RSS

”காட்டுத் தீ” – அவுஸ். கவிஞர்களின் கவிதைகள் – 1

 

Aust.b.f

அவுஸ். காட்டுத் தீ – 2019 கார்த்திகை

 

1. உன் பசி அடங்காதோ ஓகோர நெருப்பே

உன் பசி அடங்காதோ ஓகோர நெருப்பே
ஊரெல்லாம் எரிக்கின்றாய் உனக்கிலையோ பொறுப்பே
நன்புசித்தாய் வளங்களை நீ நடமிடவும் களமிதுவா
நாசங்களை விளைப்பதற்கு நாடிவந்த நாடிதுவா
அன்றொருநாள் கண்ணகிக்காய் மதுரையினை எரித்தாயாம்
அரசனாலே நீதிகெட்ட தலைநகரைச் சரித்தாயாம்
இன்றுவந்து ஆசைநாட்டில் ஏன்புகுந்தாய் சொல்லாயோ?
எழில்மிகுந்த ஊர்களெலாம் எரிகிறதே நில்லாயோ?

தருமபுரி எரியூட்டித் தருமத்தைத் தாமெரித்தார்
தகுமாசொல் கும்பகோணக் குழந்தைகளை நீயெரித்தாய்
அரும்புகின்ற முலைகளை அவிழுமுன்னர் அழித்தாயே
அக்கிரமம் நீயென்று அவனியெலாம் பழித்தாரே
விரும்புகிற ஈழத்தின் விழிநிகராம் வீரர்களை
வென்றிடவே இயலாமல் வீசினார்கள் கந்தகத்தை
திரும்புகின்ற பக்கமெல்லாம் மக்களையும் பொசுக்கினார்கள்
தீயபோர் நடத்தித்தான் விடுதலையை நசுக்கினார்கள்

அழகான பண்ணைவீடு அங்குபல கால்நடைகள்
ஆயிரமாம் வேலிகளில் பெருமரங்கள் விலங்கினங்கள்
மெழுகானது இப்போது மூண்டெழுந்து எரித்தாயே
முன்பொருநாள் கருப்புச்சனி நீயெம்மைக் கரித்தாயே
முழுதாகப் பத்தாண்டு முடிந்ததென வந்தாயோ
முடிந்தஉயிர் சிலநூறு நீகண்ணீர் சிந்தாயோ
பழுதாயின எம்வாழ்க்கை பழையகதை இனிவேண்டாம்
போதும் போதும் புறப்படுநீ எப்போதும் வரவேண்டாம்.

– கவிஞர். எந்திராஜ்.ரவிச்சந்திரன், பிறிஸ்பேர்ன், 17.11.2019 –

………………………………………………………………………………………………………………………..

 

2.  காட்டுத்தீ 

அடுக்களைத் தீயது அன்னம் தரும்

ஆலயத்துத் தீயது ஒளி தரும்

இதயத்துத் தீயது எழுச்சி தரும்

எதனையப்பா தந்திடுமிக் காட்டுத்தீ?

 

மும்மாரிமழை பொழிவதற்கே

முறைமுறையாய்க் காடு சமைத்தார்

ஏன் மாறிப் போனதிந்த இயற்கையது

எதனாலோ ஏற்றிவிட்டதிந்தக் காட்டுத்தீ?

 

நாடு அது மக்கள் வாழ

காடு அது மாக்கள் வாழ

வெந்தணலும் காடு புக

செத்து வீழ்வதன்றோ  விலங்கினங்கள்

 

வேண்டாமே காட்டுத்தீ

தீதறியா திவ்யப் பொருள்

தீயதுவே தீண்டி விட்டால்

தீய்ந்துவிடும் போயதுவே

 

காய்ந்து விட்ட சருகெல்லாம்

காட்டினிலே

களையெடுக்க வந்ததிந்த

காட்டுத்தீ யதுவோ?

-கவிஞர். ஆறு.குமாரசெல்வம், சிட்னி, 18.11.2019 –

………………………………………………………………………………………………………

 

3. மகத்தான அதிசயம்

எண்திசையும் வெந்தணலை வீசிவளைத்து
நிற்கும் நடக்கும் பறக்கும் உயிரையெலாம்
ஆகுதியென அள்ளித்தின்று செமித்தபின்னும்
அடங்காப்பசியோடலையும் வெஞ்சாபமுனது.

ஏக்கர்களை எரித்தொழித்தபின்னும்
ஏக்கம் தீராது எரிந்துகொண்டிருக்கிறாய்…
மானுடர் வாழ்வைப் புசித்தபின்னும்
மையல் தீராது மாய்த்துக்கொண்டிருக்கிறாய்

ஓங்கியுயர்ந்த யூகலிப்டஸ் மரங்களின்
தைலச்சாற்றின் கடும்மணத்தால் பிச்சியாகி..
உன்மத்தங்கொண்டு அலைகிறாய்.. சுழல்கிறாய்
கதிரையும் காற்றையும் துணைக்கழைத்து ஓலமிடுகிறாய்..

கானகத்தின் ஈமத்தைக் காவிவந்து
கண்ணைக் கரிக்கிறது கரிக்காற்று
சீர்கெட்டபுவிவெப்பம்பகர்ந்து
செவியோரம் சிரிக்கிறது கொடுங்கூற்று

மூச்சடைக்கும் வனக்காற்றிடை
மிதந்து வருகிறது பிணவாடை
வாதையிலுழலும் வனத்திடை
வாட்டிப்பொசுக்குகிறது வெங்கோடை

சூழ்ந்தெரியும்உன் சுடுதழல்களால்
வெந்துகருகிய கானுயிர்கள் ஒரு புறம்
வனமிடை வாழ்வே வாழ்வென வாழ்ந்தின்று
இல்லும் பொருளும் இழந்தோரொரு புறம்..

பொசுக்கென்று பற்றி புலனுணருமுன்னே
பொசுக்கிப் போக்கிய உயிர்களொரு புறம்..
உயிர்ப்பணயம் வைத்து ஓயப் பொழுதின்றி
தீயணைக்கப் போராடும் திடமனங்களொரு புறம்..

வரலாறு காணா இடரிதுவென்றுணர்ந்து
வலிந்துதுவி நல்கும் நல்லுள்ளங்கள் ஒருபுறம்..
இவர்க்கு நடுவே தாம் வாழ்கின்றன
இச்சைக்காய் தீவளர்க்கும் தீக்குணமும் ஒரு புறம்..

கை நோக கோல் கடைந்துனைக்கொணரும்
அந்நாள் போன்று ஆதிச்சங்கடமில்லை இன்று.
தினவெடுத்தக் கரம் உரசுமொரு தீக்குச்சி
நொடியில் முடித்துவைத்துவிடுகிறது
நெடுவனங்களின் பெருவாழ்வை.
அப்பாவி உயிர்களின் அரும்வாழ்வை..

வேள்வித்தீயென எரிந்துகொண்டே
கேள்வித்தீயினை எறிகிறாய்…
எரியும் தவறு எனதென்றால்
எரிக்கும் தவறு உமதன்றோ?
வாழும் உலகைப் பாழாக்கி
வஞ்சகர் செய்யும் வேலையன்றோ?
பூமிப்பந்தின் வெப்பமுயர்த்தி
பருவம் மாற்றும் பாவமன்றோ..
போதாக்குறைக்கு பொறுப்பிலிகளின்
பேதைமையும் பெருங்காரணமன்றோவென
மூண்டெழும்பும் கேள்வியினுள்ளிருந்து
நீண்டெழும்பித் தீண்டுகிறது அறத்தின் சுவாலை.
கள்ளமௌனம்காத்து தவிர்க்கிறோம் பதிலை.

வனம் கனலுதலென்பது வரலாற்றில் புதிதல்ல…
தானே எரியும் வனம் தானே அணையும்
பழையன கழிதலும் புதியன புகுதலும்
மறுத்தாலும் ஏற்றாலும் மாறா நியதி..
சிலேட்டுப்பலகையில் அழித்தெழுதும் சிறுமியென.
வனமழித்து வனமுயிர்த்தலுன் வாடிக்கை
பச்சாதாபமின்றி பற்றியழித்துப் பார்ப்பதுன் வேடிக்கை.
அழிகின்ற வனத்தின் சாம்பலுரம்
எழுகின்ற வனத்திற்கு அடியுரம்
எல்லாமறிந்தும் ஏனோ மனக்கலக்கம்
எதார்த்தம் உணர்ந்தும் எழும் மதிமயக்கம்

எரிந்தடங்கிய பொழுதொன்றில்
என்றாவது விழும் வான்துளியொன்றில்
பெரு நம்பிக்கையோடு எழக்கூடும்
நாளைய தருவின் கருக்கூட்டம்.
அழித்தொழித்த பின்னும் முளைவிட்டு தளிர்விட்டு
அடுத்தொரு வனம் வளரும் அதிசயமே
மண்ணுயிரை வாழ்விக்கும் மகத்தான அதிசயம்.

– கவிஞை. கீதமஞ்சரி. மதிவாணன், சிட்னி, 24.11.2019 –

…………………………………………………………………………………………….

காட்டுத்தீ

ஓர் வறண்ட நாளில்

ஒளிரும் சிவப்பில்

நடுங்கும் கண்களும் கூசும் வண்ணம்

மிகச்சிறிய தீப்பொறியொன்று

ஏணியின்றி வானத்தில் ஏறியது

 

இதுவரை உதவிய

பொல்லாத காற்றும்

நெருப்பைத் தனக்குள் வளைத்துப்போட

குதிரையைவிட அதிகமாய்ப் பாய்ந்து

போட்டி போடுது பகைவனாய் நின்று

 

மண்ணின் புதையல்கள்

வாழ்க்கையின் சேமிப்பை

வேகமாக இழந்துகொண்டிருந்தன

 

மிருகங்கள் பறவைகள்

மற்றும் மரங்களின் ஓலங்கள்

உதவியைநாடி ஒன்றாக ஒலித்தன

 

வானத்தின் மாடத்தில்

எந்த நட்சத்திரமும் பிரகாசிக்கவில்லை

 

பெரிய பறவைகள்

பாதுகாப்பை நோக்கி மேலே உயர

பயமறியாத சிறிய பறவைகள்

கீழே விவாதித்துக் கொண்டிருந்தன

 

ஒரு மனித முனகல்

குரங்கின் முகத்தில் தெளிவாகத் தெரிந்தது

ஒரு தாடி வைச்ச குவாலா

நிர்வாணப்பட்டு நிற்கதியாய் நின்றது

 

கடுமையான வெப்பம்

காலில் பரவ

சிறு முயலின் பாய்ச்சல்

மரணத்தை நோக்கி மெதுவாகச் சென்றது

 

உடல் உழைப்பில்

சற்று ஓய்வெடுத்த

கால்நடை ஒவ்வொன்றும்

காட்டுத்தனமாக சவாரி செய்தன

 

எரியும் தீயில்

செயலிழந்த சிறிய பிஞ்சுகள்

வலியால் கதறித் துடித்தன

 

இன்னும் காடு எரிகிறது

இன்னும் வெப்பம் உலை போல் கொதிக்கிறது

 

நீண்ட நெடிய மரங்களே

உங்கள் பாதங்கள் வேரூன்றிய போதும்

இரக்கமற்ற நெருப்பிற்குத் தலைவணங்குங்கள்

 

சிறிய கிளைகளே

உயிருக்கு மன்றாடி

உங்கள் கைகளை உயர்த்துங்கள்

 

நாளைய விதைகளே

நெருப்பால் உடைபடும் வரை

செயலற்ற நிலையில் மறைந்திருங்கள்

 

எந்தக் குளிர்ந்த படுக்கையிலும்

இந்த நெருப்பு படுத்துக் கொள்ளாது

 

என் இதயம்

மரங்களுக்கும் அப்பால் செல்கிறது

 

கருப்பு உடை தரித்து

புகைபோக்கிபோல் தனித்து நிற்கும்

எரிந்த மரங்கள் வழியே

என் தேசத்தைப் பார்க்கிறேன்

சேகரிப்புக்காய் காத்திருந்த

என் உறவுகளின்

உடல் வரிசையைப் பார்க்கிறேன்

இன்னும் சில மரணங்களும்

உயிர்களும் எஞ்சியுள்ளன

 

இப்படியே போனால்

எத்தனை பேர் மிஞ்சுவோம்

 

இயற்கையைக் காயப்படுத்தி

அணுசக்தி யுத்தம் பேசும்

புத்திசாலிக் கூட்டமே

அழிவு என்பது

நாம் கற்றுக்கொண்ட ஓர் வாழ்க்கை முறை

 

எரிந்தவற்றிலிருந்து கற்றுக்கொள்வோம்

தடவிக் கொடுப்போம்

தப்பித்த வேர்கள் மீண்டும் முளைக்கட்டும்

இயற்கை நன்றியுடன் சிரிக்கட்டும்

கவிஞை செளந்தரி. கணேசன், சிட்னி, 28.11.2019

…………………………………………………………………………………………………………………………………..

 

அவுஸ். கவிஞர்களுக்கான அழைப்பு

91v6K4iksxL._SY450_

அவுஸ்திரேலியாவில் பல காத்திரமான கவிஞர்கள் இருக்கிறார்கள். சிலர் ஆசு கவிகள்! நினைத்தவுடனே கவி படைக்க வல்லோர். மேலும் சிலர் மரபுக் கவிஞர். வரம்புக்குள் நின்று வசீகரமாகக் கவிதர வல்லோர்! மேலும் சிலர் வீச்சு வாள் போலும் வார்த்தைகளை சுழல விட்டு சொற்போர் செய்ய வல்லார்! இவைகள் எல்லாம் கைக்கொள்ள வல்லாரும் நம்முள்ளே உளர்.

எனினும் அவர்களை  ஒருங்கிணைத்து கவி இன்பம் பெற வாய்ப்புகள் நமக்குள்ளே அதிகம் இல்லை. வாழ்க்கையும் வேலையும் போட்டி போடும் உலகில் சுந்தரத்தமிழில் சிந்துக் கவி இயற்றவும் அதனை இயக்கவும் ஓர் உந்து சக்தி தேவையாகவே இருக்கிறது. ஏனைய கலைவெளிகளுக்கு வேண்டப்படுவது போலவே!

தவிரவும், அவுஸ்திரேலியச் சமூகம் நோக்கியதான கவிஞர்களின் சிந்தனைகளும் அவர்களின் கவிதா விசாலங்களும் கூட பெருமளவு ஆவணப்படுத்தப்படவில்லை என்றே தோன்றுகிறது.

அதன் காரணமாக, வருகிற 2020 புதுவருடத்திலிருந்து உயர்திணையின் செயல்பாடுகளின் ஒரு முன்னோட்டமாக அவுஸ்திரேலியத் தமிழ் கவிஞர்களை ஒன்றிணைத்து மாதம் ஒரு குறிப்பிட்ட தலைப்பில் கவிதைகளைக் கோருவதெனவும்; அவைகள் யாவும் வந்து சேர்ந்த காலக் கிரமத்தின் படி அடுத்த மாத ஆரம்பத்தில் திகதிவாரியாக இந்த உயர்திணை வலைப்பக்கத்தில் பிரசுரிப்பதெனவும் உயர்திணை நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது.

அதன் ஒரு முன்னூட்டமாக மார்கழி மாதத்திற்கான தலைப்பாக, அவுஸ்திரேலியாவில் கடந்த வாரம் முழுக்க பெரும் தாக்கத்தைச் செலுத்திய ”காட்டுத் தீ” என்ற தலைப்பு தெரிவு செய்யப் பட்டிருக்கிறது.

அவுஸ்திரேலியாவில் வாழும் கவிஞப் பெருமக்கள் ”காட்டுத் தீ” என்ற தலைப்பில் உங்கள் கவிதைகளை எழுதி, உங்களைப் பற்றிய புகைப்படத்தோடு கூடிய குறிப்பினையும் இணைத்து uyarthinai@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு உங்கள் கவிதைகளை எழுதி அனுப்புமாறு கோருகிறோம்.

அவுஸ்திரேலியாவில் வாழும் கவிஞர்களுக்கு மட்டுமான இந்த கூட்டுக் கவிதைகள் அவுஸ்திரேலிய பொது சமூகத்தையும் பிரதிபலிப்பதாக இருக்கும் அதே வேளை தெரிவு செய்யப்படும் கவிதைக்கான தலைப்புகள் அவுஸ்திரேலிய தமிழர், பண்பாடு, மொழி, மரபுரிமை, வாழ்வியல், சூழலியல் சார்ந்ததாகவும் பொது சமூகத்தோடு ஒத்திசைவானதாகவும் இருக்கும்.

அனுப்பப்படும் சகல கவிதைகளும் அடுத்த மாத முதல் வாரத்திற்குள் பிரசுரமாகும்.

எதிர்காலத்தில் சிறப்பானதாகவும், சமூகம் சார்ந்த விடயங்களைக் கொண்டதாகவும் விளங்கும் கவிதைகள்  தக்க நடுவர்களால் தெரிவுசெய்யப்பட்டு, அக்கவிதைகளுக்கான கவிஞர்களின் அனுமதியோடும் அவர்களது பெயர்களோடும்  உயர்திணை வெளியீடாக புத்தகமாக வெளிக்கொணரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

மார்கழி மாதத்துக்கான கவிதைத் தலைப்பு: “காட்டுத் தீ”

கவிதைகள் வந்து சேரவேண்டிய மின்னஞ்சல் முகவரி: uyarthinai@gmail.com

அடுத்த மாதத்துக்கான கவிதைகள் தங்களைப்பற்றிய  தகவல்களோடு  வந்து சேர வேண்டிய

முடிவு திகதி: 30.11.19.

 

20/20 இல் 50/50 – கவிஞர். குமாரசெல்வம்

உயர்திணை அன்பர்களுக்கு அன்பார்ந்த வணக்கம்!

பல மாத இடைவெளிக்குப் பின் மீண்டும் புத்துணர்வோடு நாம் எழுந்து வருகிறோம்.

uyarthinai-logo

புது வருடத்தில் (2020) இருந்து பல புதிய விடயங்களை அவுஸ்திரேலிய மண்ணில் காத்திரமாய் கொடுக்கலாம் என்பதை இலக்கியக் குழுவினராக நாம் மனமார நம்புகிறோம்.

அது பற்றிய உரையாடல் நிகழ்ந்த போது, உடனடியாக நம் கவிஞ அன்பர்; நம் உயர்திணையின் ஆரம்பகாலத்தில் இருந்து தன் பங்களிப்புகளைச் காத்திரபூர்வமாக, ஆத்மார்த்தமாக அளித்து வரும் கவிஞர். குமாரசெல்வம் அவர்கள் இயற்றி அனுப்பிய கவிதையை நம் எல்லோருக்குமாக ஓர் உற்சாக பானமாக இங்கு பிரசுரிக்கிறேன். அது ஒரு விடிகாலை நேர ஒரு குவளை தேனீரின் உற்சாகத்தை தரவல்லது என்பது என் நம்பிக்கை!

தமிழின் அமுதமெனவும் இங்கு அது அளிக்கப்படுகிறது.

நேற்றயதினம் ( 14.11.2019 ) அன்று கிட்டிய கவிதை இது.

மனமென்ற ஒன்றினை

குணமென்ற இரண்டினை

இணைத்திட்ட உயர்திணை

இதற்குண்டோ ஈடு இணை!

 

துளிர்விட்ட சிந்தனைக்கு

தூயவனென் வந்தனை!

குளிர்விட்டு வசந்தம் வர

கூடி அமைர்வோம் கூற்றுப் பெற!

 

மலர் மலராய் சேர்ந்தோம்

மாலையாகக் கூடுவோம்!

வண்ணம் வண்ணமாய் கரைந்து

வானவில்லாய் மாறுவோம்!

 

உயர்திணைக்கு வேண்டும் நம்

ஒவ்வொருவர் உறுதுணை

ஒன்றிணைவோம் வரும் ஆண்டு

20/20 ( Twenty / Twenty )

உழைப்பும் தொண்டும் நமக்குள்

50/ 50 ( Fifty / Fifty )

  • கவிஞர். குமார செல்வம். 14.11.2019
 
Image

கவிஞர் அம்பிக்கான உயர்திணையின் வாழ்த்து!

20190628_204411

 

புத்தகங்கள் அறிமுகம்

அன்புடையீர்,

நம் உயர்திணை அமைப்பின் ஆரம்பகாலத்தில் இருந்து உறுப்பினராகச் செயற்பட்டு வரும் நாட்டியக் கலாநிதி. கார்த்திகா. கணேசரின் மூன்று ஆய்வுப் பின்னணி கொண்ட நாட்டியக் கலை குறித்த புத்தகங்கள் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

காலம்தோறும் நாட்டியக் கலை, தமிழர் வளர்த்த ஆடற்கலைகள், மற்றும் இந்திய நாட்டியத்தின் திராவிட மரபு ஆகிய நூல்கள் எதிர்வரும் மார்ச் மாதம் இரண்டாம் திகதி மாலை ஆறு மணிக்கு வைகாசிக் குன்றில் வீற்றிருக்கும் முருகப் பெருமானின் ஆலயமுற்றலின் மருங்கில் அமைந்திருக்கும் கலாசார மண்டபத்தில் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன.

இந் நிகழ்வு சிறப்புற அமைய உங்கள் அனைவரின் ஆதரவையும் எதிர்பாத்திருக்கும் அதே நேரம் இந் நிகழ்வு சிறப்புற அமைய உயர்திணை தன் வாழ்த்துக்களையும் இவ் அரிய நூல்களைத் தமிழ் பேசும் நல்லுலகத்துக்கு ஆக்கி அளித்த நாட்டியக்கலாநிதிக்குத் தன் மனமார்ந்த பாராட்டுக்களையும் சொரிந்து மகிழ்கிறது.

புத்தக அறிமுகம்

 
Leave a comment

Posted by on 30/01/2019 in Uncategorized

 

இலக்கியச் சந்திப்பு – 28 –

இலக்கிய சந்திப்பு - 28 - 24.6.18.

இனிய தமிழ் இலக்கிய நெஞ்சங்களுக்கு வணக்கம்.

எல்லோரும் நலம் தானா?

இவ் வருடம் ஆரம்பித்து ஐந்து மாதங்கள் வெறுமனே ஓடிப் போயின. சற்றே வருத்தம் தான். புலம்பெயர் நாடுகளில் நேரத்தைத் துரத்திப் பிடிக்கும் நம் நாளாந்த பந்தயத்தில் இத்தகைய நெஞ்சுக்கு நெருக்கமான பல விடயங்கள் தவறிப்போய் விடுகின்றன.

மன்னிப்பீர்களாக!

அண்மையில் உலக புத்தக தினத்தைக் உலகமே கொண்டாடியது. யாழ் நூலக அழிப்பு நாள் நிகழ்வை சிட்னி தமிழ் அறிவகம் நினைவுகூர்ந்தது.

எழுத்தியலின் ஆற்றலைக் கொண்டாடும் நாம் என்ன செய்தோம்?

இந்தக் கேள்விக்குப் பதிலாய் இம் மாதம் ’புத்தகங்களின் சம்பாசனையை’  நினைவு கூர்வோம்.

ஒவ்வொரு புத்தகங்களும் ஒவ்வொரு சம்பாசனைகளை நிகழ்த்துகின்றன. அவைகள் நம்மோடு அந்தரங்கமாகப் பேசுகின்றன. எம் சிந்தனைகளில்; அறிவுப் புலங்களில்; நாளாந்த வாழ்க்கையில் கத்தி இன்றி இரத்தம் இன்றி புரட்சிகளைச் செய்ய வல்ல ஆற்றல்களை அவை கொண்டிருக்கின்றன. புத்தகங்களைக் கொண்டாடும் நாங்கள் அவற்றை அனுபவித்து உணர்ந்திருக்கிறோம்.

அவைகள் குறித்து பேசும் சந்திப்பாக இம்மாத இலக்கிய சந்திப்பு அமைவதாக!

நீங்கள் வாசித்து கொண்டாடிய புத்தகங்களுள் உங்களை மிகவும் பாதித்த ஒரு புத்தகம் பற்றி நம்மோடு கலந்துரையாட வாருங்கள். அதனை எழுதியவர் பற்றியும்; அதன் உள்ளடக்கம் பற்றியும்; உங்களை அது பாதித்த விதம் பற்றியும் கலந்துரையாடி அறிவதன் ஊடாக மேலும் பல அறிவுத் தளங்களுக்கு இலகுவாக நாம் பயணிக்கலாம்.

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம்!

உங்கள் அனைவரையும் அன்போடு கலந்துரையாடல் சந்திப்புக்கு அழைக்கிறோம்.

 

தமிழால் இணைந்திருப்போம்.

காலம்: 24.6. 18 ஞாயிற்றுக் கிழமை.

இடம்: சிட்னி தமிழ் அறிவகம்.

தொடர்புகளுக்கு: யசோதா. பத்மநாதன். 0403051657

 
Leave a comment

Posted by on 03/06/2018 in Uncategorized

 

தாமரைச் செல்வியின் வன்னியாச்சி

தாமரைச் செல்வி!

ஈழத்திரு நாடறிந்த எழுத்தாளர்.

thaamarai selvi

ஈழத்தின் சாகித்திய விருதுக்கு பாத்தியதை பெற்றவர்.

வன்னி மண்ணின் இயல்பு நிலையை; மக்களை, மக்களின் வாழ்வியலை, கொண்டாட்டங்களை; துக்கத்தை;குணத்தை; குற்றங்களை மண்மணம் மாறா வகையில் அதன் ஆத்மாவை பேனா முனையில் எடுத்துக் காட்டியதில் அவருடய நாவல்களுக்கும் குறிப்பிடத்தகுந்த அளவில் அவர் எழுதிய  சிறுகதைகளுக்கும் காத்திரமான பங்குண்டு.

அந்த வகையில் அவர் ஒரு சமூக வரலாற்றாளருமாவார்.

கலைஞர்கள் சமூகத்துக்கு கலைகளூடாக அளிக்கின்ற பங்களிப்புகள் மனித பண்புகளை; அவர்தம் சிந்தனை ஓட்டங்களை வரலாற்று வரட்சிகள் எதுவுமின்றி எழிலோடு எடுத்து வருபவை.

யுத்தத்துக்கு முன்பான வாழ்வியலை பின்னர் இரத்தமும் தசையுமாக அது இருந்த போதிலும் சரி – அதற்குள் இருந்த வாழ்வதற்கான உந்துதலை; போரின் வலிகளை, வாதைகளை, சின்னச் சின்ன சந்தோஷங்களை, போருக்குள்ளும் முளைவிடும் விடலைப் பருவ விஞ்ஞாபனங்களை வரலாற்றுப் பக்கங்களில் கலைத்துவமாகக் குறித்து வைத்ததில் தாமரைச் செல்விக்கு ஒரு காத்திரமான பக்கசார்பற்ற பக்கங்கள் உண்டு!

அவருடய  சிறுகதைத்தொகுதி ஒன்று காலச் சுவடு பதிப்பகத்தினரால் 12.1.18 அன்று கவிஞர் சல்மாவின் தலைமையில் சென்னையில் வெளியீடு செய்யப்பட்டது.

அவருக்கு உயர்திணை தன் மனமார்ந்த பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் சொரிந்து மகிழ்கிறது.

 
Leave a comment

Posted by on 13/01/2018 in Uncategorized

 

புத்தாண்டு வாழ்த்துக்கள்

em32

புது வருடத்தில் புத்தக நண்பன் துணை இருக்க இலக்கிய மற்றும் புத்தகப் பிரியர்களுக்கு உயர்திணையின் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

 
Leave a comment

Posted by on 13/01/2018 in Uncategorized

 

இலக்கிய சந்திப்பு – 27

இலக்கிய சந்திப்பு - 27

இலக்கிய ஆர்வலர்கள் எல்லோருக்கும் வணக்கம்!

எல்லோரும் நலம் தானே?

இடையிலே ஒரு சிறிய இடைவேளை, கொஞ்சம் குளிர் காலத்தின் மீதான சாக்குப் போக்கு, அதனோடு கூடவே தனிப்பட்ட வேலைகள் விடுமுறைகள் என்று கொஞ்சம்…

மேலும் இடையிலே நடந்த நமது இரண்டு புத்தக வெளியீட்டு விழாக்கள்….

பிறகு வந்துவிட்ட குளிர்காலம்…

அதனால் இலக்கிய சந்திப்புகள் ; அது பற்றிய ஏற்பாடுகளில் கொஞ்சம் தடங்கல்கள். இருந்த போதும் மூத்த வானொலி ஊடகவியலாளர் திரு. எழில் வேந்தன் அவர்களுடனான இலக்கிய சந்திப்பொன்றுக்கு முஸ்திப்புகள் நடந்து கொண்டிருந்த வேளையில் விக்ரோரியா மாநிலத்தில் இருந்து பாரதி பள்ளி ஸ்தாபகரும், சமூக ஆர்வலரும், கலை இலக்கிய வாதியும், நாடகங்கள் பல எழுதி நெறியாள்கை செய்து மேடை ஏற்றியவருமான திரு. மாவை நித்தியானந்தன் அவர்கள்;  அவரோடு கூடவே எழுத்தாளர் என நம் எல்லோராலும் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர் முருக பூபதி அவர்களும் இங்கு சிட்னிக்கு வர இருக்கிறார்கள் என்று அறிந்து கொண்ட காரணத்தால் மிக அவசர அவசரமாக இந்த இலக்கிய சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்யும் எண்ணம் ஏற்பட்டது.

இவ் இருவரும் இலக்கிய, கலை உலகில் பல தசாப்தங்களாக ஓய்வு ஒழிச்சல் இன்றி இயங்கி வருபவர்கள். சமூகத்தின் மீதான கரிசனை கொண்டவர்கள். தாம் எடுத்துக் கொண்ட கலா ஆயுதத்தின் மூலமாக சமூகத்தினை சீரியதாக்க சமூக  செல் நெறியை கலை வடிவால் செப்பனிட முயன்றவர்கள். முயன்றுகொண்டு இருப்பவர்கள். தாயகத்தின் மீது ஒரு காலும் புலம்பெயர்ந்த அவுஸ்திரேலிய மண்ணில் ஒரு காலுமாக இயங்குபவர்கள். அதனால், பலவிதமான அனுபவங்களைத் தம்மோடு சுமந்து கொண்டிருப்பவர்கள்.

இந்த அனுபவங்கள் அவர்கள் சுமந்து திரியும் அரிய பொக்கிஷங்கள்.

அவர்கள் சிட்னிக்கு வரும் அரிய இந்த சந்தர்ப்பத்தில் அவர்களின் சமூக கலை இலக்கிய கருத்தோட்டங்களின் பின்னணியில் அவர்களின் சம கால சமூக வாழ்க்கைக் கோலங்கள் கலை இலக்கிய வடிவம் பெறும் அனுபவங்களை கருத்தோட்டங்களை, கேட்கவும் நம் அபிப்பிராயங்களைப் பகிரவும் புதிய விடயங்களை அறியவும் ஆர்வலர்கள் எல்லோரையும் அன்போடு அழைக்கிறது உயர்திணை!

 

 
Leave a comment

Posted by on 17/07/2017 in Uncategorized

 

ஈழத்துச் சிற்றிதழ்கள்

ஈழத்துச் சிற்றிதழ்கள்.
-ஞானம் ஆசிரியர். தி. ஞானசேகரன்

(அவுஸ்திரேலிய சிட்னி உயர்திணை அமைப்பு 30–04-2017 அன்று நிகழ்த்திய ‘ஈழத்து தமிழ் நவீன இலக்கிய வெளி” – ஞானம் 200 ஆவது இதழ் (சிறப்பிதழ்) அறிமுக விழாவில் ஆற்றிய உரை)

சிற்றிதழ்கள் என்றால் என்ன? அதன் வரைவிலக்கணம்யாது? என்பதை முதலில் விளங்கிக்கொள்வது முக்கியமானது.
சிற்றிதழ்கள் என்பவை ஒரு நாட்டின் இலக்கியப் பாரம்பரியங்கள், இலக்கிய உலகில் ஏற்படும் மாற்றங்கள், வளர்ச்சிப்போக்குகள், கருத்தோட்டங்கள் போன்றவற்றின் காலக்கண்ணாடியாகத் திகழ்பவை. சிற்றிதழகள்; ஒரு தீவிரமான உள்ளடக்கத்துடன் ஒரு குறிப்பிட்ட வாசகரைச் சென்றடையும் இதழ்களாகும.; சிற்றிதழ்களின் முதன்மை நோக்கம் கருத்துப் பகிர்வே. அவை வியாபாரநோக்கில் இலாபமீட்டுவதை முதன்மை நோக்கமாகக் கொள்பவை அல்ல.

ஒத்த இலக்கியக் கருத்துக்கொண்ட ஒரு குழுவினர் தம்மிடையே கருத்துப் பரிமாறிக்கொள்ளவும் தொடர்பிற்காகவும் தரமான உண்மையான மொழி இனம் நாடு தொடர்பான வரலாற்றுக் கருத்துக்களையும் நடப்பியல் நிகழ்வுகளையும் நுட்பமாகப் பதிவுசெய்கின்ற அச்சுவடிவில் வரும் இதழ்களை சிற்றிதழ்கள் எனச் சொல்லலாம்.

சிற்றிதழ்களுக்குச் சில பண்புகள் இருக்கின்றன. அவற்றை முதலில் பார்ப்போம்.
1) சிற்றிதழ்களின் வாசகர்கள் பெரும்பாலும் அறிவு ஜீவிகள். சமூக மட்டத்தில் இவர்களின் எண்ணிக்கை குறைவானதாக இருக்கும். இந்த இதழ்கள் குறைந்த எண்ணிக்கையிலான கூட்டத்தினரிடையே வலம்வரும்.
2) இந்த இதழ்கள் படைப்பாளிகள் உருவாவதற்கு தளமாக அமைவதோடு பயிற்சிக்களமாகவும் அமையும்.

3) இந்த இதழ்கள் வாசகர்களைக் கவர்வதற்குச் சமரசம் செய்வதில்லை
4) தொடர்ச்சியான இலக்கியச் சிந்தனைக்கும் ஆக்கபூர்வமான இலக்கியம் சம்பந்தப்;பட்ட விவாதத்திற்கும் இடமளித்தல், புதிய படைப்பு முயற்சிகளை ஊக்குவித்தல், காய்தல் உவத்தல் இன்றி விமர்சனங்களை வரவேற்றல், நவீன இலக்கியத்தை வாசகனுக்கு அறிமுகப்படுத்துதல், தமிழ் இலக்கியப் பரப்பிலும்; உலக இலக்கிப்பரப்பிலும் நிகழ்ந்து வரும் மாற்றங்களை அறிவித்தல் போன்ற பணிகளை சிற்றிதழ்கள் ஆற்றுகின்றன. வாசகனை தீவிர இலக்கியத்துக்கு ஆற்றுப்படுத்த, பொதுவெளியில் எழுத்தாளர்கள் வாசகர்களை ஒன்றிணைக்க சிற்றிதழ்கள் உதவுகின்றன.

சிற்றிதழ்களின் உள்ளடக்கங்களாக, சிறந்த இலக்கியப் படைப்புகளை வெளியிடுதல், சிறந்த இலக்கிய ஆளுமைகளின் அறிமுகம். மொழிபெயர்ப்புப்படைப்புகள், நேர்காணல்கள், கலைஇலக்கிய நிகழ்வுகள் குறித்த பதிவுகள,; புதிய நூல்கள்பற்றிய அறிமுகங்கள் என அமையும்.
ஆனாலும்; சிற்றிதழ்கள் அனைத்தும் மேற்குறிப்பிட்ட இந்த அளவுகோல்களின்படி உள்ளனவா? இது மிகப்பெரிய கேள்விக்குறியாகவே உள்ளது. மேலும் இன்று எமக்குக் கிடைக்கும் தொழில்நுட்ப வசதிகள் மேற்குறிப்பிட்ட அளவுகோல்கள் சிலவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன என்பதையும் நாம் ஏற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியின் வரலாற்றை ஆய்வு செய்தால் அதற்கு உரமிட்டவை இலக்கியச் சிற்றிதழ்கள்தான் என்பதை அறிய முடியும். ஈழத்தில் சிற்றிதழ்கள் எண்ணிக்கையிலும் ஆழத்திலும் பரப்பிலும் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

ஈழத்தில் இதுவரை காலத்தில் நூற்றுக்கும்; மேற்பட்ட சிற்றிதழ்கள் தோன்றியுள்ளன. பாரதி, மறுமலர்ச்சி, கலைச்செல்வி மல்லிகை, குமரன், இளம்பிறை, சிரித்திரன், விவேகி, மரகதம், தேனருவி, மலர், மாலை முரசு, நதி, அலை, திர்த்தக்கரை, அஞ்சலி, கொழுந்து, நந்தலாலா, பூரணி, சுடர் புதுசு, தோழி, நிவேதினி, பெண், புதுமை இலக்கியம், வசந்தம் அஞ்சலி, நதி, களனி, அக்னி, நோக்கு, வாகை, மாருதம், கீற்று, மாற்று, ஊற்று, பாடும்மீன், ரோஜாப்பூ, கதம்பம், பூமாலை, தமிழமுதம், தமிழின்பம், மாணிக்கம் குன்றின்குரல், தாரகை, பொதுமக்கள் பூமி, சுவர், சமர், களம், சுவைத்திரள், கலகலப்பு, அக்கினிக்குஞ்சு, தாயகம், வசந்தம், எழில்,. நாவேந்தன், குங்குமம், கற்பகம், சிலம்பொலி தமிழமுது, வைகறை பொய்கை, காவலன், களனி, கலை, பொன்மடல், களன், விருத்தம், கிருதாயுகம், தேன் மொழி, கவிஞன், க-வி-தை, பொறிகள், சுவடுகள், விடிவெள்ளிகள், பூபாளம், பொன்மடல், முனைப்பு, பெருவெளி, தாகம், விளக்கு, வெளிச்சம் சுதந்திரப்பறவைகள், வியூகம், மூன்றாவது மனிதன், முனைப்பு, பூவிழி, ஆகவே, யாத்திரா, இருப்பு, மறுகா, மறுபாதி, எதுவரை, செங்கதிர், நீங்களும் எழுதலாம் போன்ற இன்னும் பல சிற்றிதழ்கள் தோன்றி மறைந்திருக்கின்றன.

தற்போது யாழ்ப்பாணத்திலிருந்து ஜீவநதி, கலைமுகம் மட்டக் களப்பிலிருந்து மகுடம், அனுராதபுரத்திலிருந்து படிகள், கொழும்பிலிருந்து ஞானம், தாயக ஒலி; புன்னகை போன்ற இதழ்கள் வெளிவருகின்றன.
இங்கே நான்குறிப்பிட்ட சிற்றிதழ்கள் யாவற்றைப்பற்றியும் விபரிக்க முடியாது. அது சாத்தியமும் இல்லை. எனவே எனக்குத் தரப்பட்ட 30 மணித்துளிகளி;ல் வரலாற்று ரீதியாக வகைமாதிரிக்கு சில சிற்றிதழ்கள் பற்றி மட்டும் குறிப்பிடுவேன்.

தமிழில் சிற்றிதழ்களின் தோற்றம்பற்றி ஆராய்ந்தால் தமிழகத்தில் ஆனந்தவிகடன் போன்ற வணிக இதழ்களின் போக்குகளில் அதிருப்தியுற்ற சி. சு. செல்லப்பா என்பவர் எழுத்து என்ற சஞ்சிiயை ஆரம்பித்து நடத்தினானார.; அதனைத் தொடர்ந்து ஏராளமான சிற்றிதழ்கள் காலத்துக்குக் காலம் தமிழகத்திலே தோன்றின.

ஈழத்தில் நிலைமை வேறானது. ஈழத்து இலக்கியத்தை வளர்த்தெடுப்பதில் 1930 இல் தோன்றிய ஈழகேசரி பத்திரிகை பெரும்பணி ஆற்றியது. ஈழத்து நவீன இலக்கியத்தின் கருக்கட்டல் ஆரம்பித்தபோது இப்பத்திரிகை தோன்றி 1958ஆம் ஆண்டுவரை வெளிவந்தது. இந்தப் பத்திரிகையை ஆரம்பித்தவர் குரும்பசிட்டியைச் சேர்ந்த நா. பொன்னையா என்னும் பெரியார்.
இப்பத்திரிகையில் ஈழத்து இலக்கியத்தின் முன்னோடி எழுத்தாளர்கள் எனக்கூறப்படும் இலங்கையர்கோன், சி. வைத்திலிங்கம், சம்பந்தன் உட்பட மேலும் சிலர் சிறுகதைகள் எழுதியுள்ளனர்.
ஈழத்து இலக்கியத்தின் இரண்டாம் தலைமுறை எழுத்தாளர்கள் எனக்குறிப்பிடப்படும் சொக்கன், கனக செந்திநாதன், வ. அ. இராசரத்தினம் போன்றோரும் மேலும் சிலரும் எழுதியுள்ளனர்.
மூன்றாம் தலைமுறை எழுத்தாளர்கள் என்று குறிப்பிடப்படும் எஸ.; பொ. டொமிக் ஜீவா, டானியல் போன்றோரும் இதில் எழுதியுள்ளனர்.
எனவே, ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சியில் ஈழகேசரி பத்திரிகைக்கு முக்கிய இடமுண்டு.

அதேவேளையில் ஈழகேசரியில் பண்டிதர்கள,; வித்துவான்கள் பலரும் எழுதிக்கொண்டிருந்தார்கள். இவர்களில் பெரும்பாலோனோர் இலக்கியம் என்பது பழைய சங்கப்பாடல்களும் சிலப்பதிகாரம் கம்பராமாயணம் போன்றவையுமே எனவும் பொதுவாக இலக்கியம் என்பது செய்யுள் வடிவத்தில் மட்டுமே உள்ளவை எனவும் கருதினார்கள். நிகண்டு தொல்காப்பியம் முதலான நூல்களைக்கற்ற பண்டிதர்களும் வித்துவான்களும் மட்டுமே இலக்கியம் செய்யத்தகுதியுடையவர்கள் என்று கருதினார்கள், சிறுகதைகள் நாவல்கள் என்பன பொழுது போக்காக பாமரர்கள் படிக்கும் விடயம் என்று கருதினார்கள்.
ஈழகேசரி தனது இலக்கியத்துறையில் பழைய பண்டிதத் தனத்தில் காலூன்றி நின்றது. புதிய இலக்கியத்துறையில் ஓரளவே அக்கறை காட்டியது இதனால் நவீன இலக்கியத்துக்கான சஞ்சிகை ஒன்றை வெளியிடவேண்டும் என்ற எண்ணம் ஈழகேசரியில் இளம் எழுத்தாளர்களாக எழுதிக்கொண்டிருந்த வரதர், அ. செ. முருகானந்தன், நாவற்குழியூர் நடராசன், பண்டிதர் பஞ்சாட்சர சர்மா போன்றோருக்கு இருந்தது. இவர்களுடன் இன்னும் சிலர் சேர்ந்து தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் என்ற சங்கத்தை உருவாக்கினார்கள்.

இந்தச்சங்கத்தினூடாக மறுமலர்ச்சி என்ற சஞ்சிகையை வெளிக் கொணர்ந்தார்கள். இந்தச்சஞ்சியை வெளியிட பணம் தெவைப்பட்டபோது சங்கத்தின் ஐந்து நண்பர்கள் சேர்ந்து ஒவ்வொருவரும் ஐம்பது ரூபா முதல் போட்டு 250 ரூபா மூலதனத்தில் மறுமலர்ச்சி சஞ்சிகையை அச்சிட்டார்கள். 1946 மார்ச் மாதத்திலிருந்து 1948 ஒக்டோபர் மாதம் வரை 24 இதழ்கள் வெளிவந்தன. இந்த மறுமலர்ச்சி இதழ் ஈழத்தின் முதலாவது நவீன இலக்கியச் சிற்றிதழ் என்ற பெருமையைப் பெற்றுக்கொண்டது. மூலதனப் பற்றாக்குறை காரணமாக மறுமலர்ச்சி சஞ்சிகை தனது பயணத்தை முடித்துக் கொண்டது.

இந்த மறுமலர்ச்சி இதழ்பற்றி பேராசியர் சிவத்தம்பி பின்வருமாறு ஞானம் சஞ்சிகைக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டுள்ளார். ‘பிற்பட்ட காலத்தில் முற்போக்கு இயக்கம் மிகச் செழிப்பாக தொடங்கி வளர்வதற்கு காரணமாக இருந்தது என்னவென்றால் ஏற்கனவே இருந்த ஒரு சூழல். அந்தச் சூழல் மறுமலர்ச்சி இயக்கினால் ஏற்பட்டது. அது ஈழகேசரிக்குள்ளால் வரவில்லை. இந்த மறுமலர்ச்சி சஞ்சிகையின் வருகையும் மறுமலர்ச்சியின் போக்கும்; எனக்கு ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஒரு முக்கிய காலகட்டமாகபடுகிறது”
இங்கே நாம் கவனிக்க வேண்டிய இன்னுமொரு முக்கியமான விடயம் என்னவெனில் தமது சமகாலத்தில் இலக்கியப்பணி புரிந்து கொண்டிருந்த ஈழகேசரி பத்திரிகைமீது கருத்தியல் ரீதியாக அதிருப்தி கொண்ட மறுமலர்ச்சி குழுவினர் தாம் பிரிந்து தமது கருத்தியலுக்கு அமைய சஞ்சிகை ஒன்றை புதிதாகத் தொடங்கி சிலகாலம் நடத்தி பொருளியல் ரீதியாக தம்மால் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் தாம் நடத்திய பத்திரிகையை நிறுத்தி விடுகின்றனர்.

ஆனாலும் ஈழத்து இலக்கிய வரலாற்றில் ஈழகேசரி இலக்கியப் பத்திரிகையின் இலக்கியப்பணியும் மறுமலர்ச்சியின் இலக்கியப்பணியும் இன்றும் விதந்து பேசப்படுகின்றன.

ஈழத்து இலக்கியச் சிற்றிதழ்களின் வரலாற்றினை எடுத்து நோக்கினால் இத்தகைய ஒரு நிலைமை தொடர்வதைக்காண்கிறோம். அதாவது ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு குழுவினர் தோன்றி தமது காலகட்டத்தில் வெளிவந்துகொண்டிருக்கும் சஞ்சிகைகளில் அதிருப்திகொண்டு ‘இவர்களது சஞ்சிகையின் போக்குச் சரியில்லை, இவர்களுக்குச் சஞ்சிகை நடத்தத் தெரியவில்லை” எனக் குறைகண்டு தாம் புதிதாக ஒரு சஞ்சிகையைத் தொடங்கி சிலகாலம் நடத்தி பொருளாதார ரீதியாக தாக்குப்பிடிக்க முடியாமல் நட்டமடைந்து சஞ்சிகையை நிறுத்திவிடும் போக்கினைக் காண்கிறோம். கடந்த 70 வருட சஞ்சிகை வரலாறு பெரும்பாலும் இத்தகையதாகத்தான் இருக்கிறது. ஒவ்வொரு சிறு சஞ்சிகையாளர்களும் தனித்தனியாகப் பிரி;ந்து நின்று நாங்கள் எழுதுவதுதான் இலக்கியம் என்று பேனா யுத்தம் நடத்தும் போக்கினை வரலாற்று ரீதியாகப் பார்க்கமுடிகிறது.

மறுமலர்ச்சி இதழ் தோன்றுவதற்கு மூன்று மாதத்துக்கு முன்னர் பாரதி என்ற சிற்றிதழை கே.கணேஷ் அவர்களும் ராமநாதன் என்பவரும் கூட்டாகச் சேர்ந்து கொழும்பில் வெளியிட்டுள்ளார்கள். இவர்களே இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை உருவாக்கியவர்கள். 1946 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளிவரத் தொடங்கிய பாரதி, எட்டு இதழ்களுடன் தனது பயணத்தை முடித்துக்கொண்டது. ஈழத்தின் முதல் சஞ்சிகை, முற்போக்கு சஞ்சிகை என்ற பெருமைக்குரியது பாரதி. முதற்தலைமுறை முற்போக்கு இலக்கியப் பரம்பரைக்கு வித்திட்டமை, மொழிபெயர்ப்புகளை வெளியிட்டமை, சர்வதேசப் பார்வை முகிழ்க்க வழிகோலியமை போன்றவை இந்த இதழின் குறிப்பிடத்தக்க அம்சங்கள்.

1948இல் பாரதி என்ற பெயரில் இன்னுமொரு சிற்றிதழ் கிழக்கிலங்கையில் மண்டூரில் இருந்து வெளிவந்தது. இந்த இதழ் மட்டக்களப்பு பிரதேச எழுத்தாளர்களுக்கு களம் அமைத்துக் கொடுத்தது. ஆய்வுக்க கட்டுரைகளுக்கு முதன்மை அளித்தது. சமூக அரசியல் நிலைமைகளை வெளிப்படுத்தியமை, மட்டக்களப்பு பிரதேசச் சிறுகதை எழுத்தாளர்கள், கவிஞர்களை உருவாக்கியமை இந்த இதழின் பணியாகக் குறிப்பிடக் கூடியவை. அமரர் பண்டிதர் ம. நாகலிங்கம், அமரர் கு. தட்சணாமூர்த்தி திரு. த. சபாரத்தினம் ஆகியோர் இதன் கூட்டாசிரியர்கள். இச்சஞ்சிகையின் 36 இதழ்கள் வெளிவந்ததாகவும் அறியமுடிகிறது.

1956 இல் ஏற்பட்ட சிங்கள மயமாக்கல் போன்ற அரசியல் மாற்றங்களால் ஈழத்தவர் என்ற உணர்வு மக்கள் மயப்படுத்தப்பட்டது. இக்காலத்திலேதான் ஈழத்து இலக்கியம், ஈழத்து எழுத்தாளர்கள் என்ற அறிவு பூர்வமான பிரக்ஞை திரட்சியாக வெளிப்படத் தொடங்கியது. 1960 இல் இலங்கை வந்திருந்த பகீரதன் என்ற எழுத்தாளர் ஈழத்து இலக்கியம் தமிழக இலக்கியத்தை விட 20 வருடங்கள் பின் தங்கியுள்ளது என்றார.; தொடர்ந்து வந்த காலப்பகுதியில் கலைமகள் ஆசிரியர் கி. வ. ஜகந்நாதன் ஈழத்துப் படைப்புகளில் வரும் மண்வளச் சொற்களுக்கு அடிக்குறிப்பு தேவை என்றார். கி. ராஜநாராயணன் என்ற எழுத்தாளர் ஈழத்து மண்வளச் சொற்களைப் புரிந்து கொள்ள அகராதி தயாரித்தல் நல்லது என்றார். இத்தகைய சூழல்; இலங்கை எழுத்தாளர்கள் மத்தியில் இனி என்றுமே இந்தியாவை நம்பியிருக்கக் கூடாது என்ற வரலாற்றுப் புரட்சிக்கான கோசங்களைத் தோற்றுவித்தது.

1958 ஆம்ஆண்டு ஆடி மாதம் சிற்பி அவர்களால் கலைச்செல்வி மாத இதழ் வெளியிடப்பட்டது. ஈழத்து இலக்கிய உணர்வு மேற்கிழம்பிய காலச் சூழலில் வெளிவந்து கொண்டிருந்த கலைச்செல்வி அந்த உணர்வுக்கு முக்கியத்துவம் கொடுத்துச் செயற்படுத்தும்; செயற்களமாக இயங்கியது.
கலைச்செல்வி வெளிவந்தகாலம் ஈழத்த இலக்கிய உலகில் மரபு, பண்டிதப்போக்கு, இழிசினர் இலக்கியம், யதார்த்தம், மண்வாசனை முதலியவைபற்றி பகிரங்கமாக விவாதிக்கப்பட்டகாலம். .அக்காலகட்டத்தில் இவை சம்பந்தமான தம் சிந்தனையின் அடிப்படையில் எழுத்தாளர்களுட் பலர் இருவேறு அணிகளாகப் பிரிந்திருந்தனர். அணிசாரா எழுத்தாளர்களும் இருந்தனர். தமிழ் இலக்கியத்தில் மரபு என்று ஒன்று இருப்பதை ஏற்றுக்கொண்டு தேவையான சந்தர்ப்பங்களில் அந்த மரபை மீறும் உரிமை எழுத்தாளர்களுக்கு உண்டு என்பது கலைச்செல்வியின் நிலைப்பாடாக இருந்தது. ஈழத்தின் புகழ்மிக்க ஓர் எழுத்தாளர் பட்டாளத்தை உருவாக்கிய பெருமை சிற்றிதழ்வரலாற்றில் கலைச்செல்விக்கே உரியது. ‘ஆக்கபூர்வமான கருத்துக்களைக் கொண்ட கலைநயம்மிக்க எழுத்தாளர்களால் ஈழத்துத் தமிழ் இலக்கியத்துறையை செழுமைப்படத்திவரும் செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், செ. யோகநாதன், யாழ்நங்;கை, ச. வே. பஞ்சாட்சரம், பெனடிக்ற் பாலன், சாந்தன், வே. குமாரசாமி, மயிலன். பொ. சண்முகநாதன், மு. பொன்னம்பலம், தி.ஞானசேகரன், மு.கனகராஜன், பா.சத்தியசீலன், மட்டுவிலான், கவிதா, பாமா இராஜகோபால், கானமயில்நாதன், து. வைத்திலிங்கம், வி.க. ரட்னசபாபதி, இளையவன், செ. கதிர்காமநாதன், முனியப்பதாசன், க.பரராஜசிங்கம், மணியம், முகிலன், பெரி சண்முகநாதன் ஆகியோர் கலைச்செல்விப் பண்ணையில் வளர்ந்தவர்களே” என ஞானத்திற்கு அளித்த நேர்காணல் ஒன்றில் பதிவு செய்துள்ளார் சிற்பி. இவர்கள் ஈழத்தின் நான்காம் தலைமுறை எழுத்தாளர்கள். ‘முற்போக்கு இலக்கியம் உச்சக்கட்டத்தில் இருந்த அறுபதுகளை ஒட்டிய காலப்பகுதியில் எதிரணியில் இருந்தவர்களுக்கு ஓர் ஒதுக்கிடமாக கலைச்செல்வி இருந்தது” என பேராசிரியர் கைலாசபதி குறிப்பிட்டுள்ளார்.

இக்காலப் பகுதியிலே ஈழத்து இலக்கியம் என்ற உணர்வு மார்க்சிய முற்போக்கு எழுத்தாளர்களின் புரட்சிகர முழக்கங்களாகவும் வெளிவரத்தொடங்கின 1961 இல் பாரதி இதழுக்குப் பின்னர் கொழும்பில் இருந்து வெளிவரத்தொடங்கிய மிக முக்கியமான முற்போக்கு இதழ் மரகதம். இதன் ஆசிரியர் சுபைர் இளங்கீரன் ஆவார். இந்த இதழ் ஈழத்து இலக்கியம், தேசிய இலக்கியம் போன்ற கருத்தாக்கங்கள், சிந்தனைகள் போன்றவற்றை கட்டுரைகளினூடாக விவாதத்திற்கு உட்படுத்தியது.

சிரித்திரன் தமிழின் முதல் நகைச்சுவை சித்திர திங்கள் ஏடு. இது கார்ட்டூன் சஞ்சிகையாகவும் விளங்கியது. ஆரம்பத்தில் 1963 இல் கொழும்பில் இருந்து வெளிவந்த இந்த இதழ் பின்னர் 1971 இல் இருந்து யாழ்ப்பாணத்துக்கு மாற்றப்பட்டது.. சி சிவஞானம் என்ற சுந்தர் இதன் ஆசிரியர். சிரித்திரனின் ஆயுட்காலம் 28 ஆண்டுகள். எல்லாமாக 318 இதழ்கள் வெளிவந்தன. பின்னாளில் பிரபலமடைந்த பல எழுத்தாளர்களுக்கான களத்தை அமைத்துக் கொடுத்ததிலும் இந்த இதழ் தனது தனித்துவமான முத்திரையை பதித்திருந்தது.
1960 இல் விவேகி என்ற சிற்றிதழ் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியானது. இந்த இதழுக்கு பிரபல எழுத்தாளர்களான செம்பியன் செல்வன,; செங்கை ஆழியான் ஆகியோர் ஆசிரியர்களாகத் திகழ்ந்தார்கள். முன்னோடிச் சிறுகதைகள், அவை சார்ந்த கட்டுரைகள் பல இந்த இதழில் வெளியாகின.

இளம்பிறை 1960-70களில் கொழும்பிலிருந்து வெளிவந்த இஸ்லாமிய மாத இதழ். இதன் முதலாவது இதழ் 1964 கார்த்திகையில் வெளிவந்தது. இந்த இதழின் நிர்வாக ஆசிரியர் எம். ஏ. ரஹ்மான். இஸ்லாமிய இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்த இந்த இதழ் உள்ளடக்கத்தில் இஸ்லாமியச் சிந்தனைகள், இலக்கிய ஆய்வுகள், சிறுகதை, கவிதை நூல்விமர்சனம் போன்றவற்றைத் தாங்கிவந்தது. 1972 நவம்பரில் இதன் கடைசி இதழ் வெளிவந்தது. பல இதழ்களில் எஸ். பொ. அவர்களின் படைப்புகளைக் காணமுடிகிறது. புனைபெயரிலும் சொந்தப்பெயரிலும் அவர் எழுதியிருக்கிறார்.

மல்லிகை இதழ் 1966 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி வெளியானது. இந்த இதழின் ஆசிரியர் டொமினிக் ஜீவா. இவர் மல்லிகையின் ஆரம்பபம் பற்றி பின்வருமாறு குறிப்படுகிறார். ‘மனைவியினுடைய காப்பை முன்னர் அடைவு வைத்திருந்தேன். அதை மீட்டு விற்றேன். 360 ரூபா கிடைத்தது. தோழர் அரியரத்தினம் 40 ரூபா அன்பளிப்புச் செய்தார். பூபாலசிங்கம் 25 ரூபா தந்துதவினார். அந்தப்பணத்தில் முதல் இதழை வெளிக் கொணர்ந்தேன்”. ஈழத்து நவீன இலக்கிய வரலாற்றில் மல்லிகை சாதனை படைத்தது. ஏறத்தாழ 48 வருடங்கள் மல்லிகை இலக்கிய உலகில் பவனி வந்தது. முதலில் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியான மல்லிகை பின்னர் கொழும்பிலிருந்து வெளிவந்தது. போரச் சூழல் தந்த நெருக்கடிகளால் டொமினிக்ஜீவா கொழும்புக்கு இடம்பெயர நேர்ந்தது. 1996 ஆம் ஆண்டு தை மாதம் யாழ்ப்பாணத்திலிருந்து சகலதையும் இழந்து 360 ரூபா காசுடனும் இரண்டு சோடி உடுப்புடனும் கொழும்பு வந்ததாகப் பதிவு செய்துள்ளார் ஜீவா. மல்லிகை வெளியானதும் அந்த இதழ்களைச் சுமந்து சென்று நேரடியாக வாசகர்களிடம் கொடுத்து அடுத்த இதழ் வெளியிடுவதற்கான பணத்தை அவர் சேகரித்து விடுவார். ‘பிரதிகளைத் தோளில் சுமந்து வீதி வீதியாக விற்கத் தொடங்கினேன் என்பதைவிட திணிக்கத் தொடங்கினேன் என்பதே சரியாகும்” எனக் குறிப்பிடும் ஜீவா, ஒரு முழுநேர இலக்கிய உழைப்பாளியாக இருந்து மல்லிகையை வெளியிட்டார.; மல்லிகை முற்போக்கு எழுத்தாளர்கள், முஸ்லிம் எழுத்தாளர்கள் பலரை இனங்காட்டியதோடு பிரதேச மலர்கள், ஆய்வுக்கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், இலக்கிய சர்ச்சைகள் பலவற்றை வெளியிட்டது. முகப்பு அட்டையில் கலை இலக்கிய வாதிகள் கல்விமான்கள், அறிஞர்கள் முதலானோரின் முகங்களை பதிவு செய்து அவர்கள் பற்றிய விரிவான கட்டுரைகளை வெளியிட்டது. முதுமை காரணமாக ஜீவாவால் மக்களிடம் சென்று அடுத்துவரும் மல்லிகைக்கான பொருள்தேட்டத்தைப் பெறமுடியாத நிலையில் மல்லிகை நின்று விட்டது.
மலர் என்ற சஞ்சிகை கிழக்கிலங்கையில் இருந்து 1970 இல் வெளிவந்தது. அன்புமணி இதன் ஆசிரியர். இவர் மலர்க் குழுவொன்றை உருவாக்கி அதில் அங்கம் வகித்த அங்கத்தவர் ஐவரிடம் தலா 500 ரூபா பெற்று முதலிட்டு மலர் சிற்றிதழை வெளியிட்டார். இந்த இதழ் கிழக்கு மாகாண எழுத்தாளர்களிடையே ஒரு எழுச்சியை ஏற்படுத்திய போதிலும் எட்டு இதழ்களுடன் பொருளாத ரீதியில் நட்டமடைந்து 1971 ஒக்டோபர் இதழுடன் நிறுத்தப்பட்டது. முறையான வினியோகத்திட்டம் இல்லாமையும் வினியோகத்தர்களின் நேர்மையற்ற போக்குமே சிற்றிதழ்கள் மடிந்து போகின்றமைக்கு காரணம் என மலர் ஆசிரியர் பதிவு செய்துள்ளார்.

15-01-1971இல் குமரன் என்ற இதழை செ. கணேசலிங்கன் வெளிக்கொணர்ந்தார். அந்த இதழ் 1983 வரை வெளிவந்தது. ஆரம்பத்தில் சில இதழ்கள் சிறுவர்களுக்காக வெளிக்கொணரப்பட்டன. பின்னர் சகல வயதினருக்குமான சஞ்சிகையாக வளர்ச்சி பெற்றது முக்கியமாக மார்க்சியக் கோட்பாடுகளை முன்னெடுக்கும் சஞ்சிகையாக அது பரிணமத்தது. சீனச்சார்புடைய மார்க்சியக் கோட்பாடகளில் குமரன் ஆர்வங்காட்டியது. சாதியத்துக்கு எதிரான பல ஆக்கங்களை இது வெளியிட்டது. கலை, இலக்கியம், அரசியல், திரைப்படம்,  நாடகம் முதலான துறைகளில் விஞ்ஞான பூர்வமான ஆக்கங்களை வெளியிட்ட குமரன் 1976 ஜூன் மாதத்தில் 56 ஆவது இதழுடன் தடைப்பட்டு மீண்டும் 1982 நவமபரில் தொடங்கி 1983 ஜூன் மாதத்தில் தடைப்பட்டு 1989இல் மீண்டும் வெளிவரத் தொடங்கி 1990 ஜூன் மாத இதழுடன் நின்று விட்டது. எல்லாமாக 77 இதழ்கள் வெளியாகின.
பொழும்பில் இருந்து பூரணி என்ற இதழ் 1972 ஆடி- புரட்டாதி இதழாக வெளியானது 8 இதழ்களே வெளிவந்த போதிலும் தரமான இலக்கிய இதழாக இது வெளிவந்தது. இதன் இணை ஆசிரியர்களாக என். கே. மகாலிங்கம் க. சட்டநாதன் ஆகியோர் விளங்கினர். பூரணி மு. தளையசிங்கத்தின் முக்கிய சிந்தனையான பிரபஞ்ச யதார்த்த வாதத்தை முன்வைத்தது.. பிற்பட்ட காலத்தில் பூரணி இலக்கியக் குழுவினரிடையேயும் கருத்து வேறுபாடுகள் தோன்றி இதழின் மறைவுக்குக்காரணமாகியது.

1974 சித்திரை மாதம் தாயகம் என்ற இதழ் தேசிய கலை இலக்கியப் பேரவையின் வெளியீடாக வரத் தொடங்கியது. நான்கு வெளியீடுகளின் பின் தடைப்பட்டு 1980 ஆம் ஆண்டு மீண்டும் வரத் தொடங்கியது இந்த இதழின் ஆசிரியர் திரு க. தணிகாசலம். ‘ கலை இலக்கியத் துறையில் தேசிய தேவைகளை – உணர்வுகளைப் பிரதிபலிக்கும் படைப்புகளையும் பலமான அணியையும் உருவாக்க வேண்டிய அவசியத் தேவையை உணர்ந்தே தாயகம் தோன்றியிருக்கிறது. முற்போக்கு விஞ்ஞானக் கண்ணோட்டத்துடன் சரித்திர மாறுதல்களைப் பிரதிபலித்தும் அதற்காக வேண்டியும் நிற்கிற தேசிய சக்திகளின் ஆயுதமாகவும் தாயகம் விளங்கும்” என்ற பிரகடனத்துடன் இவ்விதழ் ஆரம்பிக்கப்பட்டது. 43 வருடகால நீண்ட வரலாற்றைக் கொண்ட இந்த இதழ் அவ்வப்போது மலர்ந்து இதுவரை 70 இதழ்கள் வெளியாகியுள்ளன.
1975இல் அமைக்கப்பட்ட அலை இலக்கிய வட்டம் காலாண்டு இதழாக அலை என்ற சஞ்சிகையை வெளியிட்டது. அதன் ஆசிரியர்குழுவில் அ. யேசுராசா, மு. புஷ்பராஜன், குப்பிளான் ஐ.சண்முகன், இ. ஜீவகாருண்யன் ஆகியோர் இருந்தனர். ஆனாலும் அலையின் உள்ளடக்கம் தொடர்பாக கருத்து முரண்பாடுகள் தோன்றி பின்னாளில் அலை ஆசிரியர்களாக யேசுராசாவும் புஷ்பராஜனும் மட்டுமே இணை ஆசிரியர்களாக இருந்தனர். 1975க்குப் பின்னர் தமிழ்த் தேசியச் சிந்தனைகள் தமிழ்ச்சூழலில் முக்கியத்துவம் பெறத் தொடங்கின. இது இலக்கியச் செயற்பாட்டிலும் தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியது. இக்காலகட்டத்தில் வெளிவந்த அலை சஞ்சிகை தமிழ்த் தேசியப்பிரச்சினைமீது கவனம் செலுத்தியது. அது முற்போக்கு எழுத்தாளர்கள் தேசிய இனப்பிரச்சினைமீது கவனம் செலுத்தாமையையும் சுட்டிக் காட்டியதோடு முற்போக்கு எழுத்தாளர்களின் படைப்புகள் மீதும் விவாதங்களை முன்வைத்தது. இது தொடர்பாக அதன் ஆசிரியர் யேசுராசா பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். ‘ஸ்தாபித பலம் பெற்றிருந்த வறட்டிலக்கிய வாதிகள், தேசிய இன ஒடுக்கு முறைகளைக்கண்டும் மௌனம் சாதித்த போலி முற்போக்குகள் போன்றோருக்கு எதிரான ‘கலைக்குரலாக” அதிருப்தி யாளர்களின் வெளிப்பாடாகவே அலை வெளிவரத்தொடங்கியது”. இந்த இதழ் பல புதிய விடயங்களையும் சிற்றிதழ்களின் பேசு பொருளாக்கியது. நவீன சினிமா, ஓவியங்கள், கலைத்தன்மையினுடனான பத்தி எழுத்துக்கள் போன்றவை அலையில் இடம்பெற்றன. 1990 வைகாசிவரை வெளிந்த அலை 35 இதழ்களுடன் தனது பயணத்தை முடித்துக் கொண்டது.

புதிசு என்ற இதழ் 80 களில் யாழ்ப்பாணம் ஏழாலையில் இருந்து வெளிவரத்தொடங்கியது. இதன் நிர்வாக ஆசிரியர் நா. சபேசன் ஆசிரியர்குழுவில் இளவாலை விஜேந்திரன், பாலசூரியன், அளவெட்டி அ. ரவி, ஆகியோர் அங்கம் வகித்தனர். இலக்கியம் சார்ந்த இதழாக வெளிவந்த இச்சஞ்சிகையில் பல சிறந்த விமர்சன ரீதியான கட்டுரைகள் வெளிவந்தன 1985 நவம்பர் மாதம்வரை 10 இதழ்கள் வெளிவந்தன. எண்பதுகளில் புதிய தiமுறை எழுத்தாளர்கள் தோன்ற இச்சஞ்சிகை வழிவகுத்தது.

மலையக மக்களின் முன்னேற்றத்தில் அக்கறை கொண்ட தீர்த்தக்கரை இலக்கிய வட்டம் 1980 ஜூனில் தீர்த்தக்கரை என்ற இதழை வெளியிடத் தொடங்கியது. எல். வசந்தகுமாரை பிரதம ஆசிரியராகவும் எஸ். நோபட், எம். தியாகராம், எல்.ஜோதிக்குமார் ஆகியோரை ஆசிரியர் குழுவிலும் கொண்டு வெளிவந்த இந்த இதழ் ஐந்து இதழ்களுடன் 1982 அக்டோபர் மாதத்தில் தனது பயணத்தை முடித்துக் கொண்டது.

தீர்த்தக்கரையைச் சார்ந்த சில இளம் எழுத்தாளர்கள் தீர்த்தக்கரையின் தொடர்ச்சியாக 1992 இல் நந்தலாலா என்னும் சஞ்சிகையை வெளிக்கொணரத் தெடங்கினார்கள். நீண்ட இடைவெளிகளில் அவ்வப்போது இந்த சஞ்சிகை வெளிவருகிறது இதன் கடைசி இதழ் 2014 பெப்ரவரியில் வெளிவந்தது
வெளிச்சம் இதழ் தமிழீழ விடுதலைப்புலிகளின் கலை பண்பாட்டுக் கழகத்தால் வெளியீடு செய்யப்பட்டது. 90 களிலிருந்து இந்த இதழ் வெளியானது. ஈழப்போர் முடிந்ததோடு 27 இதழ்களுடன் இந்த இதழின் வருகையும் நின்றுவிட்டது. தரமான சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள், இவ்விதழில் வெளிவந்துள்ளன. அத்தோடு விடுதலைப்போராட்டம், போராளிகளின் நினைவுப் பகிர்வுகள், என்பவற்றையும் தாங்கி இவ்விதழ் வெளிவந்தது. படைப்புகளின் கருப்பொருள் பெரும்பாலும் போருடன் தொடர்பு கொண்டதாக அமைந்தது. இந்த இதழ் தமிழ்மக்களிடையே விடுதலை எழுச்சியை ஏற்படுத்தியது.

பெண் என்ற இதழ் மட்டக்களப்பு சூரியா பெண்கள் நிலையத்தினரின் வெளியீடு. 1991ஆம்ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த இதழ் முதலில் காலாண்டு இதழாக வெளிவந்தது. தற்போது அரையாண்டு இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. இதழின் ஆசிரியை விஜயலட்சுமி சேகர். பெண்ணியம் பேசும் தனித்துவ இதழாக வெளிவரும் இந்த இதழில் கவிதைகள், உளவியல் கட்டுரைகள், சமூகவியல் கட்டுரைகள், அரசியல், கல்வி சமூகப் பொருளாதாரத்தில் பெண்களின் நிலை பற்றிய ஆய்வுகள், சமகாலத்தில் பெண் சமுதாயம் எதிர்நோக்கும் பிரச்ச்சினைகள் போன்றவை உள்ளடக்கமாக அமைகின்றன.
1994 பங்குனி மாதத்தில் இருந்து நிவேதினி என்ற பெண்களுக்கான இதழ் கொழும்பில் இருந்து வெளியாகத் தொடங்கியது. இந்த இதழின் ஆசிரியர் செல்வி திருச்சந்திரன். பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன வெளியீடாக இந்த இதழ் வெளியானது. பெண்ணியம், பெண்கள் முன்னேற்றம், பாலியல் தொல்லைகள், பெண்ணுக்கு இழைக்கப்படும் துன்பங்கள் போன்ற விடயங்கள் இந்த இதழில் வெளியாகின. பெண்ணியம் சார் கவிதைகளும் இந்த இதழை அலங்கரித்தன.
மூன்றாவதுமனிதன் இதழ் கொழும்பில் இருந்து 1996 வைகாசி-ஆனியில் வெளிவரத்தொடங்கியது. இதன் ஆசிரியர் எம். பௌசர். 2007 ஜனவரிவரை 19 இதழ்கள் வெளிவந்துள்ளன. நேர்காணல், விமர்சனம், கவிதை சிறுகதை, அரசியல் என பல தரமான விடயங்களைத்தாங்கி இவ்விதழ் வெளியானது. ஈழத்து இலக்கியத்தின் திசைகளை செப்பனிட்டது. வடிவநேர்த்தியுடன் இந்த இதழ்கள் வெளிவந்தன.

2006 ஆவணியில்; அக்கரைப் பற்றிலிருந்து பெருவெளி என்ற இதழ் வெளிவரத்தொடங்கியது. 2011 தை மாதம்வரை இந்த இதழ் வெளிவந்தது. எம். ஐ.எம்.ரஸப், மஜித், அப்துல் ரசாக், ரியாஸ் குரானா, மிஷாத், ஐ. எஸ். காலித், றபியூஸ், எஸ். எம். ரியாஸிடீன் ஆகியோர் இதன் செயற்பாட்டுக்குழுவினர். ஏழு இதழ்களே இக்காலப்பகுதியில் வெளிவந்தபோதும் தரமான இலக்கியம,; அரசியல் சார்ந்த இதழாக இது வெளிவந்தது. பின்நவீனத்துவம் சார்ந்த பல படைப்புகள் இதில் வெளியாகின. புதிய தலைமுறை கிழக்கிலங்கை முஸ்லிம் எழுத்தாளர்களை இது இனங்காட்டியது.

2007 ஆம் ஆண்டு ஆவணி மாதத்திலிருந்து இருமாத இதழாக ஜீவநதி இதழ் ஆரம்பிக்கப்பட்டது. 2010 தை மாதத்திலிருந்து மாத இதழாக வெளிவருகிறது. ஜீவநதியின் பிரதம ஆசிரியர் கலாமணி பரணீதரன். ஈழத்து சிற்றிதழ் வரலாற்றில் 100 இதழ்களைத் தாண்டிய இதழ்களில் ஒன்று என்ற பெருமை ஜீவநதிக்கு உண்டு. சிற்றிதழ்களுக்குரிய உள்ளடக்கங்களுடன் வெளிவரும் ஜீவநதி பல சிறப்பிதழ்களை வெளியிட்டுள்ளது. உளவியல் சிறப்பிதழ், சிறுகதைச்சிறப்பிதழ் பெண்ணியச்சிறப்பிதழ், கவிதைச் சிறப்பிதழ்கள் இளம் எழுத்தாளர்களுக்கான சிறப்பிதழ், அவுஸ்திரேலியச் ;சிறப்பிதழ், கனடாச்சிறப்பிதழ் மலையகச்சிறப்பிதழ், திருகோணமலைச் சிறப்பிதழ் என்பவை குறிப்பிடத்தக்கன. ஜீவநதியின் 100 ஆவது இதழ் 575 பக்கங்களில் ஈழத்து பெண் எழுத்தாளர் சிறப்பிதழாக வெளிவந்து சாதனை படைத்துள்ளது.

2000 ஆம் ஆண்டிலிருந்து வெளிவரும் ஞானம் மாதம் தவறாது வெளிவந்து 200 இதழ்களைத் தாண்டியுள்ளது. ஈழத்துச் சிற்றிதழ் வரலாற்றில் அச்சு இதழாகவும் இணைய இதழாகவும் வெளிவரும் ஒரே இதழ் ஞானம் மட்டும்தான். இதன் 150 ஆவது இதழ் 600 பக்கங்களில் ஈழத்து போர் இலக்கியச் சிறப்பிதழாக வெளிவந்தது. 175 ஆவது இதழ் ஈழத்துப் புலம்பெயர் இலக்கியச் சிறப்பிதழாக 976 பக்கங்களில் வெளிவந்தது. போர் இலக்கியமும் புலம்பெயர் இலக்கியமும் ஈழத்தமிழர்கள் தமிழ் இலக்கியத்துக்கு வழங்கிய புதிய இலக்கிய வகைமைகள் என்பதை ஞானம் இவ்விரு தொகுப்புகள் மூலம் வெளிக்காட்டியது. ஈழத்தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டையும் உலக நிலையினான அதன் ஊடாட்டத்தையும் இயக்கி நிற்கும் முக்கிய தொடர்புசாதனமாக ஞானம் இதழ் இயங்கிவருகிறது. ஞானத்தின் 200 ஆவது இதழ் 60 இலக்கிய ஆழுமைகளின் நேர்காணல்கள் தொகுப்பாக 1000 பக்கங்களில் வெளிவந்துள்ளது. ஈழத்து இலக்கியச் செல்நெறியை கருத்தியல் ரீதியாகவும் படைப்புகள் மூலமும் திசைவழிப்படுத்திய இலக்கிய ஆழுமைகள் பலரின் நேர்காணல்கள் இத் தொகுப்பில் அடங்கியுள்ளன. அந்த வகையில்; ஈழத்து நவீன இலக்கியத்துக்கான அடையாள முத்திரையாக இத்தொகுப்பு திகழ்கிறது ஞானம் அதனது உள்ளடக்கத்தில் பல புதிய விடயங்களையும் சிற்றிதழ்களின் பேசு பொருளாக்கியுள்ளது. முந்தையோர் ஈழத்தவரே என்ற பகுதி, ஈழமும் தமிழும் என்ற ஆய்வு நிலைக்குறிப்புகள் மற்றும் பயண இலக்கியத் தொடர்கள் என்பன இவற்றுள் அடங்கும்.

ஈழத்து சிற்றிறதழ்களின் வரலாற்றை எடுத்து நோக்கினால் சிலரது ஆர்வத்தின் நிமித்தம் கூட்டுமுயற்சியாகத்தான் பல சிற்றிதழ்கள் தோன்றியிருக்கின்றன. அவை குழு மோதல்களால் அற்ப ஆயுளில் மறைந்தன.
இதனைவிட, சிற்றிதழ்கள் அற்ப ஆயுளில் மறைந்து போவற்கு பொருளாதாரப் பற்றாக்குறையே முதற்காரணியாக இருந்துள்ளது. அடுத்த நிலையில் முறையான வினியோகத்திட்டம் இல்லாமையும் பெரும்பாலான வினியோகத்தர்களின் நேர்மையற்ற போக்குமே காரணிகளாக அமைந்துள்ளன.
தனிமனித முயற்சியினால் வெளிவந்த மல்லிகை, சிரித்திரன், ஜீவநதி, ஞானம் போன்ற சிற்றிதழ்களே நீண்டகாலம் நிலைத்திருக்கும் வல்லமை பெற்றிருந்தன என்பதும் கவனிக்கக் கூடியதாக உள்ளது.

1980களின் பின்னர் போர்க்காலத்தில் வெளிவந்துகொண்டிருந்த சிற்றிதழ்கள் ஊடக சுதந்திரமற்ற நிலையில் வெளிப்படையாக எதனையும் எழுதமுடியாத நிலையில் இருந்தன என்பதும் அந்த நிலைமை சிற்றிதழ்களின் தனித்துவத்தில் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தது என்பதும்; குறிப்பிடத்தக்கது.
சில இதழ்கள் ஈழத்து இலக்கியத்தின் வளர்ச்சிப்போக்கில் சில கால கட்டத்தின் இலக்கியபப் போக்கினை கூர்மைப்படுத்தி நுண்மைப் படுத்தியுள்ளன.
ஈழத்தின் முதலாவது இதழான மறுமலர்ச்சி ஈழத்து நவீன இலக்கியத்தின கருக்கட்டல் காலத்தை கூர்மைப்படுத்தி நுண்மைப்படுத்தியது.
கலைச்செல்வி இதழ் ஈழத்து நவீன இலக்கியத்தின் தனித்துவத்தை முதன்முதலில் கூர்மைப்படுத்தி நுண்மைப்படுத்தியது.

மல்லிகை இதழ் மார்க்சியக் கோட்பாட்டை ஈழத்து நவீன இலக்கியத்தில் அறிமுகப்படுத்தி கருத்தியல் ரீதியல் கூர்மைப்படுத்தி நுண்மைப்படுத்தியது.
போர்க்காலத்தில் தோன்றிய ஞானம் இதழ் ஈழத்து நவீன இலக்கியத்தில் தமிழ்த் தேசிய உணர்வை கூர்மைப்படுத்தி நுண்மைப்படுத்தியது.
தொகுத்து நோக்கும்போது ஈழத்துச் சிற்றிதழ்கள் எல்லாமே அவை ஓரிரு இதழ்கள் வந்த போதிலும் தத்தம் நிலையில் ஈழத்து நவீன இலக்கிய வளர்ச்சிப்போக்கிற்கு சிறப்பான பணி ஆற்றிவந்துள்ளமையைக் காண முடிகிறது

 
Leave a comment

Posted by on 04/05/2017 in Uncategorized