RSS

Monthly Archives: April 2020

கொரோனா – கவிதைகளுக்கான அழைப்பு

corona

2020 உலகுக்கு அறிமுகப்படுத்திய; இன்னமும் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப் படாத கொடிய கிருமி கொரோனா. coronavirus அல்லது covid 19 pandemic என அழைக்கப்படும் இந்த உயிர்கொல்லிக் கிருமி உலகத்தையே முடக்கிப் போட்டுள்ளது.

கடந்த வருட இறுதியில் சீனாவில் உள்ள Wuhan மாகாணத்தில் கண்டறியப்பட்ட இந்த உயிர்கொல்லிக் கிருமி இன்று மக்களின் வாழ்வாதாரத்தையே ஆட்டம் காண வைத்துள்ளது.  உலகளவில் 2,704,676 பேர் பாதிக்கப்பட்டும் 738,032 பேர் குணமாகியும் 190,549 பேர் இறந்தும் போயுள்ளனர். ( 22.4.2020 திகதிக் கணக்குப் படி)

கண்ணுக்குத் தெரியாத எதிரியோடு உலகம் போராடுகிறது.

இவ் வருட ஆரம்பத்தில் நடந்த அனர்த்தமான காட்டுத்தீயில் இருந்து அவுஸ்திரேலியா தன்னை சுதாகரித்துக் கொள்ளுவதற்கிடையில் இங்கும் கொரோனா வைரசின் பரவல் நாட்டை முடக்கிப் போட்டுள்ளது. பல ஆயிரக்கணக்கான மக்கள் வேலைகளை இழந்து போயுள்ளனர். அநேக வியாபாரத் தலங்கள் மூடப்பட்டு விட்டன. பாடசாலைகள் இயங்குவது கணனி வழியிலானதாக மாற்றப்பட்டு விட்டது. மேலும் அநேகர் வீட்டில் இருந்த படியே வேலை செய்ய நிர்ப்பந்திக்கப் பட்டுள்ளனர். பொது கேளிக்கைகள், கடற்கரைகள், இறப்பு வீடுகள், திருமணங்கள் போன்ற மக்கள் கூடும் இடங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

வீடுகளுக்குள் திடீரென முடங்கி இருக்க நிர்ப்பந்திக்கப்பட்ட மக்களின் இந்த எதிர்பாராத முடக்க நிலையும் நிதி நிலவரம் போன்ற இன்னோரன்ன காரணங்களும் மக்களை மனதளவில் பெருமளவில் பாதிக்க, அதன் காரணமாக மதுபாவனை அதிகரிப்பும் குடும்பவன்முறைகளும் அதிகரித்திருப்பதாக ஒரு புள்ளிவிபரம் கணக்குச் சொல்கிறது. அந்த நிலையை நீக்குவதற்காக அரசு மேலதிகமாக பல இலட்சங்களை ஒதுக்கி இருக்கிறது. ஆஸ்பத்திரிகளோ நோயாளிகளால் நிறைந்து போயுள்ளன. 22.4.2020 கணக்கெடுப்பின் படி அவுஸ்திரேலியாவில் 6,667 பேருக்கு இந் நோய் அடையாளம் காணப்பட்டும் அதில் 5,095 பேர் குணமாகியும் 76 பேர் இறந்தும் போயுள்ளனர்.

தடுப்பு மருந்து இன்னமும் கண்டுபிடிக்கப்படாதிருக்கும் இன்றய நிலையில் அதன் துரித பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கோடும் அதனைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் வேண்டி Social Isalation என்னும் எல்லோரும் வீட்டுக்குள் முடங்கி இருக்க நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறோம்.

அது பல்வேறு விதமான சமூக விளைவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. நன்மையும் தீமையும்; குழப்பமும் பிரச்சினைகளும் சட்ட அமைவுகளும் தீர்வுகளுமாக சமூகம் முன் எப்போதும் நம் வாழ்நாளில் சந்தித்திருக்காத புதிதான நிலை ஒன்றை எட்டி இருக்கிறது.

அது குறித்து நம் அவுஸ்திரேலியக் கவிஞர்களின் கருத்தோவியங்களை; கவிபேழைகளை; உணர்வில் தோய்ந்த கான பெட்டகங்களை; உயர்திணை அவுஸ்திரேலிய தமிழ் கவிஞர்களின் வரலாற்றுப் பொக்கிஷமாக இங்கு ஆவணப்படுத்த விளைகிறது.

அவுஸ்திரேலியத் தமிழ் கவிஞர்களே!

உங்கள் கவிமழைகளை இம்மாத இறுதிக்கிடையில் uyarthinai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள். உங்கள் அத்தனை பேரின் கவிதைகளும் அதன் திகதி வாரியாக அடுத்த மாத ஆரம்பத்தில் இதே தளத்தில் நிச்சயமாகப் பிரசுரமாகும்.

காலப்போக்கில் இதுவரை வெளிவந்தவற்றில் சிறந்த கவிதைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு கவிதாஆவணமாக ஆக்குவது எங்கள் நோக்கமாகும்.

 
Leave a comment

Posted by on 24/04/2020 in Uncategorized

 

மழை

மழை பொழிந்தது!

நீண்ட பெரும் காத்திருப்புக்குப் பின் மழை சோ எனப் பெய்தது. நிலம் குளிர்ந்தது. மனம் நிறைந்தது.

இரண்டு கவிஞர்கள் அதனை தம் கவிக் கிண்ணங்களில் ஏந்தி இங்கு தருகிறார்கள்.

 

1. கவிஞர். பாமதி சோமசேகரம்

rain

ஒரே ஒரு மழை

லட்சம் மழைத்துளிகள்

பறக்கும் பந்து போல அசுரக்காற்று

பெருத்த கண்களையொத்த

நீர்த்துளிகள்.

 

யன்னல்கள் பூத்தகண்கள்

வாஞ்சையாய் அழைக்கின்றன

வேர்த்துக் கிடக்கும் கண்கள் அவை.

அழமறுக்கும் கண்கள் அவை.

 

மழைக்குள் கோபம்.

காடுகள் தீப்பற்றி எரிந்த கோபம்

காற்று மரங்களின் தலையை

பிடித்து கோரமாய் ஆட்டியது.

எங்கே பிஞ்சுப் பறவைகள்

என்றழுதது…..

பற்களை நறநறவென்று நெரித்து

வீடுகளை முட்டி மோதியது.

இறுதியாக அது எதையோ பேச

விரும்புகிறது.

 

மனிதர்கள் எல்லோரும் ஒளிந்து

கொண்டார்கள் கோழைகள்…

வீட்டின் கூரைகள்

மூடப்பட்ட சவப் பெட்டிகள் போல

மழையில் மெளனமாய் நனைந்தன.

நான் மட்டும் எப்படி வெளியே வந்தேன்?

இப்போது மழையானேன்?

ஏரிகளின் எல்லைகளை உடைத்து

ஓடினேன்..

மண்ணைத் தன்னில்

சுமந்து கொண்டோடிய

வெள்ளத்திடம் மறக்காமல் கேட்டேன்

இப்போது இது யார் தேசமென்று…

வாகனங்கள் வரும் தெருக்களில்

நின்று கைகளை அசைத்து

நர்த்தனமாடினேன்

அடர்காட்டின் நிலங்களை

மூடியிருந்த

வேர்களை விரல்களால்

தொட்டு ஸ்பரிசித்தேன்.

பறக்கும் மழைத்துளிகளின்

இறகுகளை முத்தமிட்டேன்…

 

மழை பாடியது காற்றின் பாடலை

அலைகளின் பாடும் அதே ஓசை.

வெள்ளைக் கடலொன்று

அலைகளை எறிந்து விட்டு காற்றில்

ஏறி மிதக்கிறது

மழையென்றே!

 

எங்கு ஒழிந்து கொண்டாய்?

என் நூற்றாண்டுக் காதலனே,

வெளியே வா!

காற்றில் மிதக்கின்ற கடல் போல

நாமும் மழையில் நனைவோம்.

மழை பாடும்

பிரபஞ்ச ஆத்மாவின் பாடலை

சேர்ந்தே இசைப்போம்.

மழைத்துளிகளால் நனைந்த

நம் உடல்களை பூமியின் நிலத்தில்

விதைப்போம்.

 

நாளை

நானும் நீயும் ஒரு பச்சை

வனமாவோம்

பறவைகளைச் சுமப்போம்.

காட்டுத்தீயை விழுங்குவோம்.

செந்தீயில் மறுபடியும் மறுபடியும்

பல நிலங்களாக வானத்தைப்

பார்க்க உயிர்ப்போம்.

பூமியின் மண்ணை எம் மூச்சில்

சுமப்போம்….

 

இப்போதே பறந்து வா என்னுடன்….

கவிஞை. பாமதி சோமசேகரம் – 9.2.2020.

……………………………………………………………………………..

rain 1

       மழையே தொடர்வாய்

                                    கவிஞர். நந்திவர்மன்

மழையே பொழிவாய் மனது மகிழ

அழைத்தோம் வந்தாய் அன்பே நன்றி

அழிவைத் தடுக்கும் ஆற்றல் உடையாய்

குழைகள் தளிர்க்கக் கூடப் பெய்வாய்! (1)

 

காதல் இல்லாக் கணவன் போலே

வாதஞ் செய்து வாராதிருந்தாய்

பேதங் கொண்டாய் பின்னை வந்த போதும்

உடனே போனாய் ஓடி! (2)

 

எங்கே காணோம் என்றே தேடி

மங்கும் மனமாய் மகிழ்ச்சி இழந்தோம்

பங்கம் தீர பச்சை எங்கும்

பொங்கும் வரைக்கும் பொழிந்து போவாய்! (3)

 

பள்ளம் நோக்கிப் பாயும் நீராய்

உள்ளம் குதிக்க ஒலிக்கும் இசையாய்

வெள்ளம் போடும் வேக மழையாய்

வள்ளல் போலே வாரி வழங்காய்! (4)

 

எந்தாய் போலே இரக்கம் கொண்டு

வந்தாய், இன்றுன் வரவால் மகிழ்ந்தோம்

தந்தாய் தண்ணீர் தழைக்க நாங்கள்

எந்தை பெருமான் ஈசன் அருளே! (5)

 

கவிஞர். த. நந்திவர்மன், தை 2020.

 
Leave a comment

Posted by on 23/04/2020 in Uncategorized

 

காட்டுத் தீ – மழைக்கான கவிதை –

2020 ஜனவரி மாதம் நாம் நம் வாழ்நாளில் முன் எப்போதும் கண்டிராத அளவுக்கு காட்டுத்தீயின் பரவலையும் சேதத்தையும் அவுஸ்திரேலியா சந்தித்தது.

புகை போர்த்த மண்டலமாய் வானுக்கும் மண்ணுக்கும் இடையிலான காற்றுவெளி கபில நிறமாய் சூழ, தீயின் வெப்பியாரத்தின்  பல்வேறு விதமான வடிவங்களையும் தீ பரவாத பிராந்தியங்களும் சந்தித்தன. பல இலட்சக்கணக்கான வனவிலங்குகள், விவசாயிகளின் கால்நடைகள், மாடுகள், செம்மறி ஆடுகள், குதிரைகள், கோழிகள், பூனை, நாய் ஆகிய வீட்டு உயிரினங்கள்,மரங்களில் வாழ்வன என சொல்லவொணா எண்னிக்கையில் செத்தொழிந்தன; கருகி மாண்டன.  பல இலட்சக்கணக்கான ஹெக்ரெயர் கொண்ட காட்டு வளங்கள் காணாமலே போயின. பல லட்சக்கணக்கான உடமைகள் சேதமாயின. சில மணித்துளிகளுக்குள்ளேயே பல ஆயிரக் கணக்கான மக்கள் அகதிகளாயினர்.

வாரக் கணக்காகச் சூரியன் சுட்டெரித்த படி இருந்தான். மருந்துக்கும் மழை இல்லை. இத்தகைய காட்டுத்தீயை எதிர்கொள்லத் தயாரான நிலையில் தீயனைப்புப் படையினரிடமும் போதிய வளங்கள் இருந்திருக்கவில்லை. சூரியனின் வெப்பம் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு 48 பாகையில் காய்ந்தது.

அவுஸ்திரேலியாவுக்குக் காட்டுத்தீ புதிதல்ல என்றாலும் இந்தக் காட்டுத்தீயும் அது விளைவித்த சேதங்களும் புதிது! 2020 புது வருடத்தின் தொடக்கமே நமக்கு சேதத்தோடும் உக்கிரமான சூரியனின் கோப நாக்குகளோடுமே தொடங்கி இருக்கிறது.

அது குறித்து நம் கவிஞர்கள் தந்த கவிதைகள் இங்கு பிரசுரமாகின்றன. அவற்றைப் பணிவன்போடு இங்கு பகிர்ந்து கொள்ளுகிறேன்.

bush fire. 2019 aus.

1.                                               மழையே பொழியாயோ?

கவிஞர் நந்திவர்மன். 

வருண பகவானே!

மழையாய் பொழியாயோ?

மரணப்படுக்கையிலே

மருண்டு நிற்கின்றோம்

தருணம் இதுவே தான்

மழையைத் தாராயோ?

கருணை காட்டாயோ?

கலக்கந் தீராயொ (1)

 

நாடு முழுவதுமே

நன்றாய்த் தீப்பற்றிக்

காடு எரிகின்ற

காட்சி கதிகலக்கும்

வீடு பல எரிய

விலங்கு பலமாள

பாடுபடுகின்றோம்

பதைப்பைத் தீராயோ? (2)

 

மெல்லப் பெய்தாயே

மேனி நனைந்திடவே

சொல்லிக் கொள்லாமல்

தொலைந்து போனாயே?

அல்லும் பகலும் நாம்

அல்லல் படுகின்றோம்

தொல்லை தீராயோ?

தொடர்ந்து பெய்யாயோ? (3)

 

தொடர்ந்து பெய்தால் தான்

துயரம் தீருமன்றோ?

அடர்ந்த காடெரியும்

அவலந் தீருமன்றோ?

படர்ந்த தியணையப்

பச்சை மரம் வளர

இடர்கள் போயகல

இசையாய் பொழியாயோ? (4)

 

நீண்ட காலங்கள்

நின்னைக் காணாது

வேண்டும் நீரின்றி

விதிர்த்துப் போனோம் நாம்

மூண்ட பெருந் தீயால்

முறிந்து போனோம் நாம்

மீண்டும் பெய்யாயோ?மேகம் பொழியாயோ? (5)

 

வரண்டு போனோமுன்

வரவைக் காணாமல்

இருண்ட காடெரியும்

எங்கும் தீப் பரவும்

திரண்டு அணைக்கின்ரார்

தீயோ அணையவில்லை

முரண்டு பிடிக்காதே

முகிலே பொழியாயோ? (6)

 

ஊழிக்காலத்து

ஒருவா சிவனேநாம்

வாழ வேண்டியுனை

வாழ்த்தி வனங்குகிறோம்

ஆழிக்கடலரையன்

அடமே பிடிக்கின்றான்

வீழும் மழையாகப்

பொழியப் பணிப்பாயே! (7)

 

– ஆழிக்கடலரையன் – கடலுக்கு அரசனாகிய வருணன்.

ஆக்கம்:த. நந்திவர்மன், சிட்னி, அவுஸ்திரேலியா, தை 7.2020.

 
Leave a comment

Posted by on 23/04/2020 in Uncategorized

 

மனித நேயம்

அன்பார்ந்த இலக்கிய நெஞ்சங்களுக்கு வணக்கம்.

இம்மாதம் அதாவது ஜனவரி மாதத்துக்கான கவிதைத் தலைப்பாக ’மனித நேயம்’ என்பதை கவிஞர். ஆறு.குமாரசெல்வம் அவர்கள் பரிந்துரைத்திருந்தார்கள். அதற்கு, பல்வைத்தியக் கலாநிதி. இளமுருகனார். பாரதி அவர்களின் கவிதை மாத்திரம் வரக் கிட்டியது. கூடவே தைப் பொங்கலோடு கவிஞர் ஆறு. குமாரசெல்வம் அவர்களுடயதும்…இரண்டையும் இங்கு பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

எனினும், தாமதமாக அதனை இங்கு பகிர்ந்து கொள்வதை இட்டு மனம் வருந்துகிறேன்.

 

2w5nlzo

 

  மனித நேயம்

                 பல் வைத்திய கலாநிதி இளமுருகனார்பாரதி.

 

உள்ளமதிற் கிளர்த்தெழும்நற் குணங்கள்பல இணைந்த

உயர்ந்ததனிப் பெருங்குணமே மனிதநேயம் அன்றோ?

வள்ளுவனார்  குறள்கொண்டு மனிதநேயம் உரைத்தார்

மாதவத்துத் திருமூலர் மந்திரமாய்த் தந்தார்

தெள்ளுதமிழ்த் திருமுறைகள் அள்ளியள்ளி முகிழ்த்தன

சித்தர்கள் பலர்தோன்றிச் சிறப்பாக வளர்த்தனர்

கொள்ளைபோகா ததனைவருஞ் சந்ததியர் வளர்க்கக்

குழந்தைகளை வழிநடத்தல் பெற்றோர்கடன்  அன்றோ?

 

ஆதரவாய் உணவூட்டி வளர்த்துவரும் வேளை

அன்பதனின் இலக்கணத்தைப் பூரணமாய் விளக்கி

சாதகமாய் நற்பழக்க வழக்கமெலாம் பழக்கி

நல்லதொரு குடிமகனாய்ப் பிள்ளைதனை வளர்க்க

பாதகமாயப்; பிறர்மனதை வருத்திடாநற் பண்பொடு

பரந்தமனப் பான்மைமிகு பாலகனாய் மலர

மாதவத்தால் பிறந்திட்ட பிள்ளைதானோ வென்று

மனிதநேயம் மிக்கோனெனப் பார்ப்பவர்வாழ்த் திடுவர்!

 

ஆறறிவு பெற்றிட்ட மனிதர்கள் சிலரில்

அரியபெரும் மனிதநேயம் வற்றிமறைந் ததாலே

வீறுகொண்டு விலங்குகள்போல் வெறித்தனம்மி குத்து

வேட்டையாடி மனிதர்களைக் கொல்பவரும் உள்ளார்

கூறுபோடச் சாதிமத பிரிவினையைத் தூண்டிக்

குறிக்கோளாய்ச்; சீர்கேட்டை வளர்ப்பவரும் உள்ளார்

பேறுகளை வென்றெடுக்கப் பெரும்பாவம் செய்யும்

பேடிகளாய்ப் பேய்களைப்போல் வாழ்பவரும் உள்ளார்.

 

இறைவனவன் மாந்தர்களைப் படைத்திட்ட போது

ஈடில்லா மனிதநேய நற்பண்பைச் சேர்த்து

நிறைவாகக் கொடுத்திருக்கச் சிலரதற்கு மேலே

நிரைநிரையாய்த் தீயகுணப் போர்வைகளைப் போர்த்துக்

கறையுறையாய்த்  தம்மனத்தைத் துருப்பிடிக்க வைத்துக்

காலமெல்லாம் புனிதமிகு மனிதநேயப் பண்பைச்

சிறைவைத்து வாழ்கின்றார் சிந்தையறிந் திரங்கிடாச்

சிந்தையராற் சமூகமைதி சிதைந்துபோகு தையா!

 

பரம்பொருளின்; படைப்பினிலே உயர்ந்திட்ட இனமாய்ப்

பழந்தமிழன் பண்பாட்டில் மலர்ந்ததொரு காலம்!

கரங்கூப்பிப் பெரியோரைச்; சிரந்தாழ்த்தி வணங்கிக்

காத்திருந்து வருவிருந்து ஓம்பிநலங் காத்து

வரமெனவே மனிதநேயம் தம்முயிரிற் கலந்து

வாழ்ந்துயர்ந்த பெற்றியெலாம் உரைத்திட்டாற் போமோ?

தரங்கெட்டுப் போகாது புலம்பெயரந்த நாட்டில்

தமிழினத்தின் தகைமைகளைக்; காப்பதெங்கள் கடனே!

29.01.2020

 

…………………………………………………………………………………..

 

பல் வைத்திய கலாநிதி பாரதி இளமுருகனார் அவர்கள் ஈழத்துப் புலவர் பரம்பரையை இலங்கச்செய்யத் தோன்றிய நவாலியூர் “தங்கத் தாத்தா” சோமசுந்தரப் புலவர் அவர்களின் மூத்த புதல்வர் புலவர்மணி இளமுருகனார் அவர்களின் மூத்த புதல்வன்; என்பது குறிப்பிடத்தக்கது.

…………………………………………………………………….

 2.மனித நேயம்

கவிஞர். ஆறு.குமாரசெல்வம்

விக்கிபீடியாவுக்கு 003

மகிழ்ச்சி பொங்க வேண்டும்

மனதில் எழுச்சி பொங்க வேண்டும்,\.

மலர்ச்சி பொங்க வேண்டும்

வாழ்வில் கிளர்ச்சி பொங்க வேண்டும்!

உயர்ச்சி பொங்க வேண்டும்

சிந்தையில் உணர்ச்சி பொங்க வேண்டும்

முயற்சி பொங்க வேண்டும்

மலரின் முகிழ்ச்சி பொங்க வேண்டும்

மனித நேயம் பொங்க வேண்டும்

விவசாயி / மாக்கள் மகிழும்

நாளாய் பொங்க வேண்டும்.

…………..

15.1.2020 கவிஞர். ஆறு.குமார செல்வம்.