RSS

Monthly Archives: March 2014

விண்ணைத் தாண்டி வருவேனே! (சிறுகதை) ஸிட்னி இரா. சத்யநாதன்

 

டேவிட்  தனது இருக்கையில் இருந்தவாரே கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே பார் த்தான். காலை பத்து மணிதான் என்ற போதும் மார்ச் மாத வெய்யில் அந்த நேரத்திலும் சற்று உக்கிரமாகவே இருந்தது. 

‘டிம் இன்னும் வரவில்லை; நேரத்திற்கு வந்துவிடுவானே; ட்ரபிக் ஜாமில் மாட்டிக் கொண்டிருக்க வேண்டும்’ என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டான். ‘டிம் நல்லவன். அவனைப்போல, தொழிலில் அக்கறையும் திறமையும் உள்ளவனைத் தேடிப்பிடிப்பது இலேசல்ல’ என்பது டேவிட்டுக்குத் தெரியும்.

 விவசாயிகளுக்கு மாரி பொய்த்துப்போவது போல, டேவிட்டுக்கு இந்த கோடையும் பொய்த்துப்போனது.’ டிசம்பர் தொடக்கம் மார்ச் வரை நீடிக்கும் இந்த வெய்யில் காலத்தில் பிஸினஸ் நன்றாகவே நடக்கும்; எப்படியாவது ஒரு புதிய ஹெலிகாப்டர் வாங்கிவிடலாம்’ என்று நினைத்திருந்தான். இருநூறு கில்லோ மீட்டர் வேகத்தில் பதினாலு பேரை ஏற்றிக்கொண்டு பறக்கக்கூடிய, ‘ஸிக்கோஸ்கி – எஸ் 76(Sikorsky -s76) வகை ஹெலிகாப்டரை, சில மாதங்களுக்கு முன்புதான், பாரிஸில் நடைபெற்ற ஹெலிகாப்டர் ஷோ ஒன்றில் பார்த்திருந்தான். வேகம் மட்டுமல்ல, பாதுகாப்பும் அதிகம் உள்ள ‘ட்வின் எஞ்சின்’ ஹெலிகாப்டர் அது.

அந்த வருட இறுதியில் ‘ஸிட்னி 2000’ ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறவிருந்ததால், வருடத்தின் முற்பகுதியிலேயே பெருந்தொகையான உல்லாசப் பயணிகள் வெளிநாடுகளில் இருந்து வந்து குவிவார்கள் என்று உல்லாசப் பயணத்துறை கணித்திருந்தது. ஆஸ்திரேலிய டாலரின் பெறுமதியும் வீழ்ச்சியடைந்திருந்ததால், இது வெளிநாட்டு உல்லாசப்பயணிகளுக்கு சாதகமாக இருக்கும் என்றும் பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அது நடக்கவேயில்லை.

‘ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நெருங்க நெருங்க, அடுத்தடுத்த மாதங்களில், பிஸினஸ் சூடு பிடிக்கும் என்பது நிச்சயம். அப்போதும் என்னிடம் இந்த பழைய ‘த்ரீ ஸீட்டர்’, ‘போர் ஸீட்டர்கள்’ தானே இருக்கும். இவற்றை வைத்துக்கொண்டு காசு பார்ப்பது எப்படி’ என்பதே அவனது சிந்தனையாக இருந்தது.

டேவிட்டிடம் இரண்டு ‘BELL 47 G’யும் ‘ROBINSON  R 22’ ஒன்றும் இருந்தன. ROBINSON சற்றுப் புதிது. ஆனால் இரண்டு BELL லும் 1976 இல்  தயாரிக்கப்பட்டவை. பெல் நிறுவனம், ஜப்பானில் காவசாகி நிறுவனத்துடன் இணைந்து தயாரித்த கடைசி மாடல் அது.    

 டிம் காரை, கார் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு வருவது தெரிந்தது. டிம் இன்று வழக்கத்திற்கு மாறாக, சந்தோஷமாக, விசில் அடித்தபடி, வந்து கொண்டிருந்தான். இன்று தொடக்கம் அவன் தன் மகளுக்கு, பராமரிப்புத்தொகை கட்டவேண்டியதில்லை என்பதுதான் அவனது மகிழ்ச்சிக்குக் காரணம்.

அவனது மகளுக்கு நேற்றோடு பதினெட்டு வயது ஆகிவிட்டது. எட்டு வருடங்களுக்கு முன்பு, அவனது மனைவி விவாகரத்துப் பெற்று, மகளையும் கூட அழைத்துக்கொண்டு,

பிரிந்து சென்றுவிட்டாள். அதன் பின்பு அவள் வேறொரு திருமணம் செய்துகொண்டாள். அவளது புதிய கணவனுக்கும் அவனது முந்தைய மனைவி மூலமாக  இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.

 தனது மகளுக்கு பதினெட்டு வயதாகிவிட்டதால், டிம் இனி, பராமரிப்புத்தொகை கட்டத்தேவையில்லை. தனது காதலி, ரோஸியைத் திருமணம் செய்து கொள்வதற்கும் அவனுக்குத் தடையில்லை. ரோஸியும் முன்பு ஒருவனோடு ‘டி பெக்டோ’ வாக (de-facto) இருந்தவள் தான். ஆனால் அவளுக்குக் குழந்தைகள் இல்லை.

“ஹாய்….பாஸ்..” என்று சொல்லிக்கொண்டே,  டிம் உள்ளே நுழைந்தான். வைட்போர்ட்டில் எழுதப்பட்டிருந்த நாளாந்த ஸெட்யூலை நோட்டம் விட்டான்.

” ஒரு கஸ்டமர் பத்து மணிக்கு…..பிறகு ..ஒரு மணிக்கு இன்னொன்று..?” என்று டேவிட்டைப் பார்த்துக் கேட்டான்.

 டேவிட் ‘ ஆம்’ என்பது போல இலேசாகப் புன்னகை செய்தான்.

 அப்போது, சடாரென்று கண்ணாடிக் கதவைத்திறந்து கொண்டு, ஒரு பெண் உள்ளே நுழைந்தாள்.

 இவள் எப்போது வந்தாள்? எப்படி வந்தாள்? கார் பார்க்கிங்கில் புதிதாக கார் ஏதும் பார்க் செய்யப்படவில்லையே? டாக்ஸியில் வந்திருப்பாளோ?’ இருவரது சிந்தனையும் ஒரே மாதிரியாகத்தான் இருந்தது.

 அவள் நல்ல அழகி. நல்ல உயரம். வயது சுமார் முப்பத்தைந்து இருக்கலாம். ரஷ்யப் பெண்ணாக இருக்கவேண்டும். அல்லது ரஷ்ய ரத்தம் கலந்தவளாக அவள் இருக்கக்கூடும் என்று டேவிட் நினைத்தான்.

 அவள் கோடைக்காலத்திற்கு இதமாக, கொஞ்சமாக உடை அணிந்திருந்தாள். மேலே கை இல்லாத ஒரு ‘சிங்லட்’ ; கீழே, அநியாயத்திற்கு சிறிய ஸைஸில் ‘ ஷார் ட்ஸ்’ ; காலில் ‘தொங்ஸ்’ என்ற ரப்பர் செருப்பு ; கைகளில், இரண்டு ‘ ஷாப்பிங் பைகளில்’ எதையோ திணித்து வைத்திருந்தாள். 

“ஹாய்… நான் லூஸி…   பத்து மணிக்கு ‘புக்’ செய்திருந்தேனே..! “

 “ஓ….. நோ ப்ரப்ளம்….நான் டேவிட்….. இது டிம்……..டிம்…..இது லூஸி…உன்னுடைய கஸ்டமர்..   ” என்றான் டேவிட்.

 “இந்தப்பக்கமா வாங்க மேடம்…” என்றபடி, லூஸி பின் தொடர, பின் கதவைத்திறந்து கொண்டு, ஹெலிகாப்டர்கள் நிறுத்தப்பட்டிருந்த புல் வெளிப்பகுதிக்குச் செல்ல முற்படும் போது, லூஸி கையில் இருந்த பைகளை மீண்டும் கவனித்தான், டேவிட்.

 “அது எதற்கு இடைஞ்சலாக..அங்கே அந்த நாற்காலி மேலே வைத்து விட்டுப் போகலாமே…?”

 அவள் அதைக் காதில் வாங்கிக்கொண்டதாகவே தெரியவில்லை.

 ‘த்ரீ ஸீட்டர் ஹெலி தானே….பக்கத்து ஸீட்டில் வைத்துக்கொள்வாள்’ என்று

முடிவு செய்து கொண்டு, ‘ பதினாலு ஸீட்டர்’ கனவுகளில் மீண்டும் மூழ்கிப்போனான் டேவிட்.

 “இப்போது நாங்கள் ஹோம்புஷ் பே பகுதியை நோக்கிப் பறந்துகொண்டிருக்கிறோம். அஞ்சே நிமிஷந்தான். அதுக்குப்பிறகு, ‘ஸிட்னி 2000’ ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறப்போகும் பகுதியில் இரண்டு சுற்று சுற்றி விட்டு, ஹார்பர் பிரிட்ஜ் ட்ரெக்கைப் பிடித்தால், பத்தே நிமிஷத்திலே ஹார்பர் பிரிட்ஜ், சேர்குலர் கீ, ஒப்பரா ஹவுஸ், ஸிட்டி என்று பெரிய ரவுண்ட் ஒன்று அடித்துவிட்டு, சரியாக முப்பதே  நிமிஷத்தில மறுபடியும் இங்கே வந்து விடலாம். அதன்பிறகு, நீங்கள் விரும்பினால், அதோ அங்கே தூரத்தில், மேற்குப்பக்கமாகத் தெரியும் ஒலிம்பிக் வில்லேஜ், அக்குவாடிக்சென்டர் எல்லாம் தொட்டுக்கொண்டு திரும்ப வேண்டியதுதான்.” டிம் மூச்சு விடாமல் சொல்லிக்கொண்டே வந்தான்.

 அவள் ஒன்றுமே பேசவில்லை. அடிக்கடி கைக்கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டாள்.

 ஹெலிகாப்டரின் முதுகின் மீது சுழன்றுகொண்டிருந்த இராட்சத ரோட்டர்களின் சப்தம்  காபினுக்குள்ளும் தெளிவாக க் கேட்டது. காபினும் கூரைப்பகுதியும் கண்ணாடி முட்டை போன்ற வடிவத்தில் இருந்ததால், தலைக்கு மேலே ரோட்டர் சுழல்வது நன்றாகவே தெரிந்தது. தலைக்கு மேலே வானத்தையும் இடம், வலம் மற்றும் முன்பக்கம் அனைத்தையும் சுமார் நூற்றியென்பது பாகை கோணத்தில் சீராகப் பார்க்க முடிந்தது.

 முழுமையாக க் கட்டி முடிக்கப்பட்டிருந்த பிரதான விளையாட்டரங்கு, மிக அருகில் தெரிந்தது.

 டிம், லாவகமாக ஒரு ரவுண்ட் அடித்துவிட்டு, மீண்டும் சற்று மேலே எழும்பி, குறுக்கு வெட்டாக மெதுவாகப் பயணித்தான். அதற்குள் அவள் பலமுறை, கைக் கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டாள்.  இப்போது அவள் பார்வை, இடது பக்கத்தில், ஏதோ ஒரு பகுதியை நோக்கித் திரும்பியிருந்தது.

 ஹெலிகாப்டரில் ஏறிய பின்பு, அவள் முதல் முறையாகப் பேசினாள்.

 “அதோ… அங்கே……நாலுபக்கமும் கட்டடம்; நடுவிலே ஒரு புல் தரைப் பகுதியும் தெரிகிறதே….. அது என்ன?”

 டிம் ஹெலிகாப்டரைச் சற்று சரித்து, அவள் காட்டிய திசையில் பார்த்தான்.

 “ஓ…… அதுவா…….?  அதுதான் ‘ ஸில்வர்வோட்டர் ஜெயில்’. அந்தப் பகுதியில் இந்த அளவுக்கு தாழ்வாகப் பறக்கமுடியாது. வேண்டுமானால், கொஞ்சம் உயரம் போய், மூன்றே நிமிஷத்தில் சுற்றிக்கொண்டு வந்துவிடலாம்.”

 “நிச்சயமாக, டிம்” என்றாள் அவள்.

 கண்மூடி, கண்திறப்பதற்கு முன், ஹெலிகாப்டர், ‘ ஸில்வர்வோட்டர்’ ஜெயிலுக்கு மேலே வட்டம் போட்டுக் கொண்டிருந்தது.

 “இன்னும் கொஞ்சம் கீழே போக முடியாதா?” அப்பாவி போலக் கேட்டாள் லூஸி.

 “நிச்சயமாக முடியாது மேடம். பாதுகாப்பு அதிகமான பகுதி இது..”

 லூஸி சட்டென்று ஷாப்பிங் பைக்குள் இருந்து எதையோ வெளியில் எடுத்தாள். அதை அவனது முகத்திற்கு அருகில் கொண்டு வருவது தெரிந்தது. அது என்ன என்று அவன் பார்க்க எத்தனிக்கும் முன்பே, அவனது இடது கண்ணுக் கும் காதுக்கும் இடையில் அதை வைத்து கையால் அழுத்தினாள். அதிர்ச்சியடைந்த டிம், மெதுவாக ஓரக்கண்ணால் அது என்ன என்று பார்த்தான்.

 லூஸியின் கையில் இருந்தது, ஒரு சிறிய பிஸ்டல்.

 அவள் அமைதியாகச் சொன்னாள்:

 “டிம், அங்கே கீழே, ‘ ஸில்வர்வோட்டர்’ ஜெயிலில், ஒரு நபரை நான் பிக் -அப் செய்யவேண்டியிருக்கிறது. நான் சொல்லுகிறபடி நீ நடந்து கொண்டால், உன் உயிருக்கு பழுதில்லை. “

 “அது செய்யக்கூடிய….. காரியம் மாதிரி…… எனக்குத் தெரியவில்லை…” டிம் பதட்டத்துடன் கூறினான்.

 “அதைப்பற்றி நீ கவலைப்படாதே! நான் சொல்லுகிறபடி மட்டும் நீ செய்,….. புரிகிறதா?”

 “ம்……”

 “அதோ பார்! அங்கே கட்டடங்களுக்கு நடுவில் இருக்கும் புல்வெளியில், கைதிகள் உடற்பயிற்சி செய்துகொண்டிருக்கிறார்கள். அங்கே…..தெற்கு மூலைப்பக்கமாக இறங்கு. இறங்கின பின், என்ஜினை ‘ஆப்’ செய்துவிடாதே……சரி..சரி…சீக்கிரமாக இறங்கு.”

 டிம் ஒரு கணம் யோசித்தான். ‘ட்ரான்ஸ்பொன்டர்’ பட்டனை அழுத்துவதற்காக, விரலைக் கொண்டு போனான்.

 பிஸ்டலால் அவன் விரல் மீது ஓங்கி அடித்தாள், லூஸி.

 “ஓ….கோட்…” என்று அலறினான் டிம்.

 “டிம், உன்னால் முடிக்க முடியாத எதையும் ஆரம்பித்து விடாதே….” லூஸியின் வலது கை சுட்டு விரல், பிஸ்டலின் ‘ட்ரிகரில்’ உறுதியாக இருந்தது.

 ‘இவள் போதுமான ‘ ஹோம்வர்க்’ செய்துவிட்டுத்தான் வந்திருக்கிறாள் ‘ என்பது டிம்முக்குப் புரிந்துவிட்டது. ‘ ட்ரான்ஸ்பொன்டர்’ பட்டனை அழுத்தியிருந்தால், தான் ஆபத்தில் சிக்கியிருப்பது, தரையிலுள்ள கட்டுப்பாட்டறைக்கு, தெரியவந்திருக்கும்.

 டிம் தலையில் மாட்டியிருந்த ‘இயர்போனை’யும், லூஸி பலவந்தமாக க் கழற்றி கீழே எறிந்தாள். ‘டேஷ்போர்ட்டில்’ இருந்த ‘ ரேடியோ  கம்யுனிகேசன்’ சுவிச்சையும் ‘ஆப்’ செய்தாள். ‘மெக்னடோ சுவிச்’சில் கை வைக்க க் கூடாதென்பது அவளுக்குத் தெரிந்திருந்தது. அதை ‘ஆப்’ செய்தால், ‘பவர்’ துண்டிக்கப்பட்டுவிடும்.

 வலது கையில் பிஸ்டலைப் பிடித்தவாறே இடது கையால் மீண்டும் ஷாப்பிங் பைகளைக் குடைந்தாள், லூஸி.

 இப்போது அவள் கையில் இருந்தது, ஒரு ‘ஆட்டோமட்டிக்’ துப்பாக்கியின் மூன்று வெவ்வேறு பாகங்கள்.

 நன்கு பயிற்சி பெற்ற போராளி போல, முப்பது செக்கன்ட்களில், மூன்று பாகங்களையும் ஒன்றாக இணைத்தாள், லூஸி. சுமார் இரண்டு அடி நீளமான, ‘ஆட்டோமட்டிக்’ துப்பாக்கி ஒன்று இப்போது அவள் கையில் தயாராக இருந்தது.

 ‘இனி, இவளது ‘ட்யூனுக்கு’ ஆடுவதைத் தவிர வேறு வழி யில்லை’ என்பது, டிம்முக்கு, சட்டென்று புரிந்தது.

 லூஸி சொன்ன இடத்தில் ஹெலிகாப்டரை இறக்கினான், டிம். தரையைத்தொட முன்னர், தொட்டில் போல, சற்று முன்னும் பின்னுமாக ஆடிய ஹெலிகாப்டர், நோகாமல், புல் தரையைத் தொட்டது. அதன் முதுகிலிருந்த ‘ரோட்டர்கள்’ படு வேகமாகவும் பலத்த சப்த த்துடனும் சுழன்று கொண்டிருந்தன. அந்த பலத்த சப்தம் நிலைமையை, இன்னும் படு பயங்கரமாக்கிக் கொண்டிருந்தது.

 புல்வெளியில் சுமார் ஐம்பது அல்லது அறுபது கைதிகள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தார்கள். சற்றுத் தொலைவில், ஓரிரு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் நின்றுகொண்டிருந்தார்கள். ஹெலிகாப்டர் இறங்கியதைக் கண்ட கைதிகள், தாங்கள் செய்துகொண்டிருந்த உடற்பயிற்சியை மறந்து, ஆச்சரியத்தில் உறைந்து போயிருந்தார்கள்.

 ஆனால் அவர்களுள் ஒருவன் மட்டும், ஹெலிகாப்டரை நோக்கி வந்து கொண்டிருந்தான். மற்றைய கைதிகளைப் போலவே, கரும் பச்சை நிற ‘ட்ராக் பேன்டு’ம் அதே நிறத்தில் ‘போலோ’ மேற்சட்டையும் அணிந்திருந்த அவன்,மிக வேகமாக ஓடி வந்து, ஹெலிகாப்டரின் கதவைத்திறந்து கொண்டு, உள்ளேநுழைந்தான். கதவைத் திறந்ததும், லூஸி கையிலிருந்த ‘ஆட்டோமட்டிக்’ கை, வாங்கிக்கொண்டான். பின்பு, பக்க வாட்டில் சரிந்து, பின்னால் இருந்த இருக்கையில் உட்கார்ந்துகொண்டான்.

 வெளியே, மற்றைய கைதிகள் மகிழ்ச்சி ஆரவாரம் செய்வது, கேட்டுக்கொண்டே இருந்தது.

 இருபத்துமூன்று வருட சிறைத்தண்டனை பெற்ற வங்கிக்கொள்ளைக்காரனான ஜோன், மூன்றே மாத த்தில் சிறையிலிருந்து தப்பிச் செல்வது, சார்லஸ் பரொன்சனின் ‘ப்ரெக்அவுட்’ (Break-out) திரைப்படத்தைப் பார்ப்பது போல ஜாலியாக இருந்தது அவர்களுக்கு.

 “எடு…எடு.. சீக்கிரமாக க் கிளம்பு…..” கத்தினான் ஜோன்.அப்போது சிறை பாதுகாப்பு அதிகாரி ஒருவர், கையில் ரிவால்வருடன் ஹெலிகாப்டரை நோக்கி ஓடிவருவதைக் கண்டான் ஜோன். படாரென்று, தனது இருக்கைக்குப் பக்கத்திலிருந்த சிறு ஜன்னலைத் திறந்து, தன்னிடமிருந்த ‘ஆட்டோமாட்டிக்’ கை அந்த அதிகாரியைக் குறி வைத்து திருப்பினான். ஜோன் கையிலிருந்த ‘ஆட்டோமாட்டிக்’கைக் கண்ட அந்த அதிகாரி உடனேயே பின் வாங்கினார்.

 தூரத்தில் துப்பாக்கிச்சத்தம் கேட்டுக்கொண்டேயிருந்தது. “ஜோன்….குட்லக்” என்ற கைதிகளின் கூச்சலும் தொடர்ந்து ஒலித்துக் கொண்டேயிருந்தது.

 ஹெலிகாப்டர் மெதுவாக மேலே எழுந்தது. திடீரென்று வேகம் எடுத்து, ‘ ஜிவ்’ வென்று விண்ணில் பாய்ந்தது. சட்டென்று மறைந்து போனது.

 “குட் ஜாப் மை பாய்..” டிம்மின் முதுகில் தட்டிக்கொடுத்தான் ஜோன்.

 டிம், திரும்பி, ஜோனைப் பார்த்தான். பின்பு எவ்வித உணர்ச்சியையும் வெளிக்காட்டாமல், முகத்தைத் திருப்பிக்கொண்டான்.

 ஜோன் மீண்டும் சொல்லத்தொடங்கினான்.

 “இதோ பார்…!  உன் கையில் இருக்கும் கோப்பைக்கும் உன் உதட்டுக்கும் இடையே உள்ள தூரத்தில்தான் உன் விடுதலையும் இருக்கிறது. நாங்கள் சொன்னபடி செய்தால், உனக்கு ஒரு பிரச்சனையுமில்லை.”

 லூஸி மீண்டும் பைகளைக் குடையத் தொடங்கினாள். நான்கைந்து வரைபடங்களை எடுத்து, மேலும் கீழுமாகப் பார்த்த பின், ஒரு வரை படத்தைத் தெரிவு செய்தாள். அதை டிம்மின் முகத்திற்கு முன் நீட்டினாள்.

 “டிம், இதோ பார்..! நாங்கள் இப்போது இந்த இடத்தில் இருக்கிறோம். வடக்குப்பக்கமாக, வட்டம் போட்டுக் காட்டப்பட்டிருப்பது, கிரிஸ்டி பார்க். இந்த பார்க், இங்கிருந்து சுமார், எட்டு கிலோ மீட்டரில் இருக்கிறது. அங்கே வடக்கு எல்லையில் ஆள் நடமாட்டம் இருக்காது. நேராக அங்கே கொண்டுபோய் இறக்கு. என்ன புரிகிறதா?”

 “சரி” என்று தலையை ஆட்டினான், டிம்.

 ஹெலிகாப்டர், நேர் கோட்டில் பறந்தது. ஸிட்னி, மாபெரும் நகரங்களுள் ஒன்று என்பதை நம்ப முடியாத வண்ணமாக, பார்க்கும் திசை எல்லாம், மரங்களே அடர்த்தியாக நிறைந்திருந்தன. கிழக்குப்பக்கமாக, தொலைவில், கோர்ட் ஹேங்கர்(coat hanger) வடிவத்தில், ஹார்பர் பிரிட்ஜும் பல உயர்ந்த கட்டடங்களும் தெரிந்தன.

 கிரிஸ்டி பார்க்கின் தெற்குப்பக்கத்தில், இருவழித்தடங்களைக் கொண்ட சாலை; வடக்கில், நெடுஞ்சாலை. நெடுஞ்சாலைக்கும் பார்க்குக்கும் இடையே உயரமான பெரிய மதில் எழுப்ப ப்பட்டிருந்தது.

 லூஸி சொன்னது போல, ஆள் நடமாட்டமில்லாத வடக்கு எல்லையில், லாவகமாக ஹெலிகாப்டரை இறக்கினான், டிம்.

 “சரி, பவரைக் கட் பண்ணு…” என்றாள் லூஸி.

 டிம் பவரைக் கட் பண்ணி, ரோட்டர்களின் சுழற்சியையும் எஞ்சினின் அதிர்வையும் நிறுத்தினான்.

 “சீக்கிரம் கீழே இறங்கு…” கத்தினான் ஜோன்.

 டிம் கீழே இறங்கி சற்றுத்தொலைவில் போய் நின்று கொண்டான். அவனைத்தொடர்ந்து, லூஸியும் ஜோனும் இறங்கினார்கள். ஜோன் தனது கையிலிருந்த ‘ஆட்டோமாட்டிக்’ கை ஹெலிகாப்டரின் பின் இருக்கை மீது தூக்கி எறிந்தான். ஆனால் லூஸி கையில் பிஸ்டல் இருந்தது.

 கீழே இறங்கியதுமே, ஜோனும் லூஸியும் ஆரத்தழுவிக் கொண்டார்கள்.

 “ஹனி…நான் உன்னை எவ்வளவு மிஸ் பண்ணினேன் தெரியுமா…?” என்று லூஸி பலமுறை சொன்னாள் . ஜோன், அவள் உதட்டின் மீது அடிக்கடி முத்தம் கொடுத்துக் கொண்டே யிருந்தான். இருவரும் கொஞ்ச நேரம் தாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதை மறந்திருந்தார்கள்.

 திடீரென ஏதோ ஞாபகம் வந்தவன் போல ஜோன் உரத்துக் கத்தினான்.

 “டிம்.. இங்கே வா!  ஹெலியில் ஏறிக்கொள்…”

 டிம்மின் கூடவே வந்து, டிம் ஸீட்டில் ஏறிக்கொண்டபின், அவன் அருகிலேயே நின்று கொண்டான் ஜோன். லூஸி, ஹெலியின் மற்றப் பக்கமாய்ப் போய், தான் கொண்டு வந்த பைகளை எடுத்துவந்தாள். அவற்றுக்குள் இருந்து, சிறியதும் பெரியதுமான இரண்டு நைலான் கயிறுகளை எடுத்து ஜோனிடம் கொடுத்தாள்.

 சிறிய கயிற்றால் டிம்மின் கைகளை இறுக்கமாக க்கட்டினான் ஜோன். பின்பு அவனை இருக்கையோடு சேர்த்து பெரிய கயிற்றால் கட்டி, இருக்கையின் பின்புறமாக முடிச்சைப்போட்டான். லூஸி தன் கையிலிருந்த பிஸ்டலை, ஷாப்பிங் பைக்குள் போட்டுக் கொண்டாள்.

 லூஸியின் ஷாப்பிங் பைகளில் இருந்து ஒரு காற்சட்டையையும் டீ சர்ட் ஒன்றையும் எடுத்து அணிந்து கொண்டான் ஜோன். சிறைச் சீருடை யை, பையினுள் திணித்துக் கொண்டான்.

 எந்த அவசரமும் இல்லாமல், இருவரும்  கைகோர்த்துக் கொண்டு,

 தெற்குப்பகுதியில் இருந்த சாலையை நோக்கி இருவரும் நடக்கத் தொடங்கினார்கள்.  இருவரும்,  உல்லாசமாகப் பொழுதைக் கழிக்க வந்த காதலர்களைப் போல, ஒருவரை மற்றவர் அணைத்தபடி நடந்து போய்க்கொண்டிருப்பதை, ஹெலியின் ஜன்னலூடாகப் பார்த்துக் கொண்டிருந்தான், டிம்.

 இருவரும் சாலைக்கு வந்தார்கள். மேலும் கீழுமாக நிறைய வாகனங்கள் சென்றுகொண்டிருந்தன. சிறிது நேரத்தில் டாக்ஸி ஒன்று வந்தது. கையை உயர்த்தி டாக்ஸியை நிறுத்தினான் ஜோன். டாக்ஸி அவர்களுக்கு அருகில் வந்து நின்றது.

 “மெல்பர்ன் போகலாமா?” ட்ரைவரிடம் கேட்டான், ஜோன்.

 டாக்ஸி ட்ரைவருக்குத் தனது காதுகளையே நம்பமுடியவில்லை. ‘ஸிட்னியில் இருந்து மெல்பர்னுக்கு டாக்ஸியா?’

 உற்சாகமாக இறங்கி, டாக்ஸியின் பின் கதவைத் திறந்து விட்டான் ட்ரைவர். அவர்கள் இருவரையும் ஏற்றிக்கொண்ட டாக்ஸி, மெல்பர்னை நோக்கி பயணிக்கத் தொடங்கியது.

 ஆறு வாரங்கள் கழித்து, Sydney Morning Herald பத்திரிகையில், இந்தச்செய்தி, தலைப்புச்செய்தியாக வந்திருந்தது.

 பிரபல வங்கிக் கொள்ளைக்காரன் ஜோன் பிடிபட்டான்பிணமாக!

ஆறு வாரங்களுக்கு முன் ஸில்வர்வோட்டர் ஜெயிலில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாகத் தப்பிச்சென்ற ஜோன் (வயது 50)நேற்று பிடிபட்டான். ஆனால் காவல் துறையின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல, அவன் இப்போது உயிரோடு இல்லை என்பதுதான் தூரதிர்ஷ்டம்.

 ஸிட்னிக்கு மேற்கே ‘பேஸ் ஹில்’ (Bass Hill) என்ற இடத்திலுள்ள, கரவன் பார்க் ஒன்றின் உரிமையாளர் கொடுத்த தகவலின் பேரில், நேற்று பிற்பகல் அங்கு விரைந்த பொலிஸார், அங்குள்ள காபின் ஒன்றினுள் ஜோன் இறந்து கிடந்ததைக் கண்டார்கள்.ஜோனின் இருதயத்தை, துப்பாக்கி ரவை ஒன்று துளைத்திருந்தது. அந்தக் காபினில் இருந்த லூஸி என்ற பெண் (வயது 36) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறாள்.

 ஸில்வர்வோட்டர் ஜெயிலில் இருந்து, லூஸிதான் ஹெலிகாப்டர் மூலமாக ஜோனை விடுவித்திருக்க வேண்டும் என்று போலிஸார் சந்தேகம் தெரிவித்திருக்கிறார்கள்.

 வங்கிக் கொள்ளைகளில் கொள்ளையடிபக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை, ஜோன் எங்கோ மறைத்து வைத்திருக்க வேண்டும் என்றும் அது தொடர்பாக ஜோனுக்கும் லூஸிக்கும் ஏற்பட்ட வாக்குவாத த்தில், லூஸி, பிஸ்டலால் ஜோனைச் சுட்டிருக்க வேண்டும் என்றும் ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

 ஜோன், இதற்கு முன்னர், மெல்பரன் பென்ட்ரிஜ் ஜெயிலிலும் ஸிட்னி லோங்பே ஜெயிலிலும் கைதியாக இருந்திருக்கிறான். 1999 இல், ஸிட்னி, மெரிக்வில் பகுதியில், நேஷனல் ஆஸ்திரேலியா வங்கியின் காசாளரைச் சுட்டுக் கொன்றுவிட்டு, ஐம்பதினாயிரம் டாலர்களைக் கொள்ளையடித்துச் சென்றது தொடர்பாக, 23 வருட சிறைத்தண்டனை விதிக்கப் பட்டு, ஸில்வர்வோட்டர் ஜெயிலில் ஜோன் அடைக்கப்பட்டிருந்தான்.   

             ்்்்்்்்்்்்்்்்

(குயின்ஸ்லாந்து மாநில தாய் தமிழ் பள்ளி நடாத்திய “அவுஸ்திரேலியா பலகதைகள்” சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு பெற்ற நம் உயர்திணை அங்கத்தவர் திரு. சத்தியநாதன் அவர்களுடய சிறுகதை)

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 
Leave a comment

Posted by on 29/03/2014 in Uncategorized

 

இலக்கிய சந்திப்பு – 18 –

Image

 

அன்புள்ள இலக்கிய உள்ளங்களே!

மனங்கள் எல்லாம் சுகம் தானா?

கடந்த இரண்டு வாரங்களின் முன்னால் நம் இலக்கிய சந்திப்பின் அங்கத்தவர் யாழ்புத்தர் என இணையத்தளங்களுக்கு அறிமுகமான திரு. இரட்னசீலன் அவர்களின் மைத்துணர் அகால மரணமான செய்தியை நாம் எல்லாம் அறிந்திருப்போம். முதலில் அத் துயரை உங்கள் எல்லோரோடும் பகிர்ந்து கொள்வதோடு அவ் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்திப்போம்.

வாழ்க்கையோ நகர்ந்து கொண்டிருக்கிறது. விரும்பியோ விரும்பாமலோ நாமும் நகர நிப்பந்திக்கப் பட்டிருக்கிறோம்.

கடந்த சந்திப்பில் நம் ’குறுமுனி’ தனபால சிங்கம் ஐயா அவர்கள் “சங்ககாலத்து ஒளவையை” நமக்கு அடையாளம் காட்டிச் சென்றார். அச்சந்திப்பின் பருமட்டான தொகுப்பு இருபகுதிகளாக நம் உயர்திணை இணையப் பக்கத்திலும் அஷ்யபாத்திரம் என்ற இணையப்பக்கத்திலும் பிரசுரமாகி இருக்கிறது. அதைப் பற்றிப் பார்க்க, கருத்துச் சொல்ல விரும்புகின்ற நலன் விரும்பிகள்

http://akshayapaathram.blogspot.com.au/

http://akshayapaathram.blogspot.com.au/

ஆகிய இணையப் பக்கங்களுக்குச் சென்று பார்க்கலாம். கருத்துக்கள் கிட்டினால் உவப்பாக இருக்கும் என்பதைச் சொல்ல வேண்டியதில்லைத் தானே!

இம் மாதம் ஏற்கனவே உறுதிப் படுத்தி இருந்த படி மெல்போர்ன் மாநிலத்தில் இருந்து எழுத்தாளர் விழாவுக்காக குயின்ஸ்லாந்து மாநிலத்துக்குப் பயணமாகும் எழுத்தாளர் முருகபூபதி அவர்கள் விழாவினை முடித்து திரும்பும் வழியில் நம் சந்திப்பிலும் கலந்து கொள்வதற்காக சிட்னி மாநகருக்கு வருகிறார்.

அதே வேளை நம் உயர்திணை அங்கத்தவர் திரு. சத்தியநாதன் அவர்களின் சிறுகதைக்கு “அவுஸ்திரேலியா பலகதைகள்” என்ற தலைப்பில் பிறிஸ்பேர்ன் தாய் தமிழ் பள்ளி நடாத்திய சிறுகதைப் போட்டியில் மூன்றாம் பரிசு கிட்டியிருப்பதையும் உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள். அச்சிறுகதையை நம் எல்லோருக்குமான வாசிப்பனுபவத்துக்காக திரு. சத்தியநாதன் அவர்கள் அனுப்பி வைத்திருக்கிறார்.

வாழ்வனுபவத்தை இம்மாத அதிதி திரு. முருகபூபதி அவர்கள் நிகழ்த்துவார்கள். வாசிப்பனுபவத்தை – இச் சிறுகதையை வாசித்த அனுபவத்தை அங்கத்தவர்கள் பகிர்ந்து கொள்ள அதன் ஏற்புரையை – எழுத்தனுபவ சிலிர்ப்பை – அதன் ஆதர்ச உருவாக்க அனுபவத்தை பரிசுச் சிறுகதை ஆசிரியர். திரு. சத்தியநாதன் அவர்கள் நிகழ்த்துவார்கள்.ஆகையால் இலக்கிய சுவைஞர்கள் வரும்போதே இச் சிறுகதையை வாசித்து அதன் அனுபவத்தைச் சொல்ல ஆயத்தமாக வருவீர்களாக!

எதிர்பாராவிதமாய் குயின்ஸ்லாந்து மாநில தமிழ், மெல்போர்ன் மாநிலத் தமிழ், மற்றும் நியூசவுத்வேல்ஸ்மாநிலத் தமிழின் சங்கமமாக நிகழ இருக்கும் இந் நிகழ்வு வாழ்வனுபவமும் வாசிப்பனுபவமும் இலக்கிய வடிவமாகும் இயலை நமக்கு தந்து போகும் நல் அனுபவமாக இருக்கும் என உறுதியாக நம்புகிறேன்.

உங்கள் எல்லோரது பிரசன்னமும் நிகழ்ச்சியை செழுமைப்படுத்தும் என்பது நிச்சயம்.வாருங்கள்! இயற்கையோடு இணைந்து இலக்கியமும் நுகர்ந்து செல்வோம்.

மிக்க நன்றி.

தமிழால் இணைந்திருப்போம்.

இன்றயநாளும் இனி வரும் நாளும் இனியவையாகுக!

 
2 Comments

Posted by on 20/03/2014 in Uncategorized

 

சங்க காலத்து ஒளவை: இலக்கிய சந்திப்பு – 17 ஐ முன் வைத்து (பகுதி 2)

Image

உ.வே.சா. போட்டுத்தந்த பாதை வழியே சங்க காலத்துக்குள் வந்தோமில்லையா.

இதோ இப்போது ஊருக்குள் நுழைகிறோம்.

முறம் எடுத்து புலி விரட்டிய பெண்ணும் முல்லைப்பூவோடு கோவித்துக் கொண்ட பெண்ணும் எதிரே கம்பீரமாய் வரும் பிசிராந்தையரும் செவிலித்தாய் விரட்ட விரட்ட சாப்பிடாமல் ஓடித்திரிந்த மகள் எப்படி கனவன் வீடடைந்து வறுமையிலும் செம்மையாய் வாழ்கிறாள் என வியந்து நிற்கும் தாயாரும்,(நற்றினை 110)

‘சிலரும் பலரும் கடைக்கண் நோக்கி
மூக்கின் உச்சிச் சுட்டுவிரல் சேர்த்தி,
மருகில் பெண்டிர் அம்பல் தூற்’ (149 நற்றினை) றிய படி புறம் பேசும் பெண்களுமாக ஒரு பக்கமும் இன்னொரு பக்கமும், தான் வளர்த்த புன்னை மரத்தை தன் தங்கையாக நினைத்து அம்மரத்தின் கீழ் தலைவனைக் காண நானமுறும் பெண் இன்னொரு பக்கமாக (நற்றினை172) இருக்கிற ஊர் அது.

சில பல வீடுகளில் மாப்பிள்ளைமார் – அது தான் கணவர் மார் – பரத்தைகளிடம் போய் விட்டு வீடு திரும்புகிறார்கள். வரும் போதே சமாதானத்திற்காக சொந்தக்காரரையும் அழைத்து வருகிறார். இந்த அப்பாவித் தலைவி சொந்தக்காரரை கண்ட மாத்திரத்திலேயே அகமும் முகமும் மலர சமையல் செய்யத் தயாராகி விட்டாள், அவன், அந்தக் கள்வன் உள்ளூர ‘சரி இனி எல்லாம் சுகமே என உள்ளூர மகிழ்ந்து போகிறான். இப்படியும் ஒரு சிறுகுடிலுக்குள் நடக்கிறது காட்சி..(நற்றினை120) இன்னொரு இடத்து தலைவனோ வீட்டுக்கு வரும் போதே சமாதானத்திற்காக முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த புதல்வனைத் தூக்கிக் கொண்டு மனைக்குள் நுழைகிறான்.(நற்றிணை 250)

காதலை தன் தோழியிடம் சொல்லி வருந்துகிறாள் ஒரு காதலி இப்படி, ’எடியே, நான் பிரிவினால் சாகப்போகிறேன். நான் சாவதைப்பற்றிக் கூட கவலைப்படவில்லை. அதற்குப்பிறகு நான் மீண்டும் பிறக்கும் போதும் அவன் என்னை மறந்துவிடுவானோ என்று தான் எனக்கு அச்சமாக இருக்கிறது’  (நற்றினை 397) என்கிறாள் அவள்.

குறுந்தொகைப்பெண்கள் அம்மாமாரிடம் காதலுக்காக கோலினால் அடி வாங்கி இருக்கிறார்கள். அடியே! உன் மனதை கவர்ந்து உன் உடலைத்தீ ண்டிப்போன காதலனை அறிவாயா என்று கேட்டால் மலைக்கு அந்தப்பக்கம் தான் இருக்கிறான் என்று சமாதானம் சொல்கிறாள், அடி மோட்டுப் பெண்ணே, முகவரி தெரியாமலே காதலித்திருக்கிறாயே இப்ப என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டால் அவனை விட்டுவிடுவேனா என்ன? ஊரூராக நாடுநாடாகவேனும் போய் தேடி கண்டுபிடித்து விட மாட்டேனா என வீம்பு பேசுகிறாள் இப்படி,

“நிலந்தொட்டுப் புகாஅர் வானம் ஏறார்
விலங்கிரு முந்நீர் காலிற் செல்லார்
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்
கெடுநரும் உளரோ? “ – வெள்ளி வீதியார்; நற்றினை 130 –

என்ன நிலத்துக்கு கீழ நாக கன்னியரத் தேடிப் போகப்போறாரோ? வானம் ஏறி மேல வான் மகளிரத் தேடிப் போகப்போறாரோ? கடலேறி நாக கன்னியிட்ட போகப்போறாரோ? இங்கனேக்க நாட்டுக்குள்ளேயும் ஊருக்குள்ளேயும் தானே இருக்கப் போகிறார் என்று ஒரு வித நாட்டாண்மையோடு வருகிறது பதில்.

அடியே, அவன் உன்னைத் தெரியாது என்றால் என்ன செய்யப்போகிறாய் என்று கேட்டால் ‘அவன் அப்படிச் சொல்ல முடியாதே; நம் சந்திப்புக்குச் சாட்சியாக நாரை ஒன்று நின்றதே என்கிறாள்.

(சங்க காலத்துக்கு முன்னால் இளமகளிரை பிறர் கவர்ந்து செல்லாமல் பாதுகாக்க அவளுடய இடுப்பில் கயிற்றைக்கட்டி மற்புறக்கயிறை தங்கள் கையில் தாய்மார் வைத்திருந்தார்கள்.இரவு நேரத்தில் அவர்களின் கால்களில் கயிறுகட்டிக் காத்திருந்தார்கள்.நாகரிகம் முதிர்ந்த காலத்தில் இடுப்புக்கயிறு மேகலையாகவும் (ஒட்டியாணம்) கால்கயிறு சிலம்பாகவும் மாறியது.பெண்ணுக்குத் திருமணம் முடிந்த பிறகு பெண்ணின் கால் சிலம்புகளைக் களற்றும் சடங்கு ‘சிலம்புக்கழி நோன்பு’ என்றழைக்கப்பட்டதென பலசுந்தரம் கூறுகிறார். ) (தமிழ் அவுஸ்திரேலியன் பெப்பிரவரி 2014 பக்; 77 ‘காதலைத் தின்ற சங்கப் பெண்கள்; பிரபஞ்சன்)

இப்படியான பெண்கள் கூட்டத்துக்குள் ஒளைவை என்பவள் யாராக இருக்கும்?ஒளவை என்பவள் இவளாக இருக்குமோ அவளாக இருக்குமோ என மனம் அலைபாய ஒளவை என்பவள் இவ்வாறெல்லாம் இல்லை என்ற படியே எம்மை இன்னும் இன்னும் நடத்தி ஊருக்குள் கூட்டி வந்தார் ஐயா.

அப்படி என்றால் எப்படி இருப்பாள்? ஒளவையார் திரைப்படத்தில் வந்த சுந்தராம்பாள் மாதிரி தெய்வீக முகப்பொலிவோடும் நெற்றி நிறைய நீறோடும் சற்றே வளைந்த முதுகோடும் பொல்லூன்றி வருவாளோ?

அப்படியும் இல்லை என்றார். அவர் அறிமுகப்படுத்தப்போகிற ஓளவை எப்படியானவள் என காண ஆவல் கொண்டோம்.அவள்,

1. அரசரோடு கன கம்பீரமாக சரியாசனம் இருந்தவள். தமிழ் கொடுத்த இருக்கை அது.

2. அரசனுக்காய் தூது போய் பெண்ணில் லாவகத்தோடு பெருமையை மிடுக்கோடு சொல்லி வந்தவள்

3. ஏழைகளுக்கு வழிகாட்டி வாழ வழிவகை சொன்னவள்.

4.ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என உயர்குடி அரசனோடும் சமமாய் நின்று காட்டியவள்.

5. வரலாற்றில்; இலக்கியத்தில் ஒரு பெண்ணாய் தன்னைப் பதிந்து கொண்டவள்.

இவள் மூதாட்டி இல்லை. திருநீறுக்குள் தன்னை மறைத்துக் கொண்டவள் இல்லை. தமிழ் ஒளி வீச கம்பீரமாய் வாழ்ந்து காட்டிப் போனவள்.அவளுடய பெயரை புனை பெயராக வைத்துக் கொண்டு பின் வரும் நூற்றாண்டுகளில் மேலும் இரண்டு ஒளவைகள் வந்தார்கள்.

ஒருத்தி சோழர்காலத்தில் வாழ்ந்தவள்.கம்பர் காலத்துக்கு சமகாலத்தில் வாழ்ந்தவள்.இவளுடய புலமைக்கு அவளுடய நிந்தாஸ்துதிப் பாடல் ஒன்றே போதும். ( அவலட்சனம் என்பதற்கு அவள் சொன்ன சொற்பதம் எட்டேகால் லட்சணமே! ஏன் தெரியுமா தமிழ் எண்ணில் 8 என்ற இலக்கத்தை சுட்டுவது ‘அ’ கால் அளவைச் சுட்டுவது ‘வ’ அவலட்சணமே என்பதற்கு அவள் எடுத்தாண்ட அடி எட்டேகால் லட்சணமே! எப்படி இருக்கிறது இந்த நிந்தாஸ்துதி! )(ஞானம் பெப்பிரவரி 2014 ‘பரனில் கண்டெடுத்த பைந்தமிழ் கருவூலங்கள்; பாலாபக்கம்) அடுத்த ஒளைவை கிட்டத்தட்ட 16ம் நூற்றாண்டளவில் வாழ்ந்தவள். இந்த ஒளவை தான் ஆத்திசூடி கொன்றை வேந்தன் எல்லாம் பாடி ஒளவை பாட்டியாக மனதில் நிலைத்திருப்பவள்.

நாங்கள் காணப்போவதோ சங்க காலத்து original ஒளவை! இவளைத்தான் நாம் தமிழுக்குள் தொலைத்து விட்டோம். பண்பாட்டுக்குள் தவற விட்டு விட்டோம். அவளை இலக்கிய சந்திப்பில் புழுதிக்குள் கிடந்து கண்டெடுத்துத் தந்தவர் ஐயா அவர்கள்.

இவளுடய பாடல்கள் அகநானூறு, புறநானூறு, நற்றிணை, குறுந்தொகை ஆகியவற்றில் இருக்கிறது. தன்னை ஒரு தமிழ் பெண்ணாக வரலாற்றில்; இலக்கியத்தில் நிலை நிறுத்திப் போனவள் ஒளவை.

அதையிட்டும் பெண்கள் சற்றே பெருமைப்பட்டுக் கொள்லலாம்.

இவள் எப்படி இருப்பாள் என்று காண ஆவலாய் இருக்கிறது தானே! அவள் புறநானூறு – 89 இல் தன்னை வர்ணிக்கிறாள் இப்படி.

பாடல் இது தான்.

இழை யணிப் பொலிந்த ஏந்துகோட்டு அல்குல்
மடவரல் உண்கண் வாள்நுதல் விறலி!
பொருநரும் உளரோ, நும் அகன்றலை நாட்டு? என,
வினவல் ஆனாப் பொருபடை வேந்தே!
எறிகோல் அஞ்சா அரவின் அன்ன
சிறுவன் மள்ளரும் உளரே; அதாஅன்று
பொதுவில் தூங்கும் விசியுறு தண்ணுமை
வளி பொரு தெண்கண் கேட்பின்,
அது போர்! என்னும் என்ஐயும் உளனே!

உரை: “மணிகள் கோத்த அணிகள் விளங்கும் (உயர்ந்த பக்கங்களையுடைய) இடையும், மை தீட்டிய கண்களும் ஓளிபொருந்திய நெற்றியும் கொண்ட நாட்டியம் ஆடும் வெகுளிப் பெண்ணே! அகன்ற இடங்களுடைய உங்கள் நாட்டில் போரிடும் வீரர்களும் உளரோ?” என்று என்னை விழித்துக் கேட்ட போர்ப்படையுடன் கூடிய அரசே! எங்கள் நாட்டில், அடிக்கும் கோலுக்கு அஞ்சாத பாம்பு போல் வெகுண்டு எழும் இளமையும் வலிமையுமுடைய வீரர்கள் உள்ளனர். அவர்கள் மட்டுமல்லாமல், ஊர்ப்பொதுவில் கட்டித் தொங்கும் தண்ணுமைப் பறைமேல் காற்று மோதுவதால் உண்டாகும் ஒலி கேட்டு, “அது போர்ப்பறையின் முழக்கம்!” என்று பொங்கி எழும் என் அரசனும் உளன்.

இப்பாடலில் இருந்து இவள் ஒரு விறலி என்றும் (பாடலின் பொருளை உணரும் வகையில் மெய்ப்பாடு தோன்ற ஆடிக்காட்டுபவள் விரலி) மைதீட்டிய கண்களும் வட்டமான நெற்றியும் கொண்டவள் என்றும் எடுப்பான இடுப்பில் அழகிய அணிகலன்களை அணிந்திருப்பவள் என்றும் இப்பாடலில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

அஞ்சியும் ஒளவையும்:

இவள் உயர்குடி மக்கள் இடத்தில் மிகுந்த செல்வாக்கு. தமிழ் கொடுத்த இறுமாப்புடன் கூடிய செல்வாக்கு அது. அஞ்சியும் ஒளவையும் நல்ல நண்பர்களாக இருந்திருக்கிறார்கள். அவனோ அரசன். அவளோ தமிழ் புலமை வளர்த்தெடுத்த தமிழ் சீமாட்டி. “இரு பேராண்மை செய்த பூசல்” என ஆணுக்கும் பெண்ணுக்குமான ஆழுமைப்பண்பை பேராண்மை என்று விழித்து பெண்ணுக்கு ஆழுமைப்பண்பில் சம அந்தஸ்து கொடுத்தவள். அப்படியே வாழ்ந்தும் காட்டியவள். அதனாலே அவளுக்கு அரசனோடு சரியாசனம்.அரசனோடு சேர்ந்து கள்ளடிக்கிற அளவுக்கு சினேகிதம் என்றால் பாருங்களேன்! அந்த சினேகத்தைச் சொல்கிறது இப்பாடல். (புறம் 236)

சிறியகட் பெறினே, எமக்கீயும்; மன்னே!
பெரிய கட் பெறினே,
யாம் பாடத், தான்மகிழ்ந்து உண்ணும்; மன்னே!
சிறுசோற் றானும் நனிபல கலத்தன்; மன்னே!
பெருஞ்சோற்றானும் நனிபல கலத்தன்; மன்னே!
என்பொடு தடிபடு வழியெல்லாம் எமக்கீயும்; மன்னே!
அம்பொடு வேல்நுழை வழியெல்லாம் தான்நிற்கும் மன்னே!
நரந்தம் நாறும் தன் கையால்,
புலவு நாறும் என்தலை தைவரும்! மன்னே
அருந்தலை இரும்பாணர் அகன்மண்டைத் துளையுரீஇ,
இரப்போர் புன்கண் பாவை சோர,
அஞ்சொல் நுண்தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்றுவீழ்ந் தன்று, அவன்
அருநிறத்து இயங்கிய வேலே!
ஆசாகு எந்தை யாண்டுஉளன் கொல்லோ?
இனிப், பாடுநரும் இல்லை; படுநர்க்குஒன்று ஈகுநரும் இல்லை;
பனித்துறைப் பகன்றை நறைக் கொள் மாமலர்
சூடாது வைகியாங்குப், பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே!

பொருள் என்னவென்றால்:

சிறிதளவு கள்ளைப் பெற்றால் எமக்குத் தருவான்; பெருமளவு கள்ளைப் பெற்றால் எமக்கு அளித்து நாம் பாட அதைக் கேட்டு மகிழ்ந்து அவனும் உண்பான்; சிறிதளவு சோறாக இருந்தாலும் அதை மிகப் பலரோடும் பகிர்ந்து உண்பான். பெருமளவு சோறு இருந்தால், அதையும் மிகப் பலரோடு கலந்து உண்பான்.

எலும்போடு கூடிய தசை கிடைத்தால் அதை எமக்கு அளிப்பான். அம்புடன் வேல் தைக்கும் போர்க்களமானால் தானே சென்று நிற்பான். நறுமணமுள்ள தன் கையால் புலால் மணக்கும் என் தலையை அன்போடு தடவுவான். இவையெல்லாம் கழிந்தன. அவன் மார்பைத் துளைத்த வேல் பெரிய பாணர் கூட்டத்தினரின் அகன்ற பாத்திரங்களை ஊடுருவிச் சென்று, இரப்போர் கைகளையும் துளைத்து, அவனால் பாதுகாக்கப்படும் சுற்றத்தாரின் துன்பம் மிகுந்த கண்களில் ஒளி மழுங்க, அழகிய சொல்லும் ஆராய்ந்த அறிவும் உடைய புலவர்களின் நாவிலும் சென்று வீழ்ந்தது.

எமக்குப் பற்றுக்கோடாக இருந்தவன் இப்பொழுது எங்குள்ளானோ? இனிப் பாடுவோரும் இல்லை; பாடுவோருக்கு ஒன்று ஈவோரும் இல்லை. குளிர்ந்த நீர்த்துறையில் உள்ள தேனொழுகும் பெரிய பகன்றை மலரைச் சூடுவோர் இல்லாததுபோல் பிறர்க்கு ஒன்றும் கொடுக்காமல் வாழ்ந்து இறப்பவர் மிகப் பலர்.

இவளுடய கவிப்புலமையப் பாருங்கள்! அம்பு பாய்ந்து அஞ்சி இரந்து பட்டான். அந்த அம்பு புறக்கண்ணுக்குத் தான் அஞ்சியைத் தாக்கியது. ஆனால் அதன் தாக்கம் அல்லது அது உண்மையாக தாக்கியது எங்கெங்கெல்லாம் தெரிகிறதா? அது பாணர் கூட்டத்தின் அகன்ற பாத்திரங்கள் – பாணர்களின் அன்றாட வாழ்க்கையை (அவன் கொடை கொடுத்து வந்திருக்கிறான்) இரப்போர் கைகளைத் துளைத்து – இனி இரப்பவர்களுக்கு கொடுப்பார் எவரும் இல்லை. சுற்றத்தாரின் கண்களில் ஒளி மழுங்க – சுற்றத்தாரும் இனி கம்பீரமாய் பவனி வர முடியாத படிக்கு; புலவர்களுடய நாவிலும் சென்று வீழ்ந்திருக்கிறது அந்த அம்பு. இனி புலமையும் அறிவும் உடைய  புலவர்கள் நா எழுந்து பாடி இன்புறவும் சாத்தியமில்லை. என்ன அழகாய் தெளிவாய் சுருக்கென தைக்கத் தக்கதாய் சொல்லி இருக்கிறாள் பாருங்கள்.

அத்தோடு  சமபந்தி போசனத்தை செய்தது மாத்திரமல்ல நறுமணம் உள்ள தன் கையால் புலால் மணக்கும் அவள் தலையை வருடிக் கொடுக்கிற அளவுக்கு அன்பு பாராட்டுகிற நண்பனாகவும் அஞ்சி இருந்திருக்கிறான் இல்லையா?

இந்த இடத்தில் நம் கார்த்திகா – நாட்டியக்கலாநிதி – அவர் நாட்டியப்பாடசாலை நடத்துபவர். மேலும் நாட்டியக்கலை பற்றிய புத்தகங்கள் பல வெளியிட்டவர். இப்போதும் புதிய ஒரு நாட்டியகலை சம்பந்தமான ஆராய்ச்சியிலும் ஈடுபட்டிருப்பவர். அவர் “நித்ய சுமங்கலிகளின்” வேரை ஆராய்ந்து கொண்டிருப்பவர். இந்த இடத்தில் ஒளவை அதன் மூலத்தில் இருந்திருப்பாளோ என்பது அவரது சந்தேகமாக இருந்தது.

அதற்கு இல்லை என்பதும் இது தூய நட்பே என்பதும் ஐயா அவர்களின் பதிலாக இருந்தது. (அஞ்சி தன் அத்தை மகளை மணந்திருந்தான் என்றும் அவளும் பாவன்மை படைத்தவளாக இருந்தாள் என்றும் ஒரு கிடைத்திருக்கிற தகடூர் யாத்திரை என்ற நூலில் ஒளவை சொல்லி இருக்கிறாள் என்று ஓர் இணையச் செய்தி கூறுகிறது.) அதே நேரம் நெடுமான் அஞ்சிக்கு பொகுட்டெழினி என்றொரு மகன் இருந்து தந்தை காலமான பின் இவன் அரசு கட்டில் ஏறும் வரை ஒளவை அவர்களோடு நட்புறவோடு இருந்ததற்கும் சான்றுகள் உண்டு)

இப்படி எல்லாம் உரிமையும் நட்பும் அன்புறவும் கொண்டிருந்தவளுக்கு ஒரு நாள் ரோசம் பொத்துக் கொண்டு வந்து விட்டது. அது வெகுமதி அளிக்க தாமதமாகி விட்ட கோபம். தமிழ் பொங்கி எழுந்து விட்டது. தன்மான உணர்வும் தான். பாடல் பிறந்தது இப்படி:

“வாயி லோயே! வாயிலோயே!
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித், தாம்
உள்ளியது முடிக்கும் உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே!
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கொல்? என்னறி யலன்கொல்?
அறிவும் பகழும் உடையோர் மாய்ந்தென,
வறுந்தலை உலகமும் அன்றே; அதனால்,
காவினெம் கலனே; சுருக்கினெம் கலப்பை;
மரங்கொல் தச்சன் மைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத்து அற்றே;
எத்திசைச் செலினும், அத்திசைச் சோறே.“ (புறம் 206)

இப்பாடலின் பொருள்.

வாயிற் காப்போனே! வாயிற் காப்போனே!
வள்ளன்மை மிக்கவர்களின் செவிகளில் நல்ல சொற்களை விதைத்து,
தமக்குத் தேவையான பரிசிலை விளைவிக்கும் ஆற்றல் மிக்க உள்ளத்தைக் கொண்ட பரிசிலர்கள் எப்போதும் செல்லும் அடைக்காத வாயிலை உடையவனே!

தலைவனாகிய அதியன் தான் தன் தரம் அறியமாட்டானா?
இல்லை என் தரத்தை அறியமாட்டானா?

அறிவும், புகழும் உடையவர்கள் மாய்ந்தால் உலகம் வறுமைப்படுவதில்லையே!

ஆதலால் எம் இசைக்கருவிகளைத் தோளில் சுமந்தோம்.
எங்கள் இசைக்கலங்கள் கொண்ட பைகளைக் கட்டிக்கொண்டோம்.(இவள் விறலி என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி)

மரத்தை வெட்டிக் கொள்ளும் தச்சர்கள் பெற்ற சிறுவர்கள் தம் மழுவோடு (கோடாலியோடு) காட்டிற்குச் சென்றால் அங்குள்ள மரங்கள் எப்படி அவர்களுக்கு உடனே வேண்டுமாறு பயன்படுமோ அப்படி நாங்கள் எத்திசை சென்றாலும் அத்திசையில் சோறு கிடைக்கும்.

என்ன ரோசம் பாருங்கள். இது தமிழ் கொடுத்த தீரம்தானே?

Who cares? என்று புரம் தள்ளிப் போகிற ரோசம்!

(பிறகு நெடுமான் அஞ்சி வெகுமதிகளைக் கொடுத்தான் என்றும் அவள் பிரிந்து போகின்ற போது அவளுடய பிரிவாற்றாமல் கொள்ளைக்காரர்களை அனுப்பி அவள் பொருளைச் சூறையாட வைத்து அவளைத் திரும்பி ( கோபத்தோடு ) வரச் செய்தான் என்றும் கதை உண்டு. பிரிவாற்ற முடியா அத்தனை நேசம் அவனுக்கு இவள் பால்.

இவன் இவளுக்கு நெல்லிக்கனி ஈந்தது பற்றி சொல்ல வேண்டியதில்லை தானே!

பெண்கள் – குறிப்பாக ஒளவை அரசகாரியமாக தூது போயிருக்கிறாள். அது அரச தூது. போரை நிறுத்தும் வல்லமை கூட பெண்ணுக்கும் தமிழுக்கும் சங்கத்தில் வாய்த்திருந்ததற்கு இவ் ஒளவை சாட்சி. இவள் ஒரு தடவை தொண்டமான் என்பானிடம் போய் அஞ்சியைப்பற்றிச் சொல்கிறாள் இப்படி.

இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்
கண்திரள் நோன்காழ் திருத்தி, நெய் அணிந்து,
கடியுடை வியன்நக ரவ்வே : அவ்வே,
பகைவர்க் குத்திக், கோடுநுதி சிதைந்து,
கொல்துறைக் குற்றில மாதோ ; என்றும்
உண் டாயின் பதம் கொடுத்து,
இல் லாயின் உடன் உண்ணும்,
இல்லோர் ஒக்கல் தலைவன்,
அண்ணல்எம் கோமான், வைந் நுதி வேலே.

பொருளை உரை வழி இணையம் இப்படித்தருகிறது.

தொண்டைமான் : வாருங்கள் புலவரே…
தமிழுக்குத் தொண்டு செய்யும் புலவரே தங்கள் வருகை எனக்கு மிகவும் மகிழ்வளிப்பதாக உள்ளது…

ஔவையார் : எனக்கும் மகிழ்ச்சி மன்னா…

தொண்டைமான் : அதியனின் நாட்டிலிருந்த தாங்கள் வந்திருக்கிறீர்கள்..
எனது வீரம், படை பலம் ஆகியவற்றைத் தாங்கள் அறிந்து கொள்ளுவது அவசியமாகும்…
வாருங்கள்…
பாருங்கள்…….
எனது படைக்கருவிகள் எவ்வளவு புதிதாகவும் கூர்மையாகவும் உள்ளன………….?

ஔவையார் : ஆம் நீ சொல்வது உண்மை மன்னா….. !

தொண்டைமான் : எப்படி இருக்கிறது எனது படைக்கருவிகள்…

ஔவையார் : இக்கருவிகள் மயிலின் தோகையால் அழகு செய்யப்பட்டு மாலை சூட்டப்பட்டு, நெய் பூசப்பட்டு, காவலையுடைய அகன்ற மாடத்தில் உள்ளன..
பார்ப்பதற்கே மிகவும் அழகாக உள்ளது.

தொண்டைமான் : சரியாகச் சொன்னீர்கள்…
அதியனின் படைக்கருவிகளை விட எனது படைக்கருவிகள் எவ்வளவு புதியன, கூர்மையானவை என்பதைத் தாங்கள் சரியாகப் புரிந்து கொண்டீர்கள்….!

ஔவையார் : ஆம் மன்னா…

உனது படைக்கருவிகளைப் போல அதியனின் படைக்கருவிகள் இல்லை. அவனுடைய கூரிய நுனியுடைய வேல் முதலான ஆயுதங்கள் பகைவரைக் குத்துதலால் பிடியும் நுனியும் சிதைந்து கொல்லனது பணிக்களரியில் எந்நாளும் கிடக்கின்றன.

ஔவையார் பாடலின் உட்பொருள்…

ஔவையார் பாடலின் பொருள் மேலோட்டமாகப் பார்த்தால் தொண்டைமானைப் புகழ்வது போலவும் அதியனை இகழ்வது போலவும் அமையும்.

தொண்டைமானின் படைக்கலங்கள் அழகுற விளங்குகின்றன என்னும் புகழ்ச்சிக்கு…….

நீ அதிகம் போர்க்களம் காணாதவன்….
ஆனால் அதியன் போர்க்களத்தில் தான் எந்நாளும் இருப்பவன்…

உனது கருவிகள் மாலை சூட்டப்பட்டு அழகாகக் காட்சியளிக்கின்றன. ஆனால் அவன் எந்நாளும் போர் புரிவதால் அவனது படைக்கருவிகள் யாவும் கூர்மையின்றி கொல்லன் களரியில் தான் கிடக்கும் என்பதே உட்பொருளாக அமைகிறது..

ஏழை விறலிக்கு வழிகாட்டிய ஒளவையை இப்போது பார்ப்போம்.

அதியமான்பால் பரிசில் பெற்றுச் சென்ற ஒளவையார், வழியில் ஒரு
இடத்தில் தன் சுற்றத்தோடு தங்கியிருந்த விறலி யொருத்தியைக்
கண்டார். அவள் தான் உற்று வருந்தும் வறுமையைத் தெரிவித்து,
“கவிழ்ந்துகிடக்கும் உண்கலமாகிய என் மண்டையை மலர்க்குநர் யார்?”
என ஏங்கியிருப்பதைக்  கண்டு, “சில்வளை விறலி, சேய்மைக்கண்ணன்றி
அண்மையிலேயே நெடுமானஞ்சி உள்ளான்; அவன்பாற் செல்வாயாயின்,
அவன் பகைப்புலத்துத் திறையாகக் கொண்ட பொருள் நிரம்ப உடையன்;
அலத்தற்காலையாயினும் புரத்தல் வல்லன்; அவன் பாற் செல்க”என,
இதனால் ஆற்றுப்படுத்துள்ளார்.

இது தான் அந்தப்பாடல்.

ஒருதுலைப் பதலை தூங்க வொருதலைத்
தூம்பகச் சிறுமுழாத் தூங்கத் தூங்கிக்
கவிழ்ந்த மண்டை மலர்க்குநர் யாரெனச்
சுரனமுத லிருந்த சில்வளை விறலி
செல்வை யாயிற் சேணோ னல்லன்
முனைசுட வெழுந்த மங்குன் மாப்புகை
மலைசூழ் மஞ்சின் மழகளி றணியும்
பகைப்புலத் தோனே பல்வே லஞ்சி
பொழுதிடைப் படாஅப் புலரா மண்டை
மெழுகுமெல் லடையிற் கொழுநிணம் பெருப்ப
அலத்தற் காலை யாயினும்
புரத்தல் வல்லன் வாழ்கவன் றாளே. (103)

இவளை இப்போது

1. அரசரோடு கன கம்பீரமாக சரியாசனம் இருந்தவள். தமிழ் கொடுத்த இருக்கை அது.

2. அரசனுக்காய் தூது போய் பெண்ணில் லாவகத்தோடு பெருமையை மிடுக்கோடு சொல்லி வந்தவள்

3. ஏழைகளுக்கு வழிகாட்டி வாழ வழிவகை சொன்னவள்.

4.ஆணும் பெண்ணும் சரிநிகர் சமானம் என உயர்குடி அரசனோடும் சமமாய் நின்று காட்டியவள்.

5. வரலாற்றில்; இலக்கியத்தில் ஒரு பெண்ணாய் தன்னைப் பதிந்து கொண்டவள்.

என்று சொல்லலாமில்லையா?

எங்கே தொலைத்தோம் இன்றிவளை?

இப்பாடகளூடாக இவளைக் நமக்கு அடையாளம் காட்டியது யாவும் இலக்கிய வித்தகர் ’குறுமுனி’ தனபாலசிங்கம் ஐயா அவர்கள்.

ஐயா அவர்களுக்கு நன்றி

( பிற்குறிப்பு: நேரமின்மை கருதி பாடல்களும் உரையும் இணையத்தில் இருந்து பெறப்பட்டிருக்கின்றன. நன்றி இணையம்)

 
Leave a comment

Posted by on 11/03/2014 in Uncategorized

 

உ.வே.சா. போட்டுத்தந்த பாதைவழியே இலக்கிய சந்திப்பு – 17 – குழுவினர் (பகுதி 1)

அது ஒரு பொன்மாலை நேரம்.

23.2.14.

பரமற்றா பூங்காவினுள் இருக்கும் தேநீர் விடுதிக்கு முன்பாக இருக்கும் மணிமண்டபம்.

Image

Image

உ.வே.சா. போடுத்தந்த சங்கத் தமிழ் வீதி வழியே நம்மை ஒளைவையிடம் அழைத்துச் செல்ல வந்திருந்தார் நம் தமிழ்குறுமுனி தனபாலசிங்கம் ஐயா அவர்கள்.

Image

ஒரு வீட்டில் குடி இருக்கும் இரு சூரியர்கள் பானு, ரவி. எப்போதும் சரியான நேரத்துக்கு 5 நிமிடங்கள் முன்னால் வந்து எனக்கு மிஸ்கோல் தந்து வரவை உறுதிப்படுத்தும் மழைக்காரி ஷிரயா, ஐந்து மணிவரை நாட்டிய வகுப்புகளை நடத்தி விட்ட பின்னாலும் களைப்பற்று புத்துணர்வோடு எப்போதும் தவறாமல் கலந்து கொள்ளும் நம் பலமான தூண் கார்த்திகா, மற்றும் நான் 4.30க்கு வேலை முடித்து வரும் போதே சுடச்சுட கொழுக்கட்டைகளைச் செய்து தகுந்த டப்பாக்களில் செம்மையுற அடுக்கி தானும் தயாராகி நிற்கும் என் அம்மா, எப்போதேனும் அபூர்வமாய் ஆனால் நம் நிகழ்ச்சிகளின் விடயங்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டிருக்கும் சரியான தருணங்களில் நிகழ்ச்சிகளைக் கைகொடுத்து தூக்கி விடும் புத்தர் எல்லாவற்றுக்கும் மேலாக 4.45 மணிக்கே தன் வீட்டுக்கு வெளியிடத்தில் இருந்து உறவினர்கள் வந்திருக்கிறார்கள் என்ற போதும் பாரியாரோடு வந்து விட்டேன் என அறியத்தந்த குறுமுனிவர் தனபாலசிங்கம் ஐயா அவர்கள் ( இவர்கள் இடம் தெரியாது தடுமாறி நின்ற போது நம் அன்பு புத்தர் தான் அவர்களை அழைத்து வந்திருந்தார்) …. இப்படியாக எல்லோரும் ஒன்று சேர்ந்த போது மாலை 5.10ஐக் கடந்து விட்டிருந்தது. ( திரு.சத்தியநாதன் அவர்கள் தனக்கின்று வேலைநாள் என்பதால் வர இயலாமையை ஏற்கனவே மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்தி இருந்தார்.)

வரலாற்று வீதி வழியே பின்னொக்கி பயணப்படுகிறோம்.

ஐயா முன்னோக்கிப் போக நாங்கள் அவரைப் பின் தொடர்ந்தோம்.

Image

Image

வீதி வழியே பின்னோக்கி பயணிக்கையில் அந்த வரலாற்றுப்பயணத்தில் இந்த வீதி போட்டுத் தந்தவரைப்பற்றிச் சொல்லிக்கொண்டு வந்தார் ஐயா.

இந்த இடத்தில் ஐயா அவர்களை முதலில் நான் அறிமுகப்படுத்த வேண்டும்.இல்லை என்றால் என் ஆத்துமம் சாந்தி பெறாது. இவர் இலங்கையின் வடபுலத்தில் இணுவில் என்ற சிற்ரூரில் பிறந்து கொக்குவில் இந்துக்கல்லூரியில் கல்விகற்று பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை மேற்கொண்டு பிறகு கனக்கியலில் மேலதிக படிப்புக்காக லண்டனில் சிலகாலம் தங்கி( 1974ம் ஆண்டுக்காலப்பகுதி) இருந்து 1979 ல் சிட்னிக்கு வந்தவர்.மிகவும் வலிந்து கேட்டுப் பெற்ற தகவல்கள் இவை.

அவருடய கல்வித்தகைமையும் வாழ்க்கை ஓட்டமும் வேறாக இருந்த போதும் சொந்த ஆர்வத்தின் நிமித்தம் தமிழ் இலக்கியம் ஆங்கில இலக்கியம் முதலானவற்றைக் கற்றறிந்ததாகச் சொன்னார். தன்னைப்பற்றிச் சொல்வதில் மிகுந்த கூச்சசுபாவம் உள்ளவராக இருந்தார். நமக்குக் கொடுப்பதற்காக “சிலப்பதிகார சிந்தனைகள் என்ற அவருடய வானொலியில் ஒலிபரப்பான இலக்கிய ரசத்தை இறுவட்டில் அடைத்துக் கொண்டு வந்திருந்தார். அதற்கு ஆனசெ லவைப் பெறுமாறு வேண்டிய போது தீ சுட்டதைப் போல பதறிப்போனார்.

தான் ஒன்றும் பெரிய இடத்துப் பையன் இல்லை என்றும் ஒருவாறு லண்டனுக்குப் போய் அங்கு லண்டனில் கல்விகற்ற போது பகுதி நேர வேலைக்கு தான் எதிலும் தேர்வாகவில்லை என்றும்; தான் சிறிய மனிதராக இருந்த காரணத்தால் ஒரு நாடகக் கம்பனியில் இடைவேளையின் போது பொருட்கள் விற்கும் வேலை தான் தனக்குக் கிட்டிற்றிறென்றும்; அது தனக்கு இலவசமாகவே ஷேக்ஸ்பியரின் நாடகங்களைப் பார்க்கும் வாய்ப்பைத் தந்ததென்றும் அதனால் ஆங்கில இலக்கியத்தின்பாலும் நாட்டம் ஏற்பட்டதென்றும் கூறினார். (ஐயா அவர்களை அந்தக் கணத்திலேயே நமக்கு ஆங்கில இலக்கிய சுவையை அறியத்தர வேண்டிக் கொண்டோம்) ஆங்கில இலக்கியங்கள் கூடுதலாக மன போராட்டங்களை உள்ளூர நிகழும் கேள்விகளைப் பதிலை சொல்வது போல் அமையப்பெற்றவை என ஐயா அவர்கள் சொன்ன முதல் கூற்றே நமக்கு புதிதாகவும் ஆர்வமூட்டுவதாகவும் இருந்தது. அதனை அர்ச்சுணனின் போர்களத்து மனப்போராட்டக் காட்சியோடு ஒப்பிட்டுப் பேசினார்.

நாம் ஒரு அரிய பொக்கிஷத்தினைக் கண்டு பிடித்த உணர்வினைப் பெற்றிருந்தோம்.

நம் சந்திப்புக்கு அன்று குழுமியவர்கள் ஒன்பது பேர்.அது போதுமாக இருந்தது அவரைப்பின் தொடர. கன்று தாயின் பின்னால் துள்ளியோடும் கன்றுக்குட்டிகளாய் நாம் அவரை – அவர் சொல்லைப்பின் தொடர்ந்தோம்.

Image

Image

Image

Image

Image

Image

Image

நேரடியாகவே நிகழ்ச்சிக்குள் நுழைந்தோம்.ஐயா அவர்கள் இன்று சங்க காலத்து ஒளைவையை அறிமுகப்படுத்த முற்பட நாம் அவளைக் காணத்தயாரானோம்.அவளைக்காண நம்மை சங்ககால சமூக சபைக்குள் அழைத்துப் போனார் ஐயா.முதலில் சங்ககால நூல்கள் வழியாக போக வேண்டி இருந்ததால் அந்த நூல்வந்த வழியை சொன்னார்.

இதிலிருந்து தமிழ் அருவி ஒன்று தங்குதடை இன்றி எதுகை மோனைகளோடும் பாடல் வரிகளோடும் ஓடுவதைக் கற்பனை செய்க!

நீங்கள் எப்போதேனும் 1 – 3 ம் நூற்றாண்டுக்குரிய தமிழ் எப்படி இன்றய நிலையை அடைந்தது என்பது பற்றி சிந்தித்ததுண்டா?

அங்கு தான் ’தமிழ் தாத்தா’, ‘வாழ்ந்த ஒரு தமிழ் நூலகம்’ பற்றிய அறிமுகம் நமக்குத் தேவைப்படுகிறது. கல்லில் எழுதப்பட்ட தமிழ் எழுத்து பிராமி வரி வடிவங்கள் பின்னர் சமண முனிவர்கள் தமிழ் கடமையாக அவற்றை ஏட்டில் எழுதி வைக்க சமயக்காழ்ப்புணர்ச்சியால் அவை வெளிவராது இருப்பது கண்டும் அறியாமையால் அவை கறையானுக்கு இரையாவதன் முன்னர் அவற்றை மீட்டு மிகப்பக்குவமாக அச்சுக்கு அத்தமிழ் இலக்கிய பொக்கிஷங்களை கொண்டுவந்த பெரு மனிதர் இவர்.

சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், இலக்கணநூல்கள், பிரபந்தங்கள் என இன்று நமக்குக் கிட்டியுள்ளவை எல்லாம் உ.வே.சா. உயிர்ப்பித்தவையே.

அவர் தன் என் சரித்திரம் என்ற அவரது முற்றுப்பெறாத இறுதி நூல் இவ்வாறு கூறுகிறது..”….சேலம் ராமசாமி முதலியாரைச் சந்தித்தார்.என்ன என்ன படித்திருக்கிறீர்கள் என அவர் கேட்ட போது ஐயர் தாம் படித்த அந்தாதி கோவை, பிள்ளைத்தமிழ் நூல்களை எல்லாம் வரிசையாக ஒப்பித்தார்.இவற்றை எல்லாம் படித்து என்ன பிரயோசனம் என அவர் கேட்க, மேலும் தான் படித்த நூல்களின் பட்டியலை ஐயர் வாசித்தார். கம்பராமாயணத்தைப்படித்துள்ளதாகவும் அவர் சொன்னர். இவை எல்லாம் பிற்காலத்து நூல்கள் தாமே? பழங்காலத்து நூல்களான சங்கப்பாடல்களை படித்திருக்கிறீர்களா? சீவகசிந்தாமணி, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகியவற்றை படித்ததுண்டா என்று ராம சாமி முதலியார் கேட்டார்.

நம் தமிழ் இலக்கிய வரலாற்றின் திசைவழியை தீர்மானித்த கேள்வியாக அது அமைந்தது. அதன் பிறகு தான் அய்யர் அவர்களின் வேட்டை துவங்கியது. சமண இலக்கியமான சீவக சிந்தாமணியை தெளிவுறப்புரிந்து கொண்டு பதிப்பிக்கும் நோக்கில் சமண சம்பிருதாயங்களை கும்பகோணத்தில் இருந்த சமணர்களிடம் சென்று பாடம் கேட்டுத்தெரிந்து கொண்டார் ஐய்யர்……அரசாங்கத்தாரும் கிறிஸ்தவ மிசனறிமார்களும் மட்டுமே பயன்படுத்தி வந்த அச்சுயந்திரத்தை 1835ஆம் ஆண்டு முதல் இந்தியர்களும் பயன்படுத்தலாம் என்ற சட்டம் இயற்றப்பட்டதைத்தொடர்ந்து ஓலைச்சுவடியாக இருந்த தமிழ் நூல்கள் அச்சுப்புத்தகங்களாக வரத்துவங்கின…….எனத்தொடரும் அவர் தமிழ் வரலாற்றுச் சரிதம் தன் பதிப்புத்துறையில் அவர் கொண்ட சிரமம் பற்றி இப்படிச் சொல்கிறது. (அவர் இது பற்றிச் சொல்லி இராவிட்டால் நமக்கு இதன் சிரமம் அவரின் தமிழ் தொண்டு பற்றி தெரிய வராமலே போயிருக்கும்.)

’……..சங்க இலக்கியங்கள், காவியங்கள் என 1878 துவங்கி 1942 வரை 62 ஆண்டுக்காலம் 102 நூல்களை உ.வே.சா. பதிப்பித்திருக்கிறார்.இந்த ஓலைச்சுவடிகளுக்காக ஊரூராக அவர் அலைந்தார். வீடு வீடாகக் கையேந்தி நின்றார்.

செய்யுள் வாய்ப்பாடு எல்லாம் அன்று மனப்பாடம்தான். ஆரம்பப்பள்ளி மாணவர்கள் ஒரு இடத்தில் மணலைப் பரப்பி அதில் விரலால் எழுதிப் பழக வேண்டும். ஒரு சில மாத பயிற்சிக்குப் பிறகு சுவடி எழுதப் பயிற்சி கொடுக்கப்படும். .சிலேட்டில் எழுதும் பழக்கம் மிகப் பிற்காலத்தில்தான் வந்தது.

எழுதப் பயன்படுத்தும் சுவடியை பனை ஓலையிலிருந்து தயாரிப்பார்கள். அந்த பனை ஓலைச்சுவடியில் எழுதுவது ஒரு தனிக்கலை. சுவடியில் எழுதுவதற்கு நீண்ட நாள் பயிற்சி வேண்டும். எழுத்தாணி என்ற கருவியைக்கொண்டு சுவடிகளில் எழுதுவார்கள். எழுத்தாணியால் எழுதும்போது மேலாக எழுதினால் எழுத்து தெரியாது. அழுத்தி எழுதினால் சுவடி ஒடிந்துவிடும். எங்காவது ஒரு மூலையில் ஒடிந்தாலும் அந்த சுவடியை தூக்கி எறியவேண்டியதுதான். ஒரு சுவடியில் பத்து பதினைந்து பாடல்களை கூட எழுதுவார்கள். நிதானமாகவும், அதிக அழுத்தம் கொடுக்காமலும் எழுத வேண்டும். எழுதத் தொடங்கிய சில நிமிடங்களில் கை வலி எடுக்க ஆரம்பிக்கும்.

அப்படி வலியை அனுபவித்த மாணவன் ஒருவன் எரிச்சலில் பாடிய பழைய பாட்டு ஒன்று உண்டு.

ஏடு கிழியாதா எழுத்தாணி ஒடியாதா
வாத்தியார் சாகானா வயிற்றெரிச்சல் தீராதா

என்பதுதான் அந்த மாணவனின் புலம்பல் பாட்டு.

நாம் இன்று எழுதும்போது எழுத்துக்கு புள்ளி வைக்கும் வழக்கத்தை மேற்கொள்ளுகிறோம். சுவடியில் புள்ளி வைக்கும் வழக்கம் இல்லை. ஏனென்றால் புள்ளி வைத்தால் ஓலை ஒடிந்து போய்விடும். ஆகையால் புள்ளி எங்கே தேவை என்பதை படிப்பவர்கள் தெரிந்து உணர்ந்து படிக்கவேண்டும். உதாரணமாக கம்பம் ,ரம்பம் என்ற சொற்களை கமபம ,ரமபம என்றுதான் சுவடியில் எழுதுவார்கள்.

படிப்பவர்கள் சொல் அமைந்திருக்கும் நிலைக்கு தக்கபடி படித்து பொருள் கொள்ள வேண்டும். பழைய உரைநடை ஆசிரியர்கள் முற்றுப்புள்ளி இல்லாமல் எழுதுவார்கள். வாக்கியங்கள் நீண்டதாக இருக்கும். இந்த ஓலைச் சுவடிகளில்தான் காலம் காலமாக எல்லா பழைய இலக்கியங்களையும் காப்பாற்றி வந்திருக்கிறார்கள் .

கல்வியறிவு உள்ளவர்கள் எல்லோரும் சுவடியில் எழுதுவதில்லை. சுவடியில் எழுதியவர்கள் எல்லோரும் நிரம்ப படித்தவர்களும் இல்லை. ஓரளவு கல்வியறிவு கொண்டவர்களாக இருந்தால் அவர்கள் சுவடி எழுதுவதை தொழிலாகக் கூட மேற்கொள்ளுவார்கள். தேவையான அளவுக்கு கல்வியறிவு இல்லாதவர்கள் சுவடி எழுதியதால் தான் பலபிழைகள் ஏற்பட்டுவிட்டன. இப்படித்தான் பழைய இலக்கியங்களில் பல பாடல்களுக்கு பாடபேதம் நிறைய ஏற்பட்டது. புலவர் எழுதியதற்கு மாறான சொல் உள்ள பாடல்களை பாடபேதம் உள்ளதாக குறிப்பிடுவார்கள்.

இப்படி எழுதிய சுவடிகளை பூச்சி அரிக்காமல் காப்பாற்றுவது மிகக் கடுமையான வேலை. வசம்பு என்ற நாட்டு மருந்து பொருளை சுட்டு அதன் கரியை மஞ்சள் சாற்றில் கலந்து வேறு சில பச்சிலை சாற்றையும் கலந்து ஒரு குழம்பு தயாரிப்பார்கள். அந்த குழம்பை சுவடிகளில் தடவி வைப்பார்கள். சில ஆண்டுகளுக்கு ஒரு முறை இப்படிச் செய்யாவிட்டால் சுவடியை பூச்சி அரித்து விடும்.

அடிக்கடி பழைய சுவடிகளில் உள்ள இலக்கியங்களை புதிய சுவடிகளில் எழுதிக்கொண்டு பழைய சுவடிகளை அழித்துவிடுவார்கள். இந்த பழைய சுவடிகளை ஆற்று நீரில் போட்டால் நதியில் நீர் வளம்பெருகும் என்ற மூடநம்பிக்கை மக்களிடம் இருந்தது. ஆடிப் பெருக்கு காலத்தில் சுவடிகளை வெள்ளத்தில் போட்டு தமிழர்கள் பல பழைய இலக்கியங்களை அழித்திருக்கிறார்கள்.

பல சைவ மடங்களிலும் புலவர்களுடைய சந்ததியினர் வீடுகளிலும் பழைய ஓலைச்சுவடிகள் நிறைய கிடைத்தன சைவ மடங்களில் இருந்த ஆழ்ந்த கல்வி ஞானம் உள்ள பல தம்பிரான்கள் உள்பட பலருக்கு அங்கே உள்ள ஓலைச்சுவடிகளின் உள்ளடக்கம். என்ன அவை என்ன நூல் என்பது தெரியாது. .இதுதான் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இடைக்காலம் வரை இருந்த உண்மை நிலை. மாற்றுச் சமய நூல்களை படிக்கக் கூடாது என்று சைவ சமயத்தை சேர்ந்தவர்கள் கூறி வந்ததால் பல சமய நூல்கள் கவனிப்பாரற்று அழிந்து போயின. அப்படி அழிந்த நூல்களில் பெருமபாலனவை சமண, பௌத்த மத நூல்களும் பல சமயச் சார்பற்ற நூல்களும்தான். உதராணமாக எந்த சமயத்தைப் பற்றியும் பேசாமல் இயற்கை வளத்தைப் பாடிய முத்தொள்ளாயிரம் என்ற நூலின் ஒரு மிகச் சிறிய பகுதிதான் இன்று நமக்கு கிடைத்திருக்கிறது.

சங்க காலத்திலும் அதற்கு பிறகும் சமணசமயத்தைச் சேர்ந்த துறவிகள் சுவடியில் இலக்கியங்களை எழுதுவதை ஒரு கடமையாகச் செய்து வந்தார்கள். அந்த சுவடிகளை பணமோ பொருளோ கொடுத்து தனவந்தர்கள் வாங்குவார்கள். அப்படி அவர்கள் எழுதியதெல்லாம் பெரும்பாலும் நீதி நெறிமுறைகளை போதிக்கும் அறநூல்கள்தான்.

தங்கள் வீட்டில் நடக்கும் சுப காரியங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் அல்லது நீத்தார் நினைவு நாட்களில் இந்த சுவடிகளை தனவந்தர்கள் தானமாகக் கொடுப்பது வழக்கம். இதை கிரந்த தானம் என்று கூறுவார்கள். சாஸ்திரதானம் என்றும் சொல்வதுண்டு. கிரந்த தானம் என்பது பழங்காலத்தில் சமணர்களால் கடைப்பிடிக்கப்பட்டது. பிறகு சைவ சமயத்தாரும் இந்த வழக்கத்தை மேற்கொண்டனர். நீத்தார் நினைவு நாட்களில் நிலையாமையைப் பற்றி குறிப்பிடும் தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களிலிருந்து சில பாடல்களை அச்சிட்டு சிறிய புத்தகமாக விநியோகம் செய்யும் பழக்கம் பலவிடங்களில் உண்டு. இலங்கையில் வாழும் சைவ வெள்ளாளர்கள் மத்தியில் கிரந்த தானம் செய்யும் வழக்கம் பெரிய அளவில் இன்றும் உண்டு.

சுவடிகளைத்தேடுவது ஒரு போராட்டம் எனில் அவற்றைப் பதிப்பிப்பது அடுத்த போராட்டம்.ஏனெனில் ஒரு நூலைப்பாடிய புலவர் தம்மிடம் பாடம் கேட்கும் மானவர்களுக்கு அதைச் சொல்லிக் கொண்டே வருவார். அவர்கள் அதை ஏட்டுச் சுவடியில் எழுதுவார்கள்.இடையிடையே ஆசிரியர் கூறும் மற்ற மற்றச் செய்திகளையும் அவர்கள் இரண்டு இரண்டு வரிகளுக்கிடையே எழுதி வைத்துக் கொள்வதுண்டு. மற்ரவர்கள் அதைப்பார்த்து பிரதி செய்து கொள்ளும் போது அந்தக் குறிப்புகளை பழைய மூலத்தோடும் உரையோடும் சேர்த்து எழுதி விடுவார்கள். இதே போன்று எழுதுவதில் ஏராளமான பிழைகள்  ஏற்படும்.சுவடிகளில் மேற்கோள் செய்யுள்களைப் பிரித்தறிவது கடினம். உரை இல்லாத மூலங்கள், எழுத்தும் சொல்லும் குறைந்தும் பிறழ்ந்தும்,திரிந்தும் பலவாறு வேறுபட்டிருக்கும். சில சுவடிகள் சிதைந்தும் கிடைக்கும். மிகுந்த பொறுமையுடனும் பொறுப்புடனும் வேறுபிரதிகளுடனும் உரையாசிரியர் குறிப்புகளுடனும் ஒப்பிட்டுப்பார்த்து இரவு பகலாக உழைத்து மெய்ப்பு திருத்தி உ.வே.சா. இப்பதிப்புகளைக் கொண்டுவந்தார் என்பர்.

உ.வே.சா. அவர்கள் குறிஞ்சிப் பாட்டைப் பதிப்பிக்க முயலும் பொழுது அதில் கூறப்பட்டுள்ள 99 பூக்களில் மூன்று பூக்களின் பெயர்கள் தெளிவு பெறாமலே இருந்தனவாம்.

அதனைத் தெளிவுபடுத்திப் பதிப்பித்தாராம். அதனைப் போலவே சிலப்பதிகாரமா அல்லது சிறப்பதிகாரமா என்ற ஐயப்பாடு எழுந்து சிலப்பதிகாரம் தான் என்று அவர் முடிவு எடுப்பதற்கு மிகுந்த காலம் தேவைப்பட்டது என்பர்.

ஏட்டுச் சுவடியிலுள்ள ஒரு நூலை ஆராய்ந்து, வெளியிடுவதில் உண்டாகும் துன்பம் மிக அதிகம். அச்சுப் பிரதியில் உள்ளவாறு ஏட்டுச் சுவடி அமைந்திராது. சுவடியில் எழுதுவோரால் நேரும் பிழைகள் குறியீடுகள் கொம்பு கால் புள்ளி முதலியவை இரா. நெடிலுக்கும் குறிலுக்கும் வேறுபாடு தெரியாது. அடிகளின் வரையறைகளும் இரா. இது மூலம், இஃது உரை, இது மேற்கோள் என்று அறியவும் இயலாது. எல்லாம் ஒன்றாகவே எழுதப்பட்டிருக்கும். ஏடுகள் அவிழ்ந்தும் முறை பிறழ்ந்தும் முன் பின்னாக மாறியும் முழுதும் எழுதப் படாமலும் இருக்கும் என்று உ.வே.சா. பதிப்புப் பணியின் சிக்கல்களைப் பட்டியலிட்டுக் காட்டுகிறார். இத்துணை இடையூறுகளுக்கு இடையிலும் உ.வே.சா. அவர்கள் பதிப்பித்த நூல்கள் ஏராளம்.

( பதிப்பித்தலில் இருக்கின்ற சிக்கல் நிலை பற்றி சி.வை. தாமோதரம்பிள்ளை இப்படிச் சொல்கிறார்.” பதிப்புச்சிக்கல் பற்றி அவர் குறிப்பிடும் போது ஏடு எடுக்கும்போது ஓரஞ் சொரிகிறது. கட்டு அவிழ்க்கும் போது இதழ் முறிகிறது. ஏட்டைப் புரட்டும் போது துண்டு துண்டாய்ப் பறக்கிறது. இனி எழுத்துக்களோ என்றால் வாலும் தலையும் இன்றி, நாலு புறமும் பாணக் கலப்பை மறுத்து மறுத்து உழுது கிடக்கின்றது என்று சி.வை.தாமோதரம்பிள்ளை பதிப்புப் பணியில் நேரிடும் சிக்கல்களை எடுத்துக் காட்டுகிறார். (கலித்தொகை பதிப்புரை)

அப்போது ஆங்கிலேயர் ஆட்சி நம் நாட்டில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அந்நாளில் பழந்தமிழ் சுவடிகளைக் கற்பவரும் இல்லை, அவற்றை பாதுகாக்க நினைப்பவரும் இல்லை என்ற நிலை நாட்டில் நிலவியது.

கிடைத்தற்கரிய இத்தகைய ஏடுகளின் அருமை தெரியாமல் அவை எப்படியெல்லாம் அழிக்கப்பட்டு வந்தன என்பதை “என் சரித்திரம்” என்ற புத்தகத்தில் அவர் ஆதங்கத்தோடு விவரிக்கிறார். வரகுண பாண்டியர் வைத்திருந்த சில ஏடுகள் கரிவலம் வந்த நல்லூர் ஆலயத்தில் இருப்பதாக கேள்விப்பட்டு அங்கு சென்று அவற்றைப் பற்றி விசாரித்தார் உ.வே.சா. குப்பை கூளங்களாக கிடந்த சுவடிகளை என்ன செய்வதென்று தெரியாததால் ஆகம சாத்திரத்தில் சொல்லியிருந்தபடி செய்துவிட்டோம் என்று கூறினார் அறங்காவலர் ஒருவர். என்ன செய்தீர்கள் என்று உ.வே.சா கேட்க, பழைய ஏடுகளையெல்லாம் கண்ட இடத்துல போடக்கூடாதாம். ஏடுகளையெல்லாம் நெய்யில் நனைத்து ஒரு பெரிய குழி வெட்டி அக்னி வளர்த்து அதுல தான் போட வேண்டுமாம். அந்த ஏடுகளையெல்லாம் அப்படிதான் செஞ்சோம் என்று கூறினார். அதிர்ந்து போய் உள்ளம் பதறினார் உ.வே.சா. இப்படி எங்காவது ஆகமம் சொல்லுமா? அப்படி சொன்னால் அந்த ஆகமத்தையல்லவா முதலில் எரிக்க வேண்டும். என்று கொதித்துப் போனார் உ.வே.சா.

மற்றொரு இடத்தில் பழைய சுவடிகளை தேடிச் சென்ற போது அவருக்கு கிடைத்த பதில் இதுதான்… “ஐயா எல்லாச் சுவடிகளும் நல்லா மக்கி போச்சு, பல சுவடி ஒடைஞ்சு போச்சு அதுல என்ன எழுதியிருக்குன்னு எங்களுக்கு படிக்க தெரில…சும்மா வீணா இடத்தை அடைச்சுகிட்டு இருக்கேன்னு சொல்லி எல்லா சுவடிகளையும் ஒரு கோணிப்பையில் கட்டி ஆடி பதினெட்டுன்னைக்கு ஆத்தோட விட்டுட்டேன்”… என்று கூறினாராம். இதுபோன்ற மூடச் செயல்களால் எத்தனை கருவூலங்கள் கரைந்தும், செந்தீயில் பொசுங்கியும் போயிருக்கும் என்று எண்ணி உயிர் உருக கலங்கினார் தமிழ்த்தாத்தா உ.வே.சா. இவற்றையெல்லாம் கடந்துதான் திருத்தக்க தேவர் இயற்றிய சீவக சிந்தாமணி என்ற நூலை 1887-ஆம் ஆண்டில் ஓலைச் சுவடியிலிருந்து ஒரு புத்தகமாக தொகுத்து வெளியிட்டார். ஒரு நல்ல சிறந்த இலக்கியத்தை அழிவிலிருந்து காப்பாற்றிவிட்டோம் என்று அகமகிழ்ந்தார்.

1906ம் ஆண்டு தமிழ் தாத்தா தமிழ்நூலகம் உ.வே.சா.அவர்களுக்கு ‘மகா மகோ பாத்தியாய’ என்ற பட்டத்தை இந்திய அரசு வழங்கிய போது பாரதியார் அவரைப்பற்றி பாடிய வரிகள் இவை.

“ நிதியறியோம் இவ்வுலகத் தொருகோடி
இன்பவகை நித்தம் துய்க்கும்
கதியறியோம் என்று மனம் வருந்தற்க
குடந்தைநகர்க் கலைஞர் கோவே
பொதியமலைப் பிறந்த மொழி வாழ்வறியும்
காலமெல்லாம் புலவர் வாயில்
துதியறிவாய் அவர் நெஞ்சின் வாழ்த்தறிவாய்
இறப்பின்றி துலங்குவாயே”.

இவ்வாறு தமிழ் அறிஞர்கள் எல்லாம் சிரமப்பட்டு போட்டுமுடித்து கட்டிக்காத்து தந்த இந்தத் தமிழ் வீதி வழியாக நாம் சங்க காலத்துக்குள் புகுகிறோம்.

Image

Image

Image

அதோ ஒளைவையில் குரலும் குடிலும் தூரமாய் தெரிகிறது……

சங்ககாலத்து ஊருக்குள் நுழைகிறோம்.

.Image

தொடரும்….

 
Leave a comment

Posted by on 10/03/2014 in Uncategorized