கையும்அவநம்பிக்கையும்
ஆசையும்கனவும்ஏக்கமும்
நேசமும்அன்பின்தவிப்புமென
உள்ளூறும்அத்தனையுணர்வும்
ஆழியின்அலைகள்அலைக்கழிக்க
அச்சந்தரஆடிவரும்அகதிப்படகிது

கைத்திணித்தப்பொருள்பொறுத்து
கலம்திணித்தப்பெரும்பாரம்சுமந்து
நிறைசூலியெனநிலைகொள்ளாது
கரைகாணாகடல்நடுவேநில்லாது
உவர்நீர்த்தாகமெனஉயிர்குடித்து
இன்னல்பலவும்இடர்பலவும்கடந்து
கொந்தளிக்கும்உணர்வுகளோடு
கொந்தளிக்கும்கடலேகும்அவதிப்படகிது

நேர்வழிமறந்துநெஞ்சம்குறுகி
திரைகடலோடிதினவெடுத்தேகி
சோறுதண்ணீர்சொந்தம்மறந்த
சுகவீனபலவீனமனங்கள்சுமந்து
மண்ணிற்பாதம்பதிக்குமுன்னே
கண்மறைந்துபொறுப்புதுறந்து
அந்தோவெனவிட்டுவிரையும்
அபாயமிகுஆட்கடத்திப்படகிது

யாதும்ஊரேயாவரும்கேளிரென்று
பரதேசம்தருமொருபுதுவாழ்வென்று
பாதுகாப்பின்எல்லைதுணிந்துகடந்து
பத்திரவாழ்வுக்கொருஉத்தரவாதமின்றி
நித்திரைதொலைத்துநீலக்கடல்வழி
ஆங்காங்கேஉயிருதிர்த்துஉறவுதிர்த்து
எத்தரையேனும்சேர்ந்திடத்துடிக்கும்
இதயங்கள்சுமந்துவரும்எந்திரப்படகிது

கவிஞை. கீதா.மதிவாணன்.
30.12.2019.

…………………………………………………………………..

4. அகதிப்படகு

 

‘அகதிப்படகு’ தலைப்பை

அறிந்தால் அதிரும் குடகு

(குடகு – குடகுமலை)

அனுபவம் இல்லா செயலால்

ஆழ்கவி எழவில்லை தன்னால்!

 

கற்பனைக்கு ஆட்படும் தலைப்பல்ல

கண்,கால் கை வெட்டுண்டதை என்சொல்ல

விற்பனைக்குண்டு விலங்குத் தலை!

வீதியில் தொங்கியதன்றோ மனிதத்தலை!

 

மனிதனை மனிதன் கொல்வதா?

மாநிலம் இதை ஏற்றுக் கொள்வதா?

புனிதமாய் புத்தரைப் போற்றுவோர்

புலையராய் புவியினில் வாழ்வதா?

 

நாதியற்ற மனிதரெல்லாம் தப்பித்தே

நாவாயேறி ஆழ்கடல் தனில்

நாற்புறம் பயணம் மேற்கொண்டார் – நற்கதி

தருவாரெவரென நடுக்குண்டார்

 

வலியார் மெலியாரை அடக்குவதும்

வரிந்து கொண்டு ஒடுக்குவதும்

புலியது மானைப் புசிப்பதுவும்

பொல்லா விலங்குக்கன்றி

மனிதருக்கன்றே?

 

உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு

ஊரூராய் புகலிடம் தேடியலையும்

மானிடரையெலாம் தாய்மையுடன்

மறுப்பின்றி ஏற்றி வரும்

அகதிப்படகு

 

உண்ண உணவுமின்றி உடுத்த

உடையுமின்றி உறங்கியெழ

திண்ணை ஏதுமின்றி வாழ்வின்

திக்கறியா மாந்தரின் அடைக்கலம்

 

சொந்த நாட்டிலே சுதந்திரமாய்

சுற்றித் திரிய உரிமையற்று

நொந்த மாந்தருக்கு விடுதலையை

நுகர்வதற்கு வந்த அடிமைக் கப்பல்.

கவிஞர். ஆறு. குமாரசெல்வம்.

01.01.2020.

 

– ’2020’ -தானாய் மலர்ந்த புத்தாண்டுக் கவிதைகள் –

2020

கவிஞர். செ. பாஸ்கரன்

பழகிய ஆண்டு விடைபெறும் போது

மனதினில் ஆயிரம் நினைவுகள் வந்தன.

புதிய ஆண்டினில் புகும் இந் நேரம்

ஆயிரம் கனவுகள் எழுந்து முன் வந்தன.

கனவுகள் யாவும் நிஜமென மாற்றி

இனிய வாழ்வினை அனைவரும் பெறுவோம்.

புதிய கவிதைகள் ஆயிரம் படைப்போம்.

உயர்திணைக் கவியென

உலகினில் பறப்போம்.

அனைவருக்கும் புதுவருட வாழ்த்துக்கள்.

அன்புடன் செ.பாஸ்கரன்.

………………………………………………….

கவிஞர். ஆறு.குமாரசெல்வம்

ன்பும் பண்பும் மலரட்டும்

சையும் கோபமும் உலரட்டும்

னிமையே நாவில் தவழட்டும்

கை எண்னம் கமழட்டும்

ண்மை என்றும் நிலைக்கட்டும்

ழல் சிந்தனை தொலையட்டும்

ங்கும் கருணையே பரவட்டும்

ற்றமுடன் மானிடர் உயரட்டும் 

யம் மனதினில் அழியட்டும்

ற்றுமை உணர்வே விளையட்டும்

யாது மானிடம் உழைக்கட்டும்

தே நன்றென திளைக்கட்டும்!

 

இனிதே மலர்ந்தது

புத்தாண்டு Twent – Twenty

இன்பமும் மகிழ்வும்

இணைந்தே தரும்

என்றும் வெற்றி! வெற்றி!

’உயர்திணை’

உயர்ந்தோர் சிந்தனைக் கருவூலம்

’அயர்வினை’

அகற்றும் அன்பாளர்

இணைப்புப் பாலம்.

மகிழ்வுடன்,

ஆறு.குமாரசெல்வம்.

( வாழ்த்திய கவி/ கருணை உள்ளங்களை வணங்குகிறேன்.வந்ததோர் 2020ஆண்டில் வாழ்த்தி மனம் மகிழ்கிறேன்)

…………………………………………………………….

கவிஞர். நந்திவர்மன்.

இருபது பிறந்திட

வருவது சிறந்திட

இன்பம் நிறைந்திட

துன்பம் மறைந்திட

அறிவு பெருகிட

உறவு உருகிட

மகிழ்ச்சி பொங்கிட

புகழ்ச்சி தங்கிட

நலங்கள் சேர்ந்திட

உளங்கள் ஆர்த்திட

ஆழ்ந்த அன்புடன்

வாழ்த்து கின்றனன்.

– த. நந்திவர்மன். 

………………………………………………….

பிறந்திருக்கின்ற இந்தப் புத்தாண்டு அனைவர் வாழ்விலும் அன்பையும் மகிழ்வையும் உடல் நலத்தையும் மன அமைதியையும் தருவதாக!

 

உயர்திணையின் அவுஸ்திரேலியக் கவிஞர்களுக்கான அழைப்பு

அன்புடையீர்,

அவுஸ்திரேலியாவில் பல காத்திரமான கவிஞர்கள் இருக்கிறார்கள். சிலர் ஆசு கவிகள்! நினைத்தவுடனே கவி படைக்க வல்லோர். மேலும் சிலர் மரபுக் கவிஞர். வரம்புக்குள் நின்று வசீகரமாகக் கவிதர வல்லோர்! மேலும் சிலர் வீச்சு வாள் போலும் வார்த்தைகளை சுழல விட்டு சொற்போர் செய்ய வல்லார்! இவைகள் எல்லாம் கைக்கொள்ள வல்லாரும் நம்முள்ளே உளர்.
எனினும் அவர்களை ஒருங்கிணைத்து கவி இன்பம் பெற வாய்ப்புகள் நமக்குள்ளே அதிகம் இல்லை. வாழ்க்கையும் வேலையும் போட்டி போடும் உலகில் சுந்தரத்தமிழில் சிந்துக் கவி இயற்றவும் அதனை இயக்கவும் ஓர் உந்து சக்தி தேவையாகவே இருக்கிறது. ஏனைய கலைவெளிகளுக்கு வேண்டப்படுவது போலவே!

தவிரவும், அவுஸ்திரேலியச் சமூகம் நோக்கியதான கவிஞர்களின் சிந்தனைகளும் அவர்களின் கவிதா விசாலங்களும் கூட பெருமளவு ஆவணப்படுத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது.

அதன் காரணமாக, வருகிற 2020 புதுவருடத்திலிருந்து உயர்திணையின் செயல்பாடுகளின் ஒரு முன்னோட்டமாக அவுஸ்திரேலியத் தமிழ் கவிஞர்களை ஒன்றிணைத்து மாதம் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கவிதைகளைக் கோருவதெனவும்; அவைகள் யாவும் வந்து சேர்ந்த காலக் கிரமத்தின் படி அடுத்த மாத ஆரம்பத்தில் திகதிவாரியாக உயர்திணை வலைப்பக்கத்தில் பிரசுரிப்பதெனவும் உயர்திணை நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது.

அதன் ஒரு முன்னூட்டமாகக் கடந்த மாதத்திற்கான தலைப்பாக, அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் முழுக்க பெரும் தாக்கத்தைச் செலுத்திய; செலுத்திக்கொண்டிருக்கும் ”காட்டுத் தீ” என்ற தலைப்பு தெரிவு செய்யப் பட்டிருந்தது.

இம்மாதம் “அகதிப்படகு” என் ற தலைப்பு கவிதைக்குரிய கருப்பொருளாகத் தெரிவு செய்யப்பட்டிருக்கிறது. அவுஸ்திரேலியாவில் மாத்திரமன்றி உலகம் முழுவதிலும் பேசப்படும் ஒரு பிரச்சினைப் பொருளாக இவ் விடயம் ஆகியிருக்கிற பின்னணியில் கவிஞர்களாகிய உங்கள் எண்ணங்களும் சிந்தனைகளும் கவிதா பதிவுகளும் எவ்வாறு இருக்கிறதென்பதை அறிய ஆவலோடிருக்கிறோம்.

அவுஸ்திரேலியக் கவிஞர்களுக்கு மாத்திரமான இத்தலைப்புக்குரிய கவிதைகள் யாவும் இம்மாத இறுதி 31.12.19 இக்கிடையில் uyarthinai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கவிதைகளை எழுதி அனுப்புமாறு கோருகிறோம்.

அனுப்பப்படும் சகல கவிதைகளும் அடுத்த மாத முதல் வாரத்திற்குள் வந்துசேர்ந்த திகதிவாரியாக https://uyarthinai.wordpress.com/ என்ற இணையப்பக்கத்தில் பிரசுரமாகும்.

எதிர்காலத்தில் சிறப்பானதாகவும், சமூகம் சார்ந்த விடயங்களைக் கொண்டதாகவும் விளங்கும் கவிதைகள் தக்க நடுவர்களால் தெரிவுசெய்யப்பட்டு, அக்கவிதைகளுக்கான கவிஞர்களின் அனுமதியோடும் அவர்களது பெயர்களோடும் உயர்திணை வெளியீடாக புத்தகமாக வெளிக்கொணரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.