RSS

Monthly Archives: September 2013

உயர்திணை – கார்த்திகா.கணேசர் –

ஆக்கம்: கார்த்திகா. கணேசர் (15.8.13)

மாதம் தவறாது நடப்பது உயர்திணையின் இலக்கிய சந்திப்பு.

14 சந்திப்புகள் நடந்தேறி விட்டது. அத்தனையும் அறிவுக்கு விருந்து.ஒன்று போல் ஒன்று அமைவதில்லை.அத்தனையிலும் பேசப்பட்ட விஷயங்கல் பல. இது ஒரு கலந்துரையாடல் போல் அமைவது. ஏதோ ஒரு விஷயம் பற்றி ஒருவர் எடுத்துக் கூற அதையிட்ட அறிவு பூர்வமான கலந்துரையாடல் தொடரும். சிறுகதை தொட்டு தமிழ் இலக்கிய கற்பு நெறி வரை பல பல அலசி விட்டோம். மதக் கோட்பாடுகளிலே அதீத நடக்க முடியாத விஷயங்களைக் கூறி மத சிந்தனையை வளர்த்தமை பற்றி சந்திரலேகா வாமதேவா தனது ஆய்வு பற்றி எடுத்துக் கூறினார்.பெண்களாக ஒரு நாள் சந்தர்ப்ப வசமாகக் கூடி விட, ஆன் ஆதிக்கம் பற்றி எமது வாழ்க்கை அனுபவங்களோடு பகிர்ந்தோம்.

கோகிலா மகேந்திரனின் சிறுகதை புலம் பெயர்ந்த நாட்டு பேரூந்து பயணம் எமது ஊர் பயணங்களோடு ஒப்பிட்டு எழுதி வாசித்தமை எமது நாட்டு மனித உறவை நாம் இங்கு இழந்து தவிப்பதை உணர்த்தியது.

போராளியாக வாழ்ந்த புதியவன் தான் சிறையில் பட்ட அனுபவம் முதல் அவர் சிறையில் கல்வ்இ கற்ரமை யாவும் சொல்ல நாம் போராளியின் பல கொணங்களைக் கண்டோம். இன்று லண்டனில் வாழும் புதியவன் கல்விகற்று விரிவுரையாளரானதும்  அதை விடுத்து தனது கருத்தைப் பகிர இன்று தான் இயக்கும் கதையையும் கூறினார். புலம் பெயர்ந்த இந்திய, இலங்கை பெண்களின் வாழ்வு, மணவாழ்வில் சந்திக்கும் பிரச்சினையை தன் சினிமாவின் கருப்பொருளாக அவர் எடுத்திருக்கிறார்.

அனுபவம் மிக்க இலக்கிய கர்த்தாக்கள் ஆர்வலர்கள் நம் தேசம் வரும் போது அவர்களை அழைப்பித்து சந்தித்து விடயங்களைப் பகிர்ந்து கொண்டதுமுண்டு. ஈழத்தின் பிரபல எழுத்தாளர் தாமரைச்செல்வி ஈழத்து இலக்கியத்தில் பேசப்படாத விடயங்கள் பற்றிய பகிர்வைத் தந்திருந்தார்.ஞானம் சஞ்சிகையின் இணை ஆசிரியர் திருமதி ஞானம் அவர்கள் இங்கு வருகை தந்திருந்த போது  ஞானம் சஞ்சிகை பற்றிய அறிமுகத்தைத் தந்து எல்லோருக்கும் ஞானத்துக்கு எழுத அழைப்பிதழையும் தந்து சென்றார். இங்கு வாழும் இளம் குறும்பட இயக்குனர் செல்வன் இன்றய உலகில் குறும்படங்களும் ஆவணப்படங்களும் வரலாற்றில் பெறும் வரலாற்று முக்கியத்துவம் பற்றிய சிந்தனையைத் தந்து நம்மை எண்ணிம உலகத்தில் நாம் செய்யத்தக்க சாத்தியப்பாடுகளை சொல்லிச் சென்றார்.

வயது வித்தியாசம் கிடயாது பதின்ம வயது தொட்டு பாட்டிகள் வயது வரை ஆர்வம் ஒன்றே காரணமாதலால் கூடுகிறோம்.பல பல விஷயங்களைப் பகிர்கிறோம்.பரமற்ரா பூங்கா எங்கள் கூடுமிடம். இயற்கை அழகுடன் தேநீர் அருந்திய வண்னம் எமது கருத்துப் பரிமாற்ரம் ஆரம்பமாகும்.கோடையில் இயற்கையின் அழகும் சுவாத்தியமும் நமக்கு லாவகமாகவே அமைந்து விடும். இயற்கையை ரசித்த வண்னம் இலக்கிய சர்ச்சையில் ஈடு பட்டோம். குளிர் ஆரம்பமாக யாழ் நிகழ்வரங்கு இவ்வாறு கூடும் ஆர்வலருக்கு கைகொடுத்து உதவும். அன்று புலவர்கட்கு மன்னர்கள் கைகொடுத்து அவர்களை ஆதரித்தது இன்றுவரை பேசப்படுகிறது. ஆனால், யாழ்நிகழ்வரங்கின் இளந் தொழில் அதிபர் திரு.சுஜன் எங்கள் ஆர்வத்துக்கு அனுசரனையாக இருப்பது அக்கால மன்னர்களின் செயலுக்கு எந்த வகையிலும் குறைந்ததல்ல. ஏன் Parramatta MRC மக்களின் தொழில் கலை வாழ்வு வளம்பெற உதவுவது. அதுவும் எமக்கு கூடிப் பேச இடம் வழங்கி உதவியது.

கடந்த வருடம் உயர்திணை அமைப்பின் முதல் வருட நிறைவு யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் ஜீவநதி சஞ்சிகையின் அறிமுக விழாவாக நடந்தது. இந்த விழாவுக்கு எழுத்தாளர் முருகபூபதி மெல்போர்னில் இருந்து வந்து கலந்து கொண்டார். இணையத்தில் பதிவர்களாக இருக்கும்  ஜே.கே, ஜெயகெளரி, கேதாரசர்மா, கானாபிரபா அகியோரும் தூரத்திலும் அண்மையிலுமாக இருந்து வந்து கலந்து கொண்டார்கள்.அத்துடன் இலக்கிய உலகில் அனுபவம் மிக்க மூத்த இலக்கிய கர்த்தா அம்பி அவர்கள் முதற்கொண்டு தமிழரசி சின்னையா, பேராசிரியர். காந்தராஜா உட்பட பலரும் கலந்து கொண்டு காத்திரம் மிக்க கருத்துக்களை பகிர்ந்து சென்றார்கள். இரண்டு சந்ததி சந்தித்த நிகழ்வாகவும் இரண்டு விதமான இலக்கியசிந்தனைகள் பார்வைகள் கைகுலுக்கிக் கொண்ட நிகழ்வாகவும் அது இருந்தது.

உயர்திணை அமைப்பு உயர்ந்த நோக்கங்களைக் கொண்டு இயங்குவது. அது தனக்கென ஒரு இணையப் பக்கத்தையும் கொண்டிருக்கிறது. ஆர்வமுள்ளவர்களும் தூர உள்ளவர்களும் கலந்து கொள்ள இயலாதவர்களும் அங்கு சென்றும் நடைபெறும் விடயங்கள் பற்றிய விபரங்களை அறியலாம். அதன் முகவரி  www.uyarthinai.wordpress.com

உயர்திணையின் அங்கத்தவரான செல்வம் அஞ்சப்பர் செட்டி நாட்டு உணவகத்திலே கடந்த நமது ஒன்றுகூடலை நடாத்த அழைப்பு விடுத்தார். தமிழ் மணம் கமழும் உணவு மட்டுமல்ல உணவகத்தின் அலங்காரங்களும் சுவரில் அமைந்து காணப்படும் பெரும் பெரும் ஓவியங்களும் தமிழின் மணத்தை பறைசாற்றிய வண்னம் இருந்தது.செல்வத்தின் விருந்தினராக மட்டுமல்ல அவர்களின் முதன்மை பங்குதாரரான பழக்கப்பட்ட மடப்பள்ளி விற்பன்னர் திரு ராஜகோபால் அவர்களும் எமது கலந்துரையாடலில் பங்குபற்றி தென்னக உணவுப் பண்பாடு பற்றி சிறந்த ஒரு உரையினை ஆற்றினார்.’ ஒருவருக்கு உணவு வழங்குவதானால் முதன் முதல் தன் மகளை மணமுடித்து வீட்டுக்கு முதன் முதல் வந்த மாப்பிள்ளைக்கு உணவு வழங்கும் பக்குவத்தோடும் உபசரிப்போடும் உணவு வழங்கவேண்டும் என்று கூறி எம்மை வியக்கவைத்தார். தமிழகத்தின் விருந்தோம்பல் பண்பாடு அதுவோ?

அன்றய கலந்துரையாடலுக்கு எடுத்துக் கொண்ட விஷயம் நாம் எதை விரும்பி ரசிக்கிறோம்; அதனை எவ்வாறு வளர்க்கிறோம் எனப் பேச இருந்தோம்.ஆனால் வாய்க்கு ருசியான உணவை எமக்களித்து எம் வாயை அடக்கி விட்டாரா செல்வம்!அல்லது அமோக விருந்தால் எம்மை மதி மயங்க வைத்து விட்டாரா செல்வம்!! அவர் எமக்குக் கிடைத்த செல்வம் தான்.

இவ்வாறு ஒரு இலக்கிய சந்திப்பு நடத்த வேண்டும் என்ற சிந்தனை யசோதா.பத்மநாதனின் உள்ளத்திலே ஒரு பொறியாகத் தோன்றியது. ஆனால் இன்று இலக்கிய ஆர்வலர்களுக்கு உயர்திணை ஒளியாக அமைந்து விட்டது.இது தமிழ் இலக்கியத்தில் ஆர்வமுள்ளவரைக் கண்டறியவும்; உறவை வளர்த்துக் கொள்ளவும் கூட ஒரு சாதனமாக உதவுகிறது.

உயர்திணை மேன்மேலும் உயர்ந்து வளர வாழ்த்துகிறோம்.

 
Leave a comment

Posted by on 25/09/2013 in Uncategorized

 
Image

இலக்கிய சந்திப்பு – 16 –

இலக்கிய சந்திப்பு - 16 -

 

 
Leave a comment

Posted by on 25/09/2013 in Uncategorized