இலக்கிய நெஞ்சங்கள் எல்லோருக்கும் உயர்திணையின் புத்தாண்டு பொங்கல் வாழ்த்துக்கள்!
புதியவருடம் நலங்களையும் வளங்களையும் செழுமையையும் தமிழுக்கும் தமிழருக்கும் கொண்டு வந்து சேர்ப்பதாக!
கடந்த இரு வருடங்களாக பரமற்றா புலம்பெயர்ந்தோர் வளநிலய ஆதரவோடும் ( CMRC) சில மாதங்களில் பூங்காக்களிலும் மைதானங்களிலும் யாழ் நிகழ்வரங்க நிர்வாகிகளின் ஆதரவோடு யாழ் நிகழ்வரங்கிலும், ‘அஞ்சப்பரின்’ விருந்தோம்பலோடு அவர்களது உணவகத்திலும் நடைபெற்றுக் கொண்டிருந்த நம் இலக்கியச் சந்திப்புக்கு புதிய ஆண்டில் இருந்து புதிய இடம் ஒன்று கிடைத்திருக்கிறது.
ஆம்! ஈழத்தமிழர் கழகம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் ஈழத்தமிழர் புலம்பெயர்ந்த ஆரம்ப காலத்தில் நிறுவப்பட்ட தமிழர் கழகமாகும். அது பல சமூக நல திட்டங்களில் தன்னை இணைத்து சமூக சேவைகளை பல ஆண்டுகளாக ஆற்றி வருகிறது.
அவர்களுக்காக அவுஸ்திரேலிய மாநில அரசு தமிழ் சமூகத்தினரின் தன்னார்வ சமூக செயற்பாடுகளுக்காக வீடொன்றினைக் கையளித்துள்ளது.
இங்கு தமிழ் சமூகத்தவர் தம் இலாப நோக்கற்ற சமூக நல சேவைகளுக்காக இந்த அழகிய கூடாரத்தைப் பாவிக்க காலம் கைகூடி இருக்கிறது.
ஈழத்தமிழர் கழகத்திற்குக் கிடைத்த இந்த அங்கீகாரமும் வெகுமானமும் அவர்களின் உழைப்புக்கு அரசு கொடுத்த சன்மானமாகும். அதன் பொருட்டு – குறிப்பாக அதன் நிர்வாக பீடத்திற்கு உயர்திணை தன் தலை தாழ்ந்த வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றது.
உத்தியோக பூர்வமான திறப்பு விழா தமிழுக்கு தைத்திங்கள் முதல் நாளன்று 14.1.14 அன்றுபொங்கல் தினத்தோடு உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது.
தமிழுக்கும் தமிழருக்கும் அரசாங்கத்தினால் கிடைத்த இந்த உயர்வான அங்கீகரத்துக்கு உழைத்த எல்லோருக்கும் மீண்டும் எம் நன்றியையும் தெரிவிக்கும் அதே வேளை இவ்வாறு ஒரு இடம் தமிழருக்குக் கிடைத்தது என்பதை மகிழ்ச்சியோடு நமக்கு அறியத்தந்து பொங்கலன்றான திறப்பு விழாவுக்கும் நம்மை அழைத்தமைக்கும் கூடவே எவ்வித தயக்கமும் இன்றி நமக்கும் அங்கு நம் மாதாந்த இலக்கிய சந்திப்பை நடாத்த கருணைகூர்ந்து இடம் ஒதுக்கித் தந்ததற்கும் நம் நெஞ்சார்ந்த நன்றியையும் வணக்கத்தையும் வாத்சல்யத்தையும் தெரிவித்து பெருமிதம் கொள்கிறோம்.
தமிழால் இணைந்திருப்போம்!